Welcome To Literary Bookshelf
Sangam literature comprises some of the oldest extant Tamil literature, and deals with love, traditions, war, governance, trade and life.!

கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம்
மூன்றாவது - ஆரணிய காண்டம் (முதற் பகுதி) , படலங்கள் 1-6

rAmAyaNam
of kampar /canto 3 (AraNiya kAnTam), part 1
(paTalams 1-6, verses 2605- 3163)
In tamil script, unicode/utf-8 format



    Acknowledgements:
    Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
    providing us with a romanized transliterated version of this work and for permissions
    to publish the equivalent Tamil script version in Unicode encoding
    We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
    Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

    © Project Madurai, 1998-2012.
    to preparation
    of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
    are


    http://www.projectmadurai.org/


கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - மூன்றாவது - ஆரணிய காண்டம்
(முதற் பகுதி) /படலங்கள் 1-6


3.0 கடவுள் வாழ்த்து 2605

3.1 . விராதன் வதைப் படலம் 2606- 2677.

3.2 . சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் 2678 - 2721

3.3 . அகத்தியப் படலம் 2722- 2780

3.4 . சடாயு காண் படலம் 2781- 2828

3.5 . சூர்ப்பணகைப் படலம் 2829 -2971

3.6 . கரன்வதைப் படலம் 2972 -3163


3.0 . கடவுள்வாழ்த்து (2605)




2605 - பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா ,
ஓதி ஓதி உணருந்தொறும் உணர்ச்சி உதவும் ,
வேதம் வேதியர் விரிஞ்சன்முதலோர் தெரிகிலா ,
ஆதி நாதர் அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ .


3.1 . விராதன் வதைப் படலம் (2606-2677).




2606 - இராமன் முதலியோர் அத்திரி முனிவரின் உறையுளை அணுகுதல்

முத்து இருத்திய திருத்தி அன மொய்ந் நகையொடும்
சித்திரக் குனி சிலைக் குமரர் சென்று அணுகினார் ,
அத்திரிப் பெயர் அருந்தவன் இருந்த அமைதிப்
பத்திரப் பழுமரப் பொழில் துவன்று பழுவம் . - 3.1.1



2607 - அத்திரிமுனிவன் இராமன் முதலியோரை எதிர்கொள்ளல்

திக்கு உறும் செறி பரம் தெரிய நின்ற திரள் பொன்
கைக் குறுங்கண் மலை போல் குமரர் , காமம் முதல் ஆம்
முக்குறும்பு அற எறிந்த வினை வால் முனிவனைப்
புக்கு இறைஞ்சினர் ; அருந்தவனும் வந்து புகலும் . - 3.1.2



2608 - அத்திரி முனிவனுடைய உவகையுரை
''குமரர் ! நீர் இவண் அடைந்து உதவு கொள்கை எளிதோ ?
அமரர் யாவரொடும் எவ் உலகும் வந்த அளவோ ?
எமரின் யார் தவம் முயன்றனர்கள் ? '' என்று உருகினன் ,
தமர் எலாம் வர உவந்தனைய தன்மை முனிவன் . - 3.1.3



2609 - இராமன் முதலியோர் தண்டகவனத்திற் புகுதல்

அன்ன மா முனியொடு அன்று அவண் உறைந்து , அவன் அரும்
பன்னி , கற்பின் அனசூயை பணியால் , அணிகலன் ,
துன்னு தூசினொடு , சந்து , இவை சுமந்த சனகன்
பொன்னொடு ஏகி , அவர் தண்டகவனம் புகுதலும் . - 3.1.4



2610 - விராதன் இராமலக்குவரை எதிர்தல் (2610-2623)
எட்டொடு எட்டு மத மா கரி , இரட்டி அரிமா ,
வட்ட வெம் கண் வரை ஆளி பதினாறு , வலியின்
கிட்டவிட்டு இடை கிடந்தன , செறிந்த ஒருகைத்
தொட்ட முத்தலை அயில் தொழில் மிடல் கழுவொடே . - 3.1.5



2611 - செஞ்சுடர்ச் செறி மயிர்ச் சுருள் செறிந்த செனியன் ,
நஞ்சு வெற்பு உருவு பெற்று இடை நடந்தது என , மா
மஞ்சு சுற்றிய வயங்கு கிரி வாத விசையில்
பஞ்சு பட்டது படப் படியின்மேல் முடுகியே . - 3.1.6



2612 - புண் துளங்கியன கண்கள் கனல் பொங்க , மழை சூழ்
விண் துளங்கிட , விலங்கல்கள் குலுங்க , வெயிலும்
கண்டு உளம் கதி குறைந்திட , நெடும் கடல் சுலாம்
மண் துளங்க , வய அந்தகன் மனம் தளரவே . - 3.1.7



2613 - புக்க வாள் அரி முழங்கு செவியின் பொறி உறப்
பக்கம் மின்னும் மணி மேரு சிகரம் குழை படச்
செக்கர் வான் மழை நிகர்க்க , எதிர் உற்ற செரு அத்து
உக்க வீரர் உதிரத்தின் ஒளிர் செச்சையினொடே . - 3.1.8



2614 - படையொடு ஆடவர்கள் , பாய் புரவி , மால் களிறு , தேர் ,
நடைய வாள் அரிகள் , கோள் உழுவை , நண்ணிய எலாம்
அடைய வாரி , அரவால் அசை அனேக வித வன்
தொடையல் மாலை துயல்வந்து உலவு தோள் பொலியவே . - 3.1.9



2615 - குன்று துன்றின எனக் குமுறு கோப மத மா
ஒன்றொடு ஒன்று இடை அடுக்கின தடக்கை உதவப்
பின்று கின்ற பிலனின் பெரிய வாயின் ஒருபால்
மென்று தின்று விளியாது விரியும் பசியொடே . - 3.1.10



2616 - பன்ன காதிபர் பணாமணி பறித்து அவை பகுத்து ,
அன்ன வானவர் விமானம் இடையிட்டு , அரவிடைத்
துன்னு கோளினொடு தாரகை தொடுத்த துழனிச்
சன்னவீரம் இடை மின்னு தடமார்பினொடும் ஏ . - 3.1.11



2617 - பம்பு செக்கர் எரி ஒக்கும் மயிர் பக்கம் எரியக்
கும்பம் உற்ற உயர் நெற்றியின் விசித்து , ஒளி குலா
உம்பருக்கு அரசன் மால் கரியின் ஓடை , எயிறு உண்
கிம்புரிப் பெரிய தோள் வளையொடும் கிளரவே . - 3.1.12



2618 - தங்கு திண் கரிய காளிமை தழைந்து தவழப்
பொங்கு வெம் கொடுமை என்பது புழுங்கி எழ , மா
மங்கு பாதகம் விடம் கனல் வயங்கி நிமிரக்
கங்குல் பூசி வருகின்ற கலிகாலம் எனவே . - 3.1.13



2619 - செற்ற வாள் உழுவை வன் செறி அதள் திருகுறச்
சுற்றி , வாரண உரித் தொகுதி நீவி தொடரக்
கொற்றம் மேவு திசை யானையின் மணிக்குலம் உடைக்
கற்றை மாசுணம் உரித்த உரி கச்சு ஒளிரவே . - 3.1.14



2620 - செங்கண் அங்க அரவின் பொரு இல் செம்மணி விராய் ,
வெங்கண் அங்க வலயங்களும் விலங்க , விரவிச்
சங்கு அணங்கிய சலஞ்சலம் அலம்பு தவளக்
கங்கணங்களும் இலங்கிய கரம் , பிறழவே . - 3.1.15



2621 - முந்து வெள்ளி மலை பொன்னின் மலையோடும் முரணப்
பந்தம் உந்து கழல் பாடுபட ஊடு படர்வோன் ,
வந்து மண்ணின் இடையோன் எனினும் , வானின் இடையோர்
சிந்தையுள்ளும் விழியுள்ளும் உளன் என்ற திறலோன் . - 3.1.16



2622 - 'பூதம் அத்தனையும் ஓர் வடிவு கொண்ட புதிது ! 'என்று
ஓத ஒத்த உருவத்தன் , உரும் ஒத்த குரலன் ,
காதலித்து அயன் அளித்த கடை இட்ட கணிதப்
பாத லக்கம் மதவெற்பு அவை படைத்த வலியான் . - 3.1.17



2623 - சார வந்து , அயல் விலங்கினன் ; மரங்கள் தரையில்
பேர , வன் கிரி பிளந்து உக , வளர்ந்து , இகல் பெறா
வீர வெம் சிலையினோர் எதிர் விராதன் எனும் அக்
கோர வெம் கண் உருமேறு அன கொடுந்தொழிலினான் . - 3.1.18



2624 - விராதன் சீதாபிராட்டியைக் கைக்கொண்டு செல்லுதல்

''நில்லும் , நில்லும் '' என வந்து , நிணம் உண்ட நெடு வெண்
பல்லும் வல் எயிறும் மின்னு பகு வாய் முழை திறந்து ,
அல்லி புல்லும் மலர் அன்னம் அனையாளை ஒரு கைச்
சொல்லும் எல்லையின் முகந்து , உயர் விசும்பு தொடர . - 3.1.19



2625 - விராதனை நோக்கி இராமலக்குவர் கூறுதல்

காளை மைந்தர் அது கண்டு , கதம் வந்து கதுவத்
தோளில் வெம் சிலை இடம் கொடு தொடர்ந்து , சுடர் வாய்
வாளி தங்கிய வலங்கையவர் , வஞ்சனை ,''அடா !
மீள்தி ; எங்கு அகல்தி ? '' என்பது விளம்ப , அவனும் . - 3.1.20



2626 - இராமலக்குவரை நோக்கி விராதன் கூறுதல்

''ஆதி நான்முகன் வரத்தின் எனது ஆவி அகலேன் ;
ஏதி யாவதுவும் இன்றி உலகு யாவும் இகலில் ,
சாதியாதனவும் இல்லை ; உயிர் தந்தனென் , அடா !
போதிர் , மாது இவளை உந்தி , இனிது '' என்று புகல . - 3.1.21



2627 - இராமன் நாணொலி எழுப்பல் (2627-2628)

வீரனும் சிறிது மெல் முறுவல் வெண் நிலவு உகப்
''போர் அறிந்திலன் இவன் ; தனது பொற்பும் , முரணும்
தீரும் , எஞ்சி '' என , நெஞ்சின் உறு சிந்தை தெரியப்
பார வெம் சிலையின் நாண் ஒலி படைத்த பொழுதே . - 3.1.22



2628 - இலை கொள் வேல் அடல் இராமன் , எழு மேக உருவன் ,
சிலை கொள் நாண் நெடிய கோதை ஒலியேறு , திரைநீர்
மலைகள் நீடு தலம் , நாகர் பிலம் , வானம் முதல் ஆம்
உலகம் ஏழும் உருமேறு என ஒலித்து உரறவே . - 3.1.23



2629 - சீதாபிராட்டியை விட்டு இராமனை நோக்கி விராதன் வெகுளல்

வஞ்சகக் கொடிய பூசை நெடு வாயில் மறுகும்
பஞ்சரக் கிளி எனக் கதறு பாவையை விடா ,
நெஞ்சு உளுக்கினன் எனச் சிறிது நின்று நினையா ,
அஞ்சனக் கிரி அனான் எதிர் அரக்கன் அழலா . - 3.1.24



2630 - விராதன் இராமன்மேற் சூலப்படையை எறிதல்

பேய் முகப் பிணி அறப் பகைஞர் பெட்பின் உதிரம்
தோய் முகத்தது , கனத்தது , சுடர்க் குதிரையின்
வாய் முகத்திடை நிமிர்ந்து வட வேலை பருகும்
தீ முகத் திரிசிகைப் படை திரித்து எறியவே . - 3.1.25



2631 - இராமனும் விராதனும் பொருதல் (2631-2633)
திசையும் , வானவரும் , நின்ற திசை மாவும் , உலகும்
அசையும் ஆலம் என , அன்ன அயில் மின்னி வரலும் ,
வசை இல் மேரு முதல் மால் வரைகள் ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன் ஒரு வாளி விடவே . - 3.1.26



2632 - 'இற்றது இன்றொடு இவ் அரக்கர் குலம் 'என்று , பகலே
வெற்ற விண்ணினிடை நின்று நெடுமீன் விழுவ போல் ,
சுற்று அமைந்த சுடர் எஃகம் அது இரண்டு துணியா
அற்ற கண்டம் அவை ஆசையினது அந்தம் உறவே . - 3.1.27



2633 - சூர் ஒடுங்கு அயில் துணிந்து இறுதல் கண்டு , சிறிதும்
போர் ஒடுங்கிலன் , மறம்கொடு புழுங்கி , நிருதன் ,
பார் ஒடுங்குறு கரங்கொடு பருப்பதம் எலாம்
வேரொடும் கடிது எடுத்து எதிர்விசைத்து விடலும் . - 3.1.28



2634 - வட்டம் இட்ட கிரி அற்று உக , வயங்கு வயிரக்
கட்டு அமைந்த கதிர்வாளி எதிரே கடவலான் ,
விட்ட விட்ட மலை மீள , அவன் மெய்யின் , விசையால்
பட்ட பட்ட இடம் எங்கும் உடல் ஊறு படலும் . - 3.1.29



2635 - ஓம் அ ராமரை , ஒருங்கும் உணர்வோர் உணர்வுறும்
நாமர் ஆம் அவரை , நல் அறம் நிறுத்த நணுகித்
தாம் அரா அணை துறந்து தரை நின்றவரை , ஓர்
மா மராமரம் இறுத்து , அதுகொடு எற்ற வரலும் . - 3.1.30



2636 - ஏறு சேவகன் இரண்டினொடு இரண்டு கணையால்
வேறு வேறு துணி செய்து , அது விழுத்தி , விசையால்
மாறு மாறு நிமிர் தோளிடையும் மார்பினிடையும்
ஆறும் ஆறும் அயில் வெம் கணை அழுத்த , அவனும் . - 3.1.31



2637 - மொய்த்த முள் தனது உடல் தலை முளைத்த , முடுகிக்
கைத்தவற்றின் நிமிரக் கடிது கன்றி விசிறும்
எய்த்த மெய்ப் பெரிய கேழல் என எங்கும் விசையின்
தைத்த அக்கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே . - 3.1.32



2638 - எரியின் வார் கணை இராமன் விட , எங்கும் நிலையாது
உருவி ஓட , மறம் ஓடுதல் செயா உணர்வினான் ,
அருவி பாயும் வரை போல் குருதி ஆறு பெருகிச்
சொரிய , வேக வலி கெட்டு , உணர்வு சோர்வுறுதலும் . - 3.1.33



2639 - ''மெய் வரத்தினன் மிடல் படை விடப் படுகிலன்
செய்யும் மற்றும் இகல் '' என்று , சின வாள் உருவி ,''வன்
கை துணித்தும் '' என முந்து கடுகிப் படர் புயத்து
எய்வில் மல் பொருவு தோள் இருவர் ஏற , நிருதன் . - 3.1.34



2640 - உண்டு எழுந்த உணர்வு அவ் வயின் உணர்ந்து முடுகித்
தண்டு எழுந்து அனைய தோள் கொடு சுமந்து தழுவிப்
பண்டு எழும் தனது வன்கதி பதிற்றின் முடுகிக்
கொண்டு எழுந்தனன் , விழுந்து அழி கொழுங் குருதியான் . - 3.1.35



2641 - முந்து வான் முகடு உறக் கடிது முட்டி முடுகிச்
சிந்து சோரியொடு சாரிகை திரிந்தனன் அரோ ,
வந்து மேருவினை நாள் தொறும் வலம் செய்து உழல்வோர்
இந்து சூரியரை ஒத்து இருவரும் பொலியவே . - 3.1.36



2642 - விராதன் இராம லக்குவருடன் விண்மிசைச் செல்லல்

சுவண வண்ணனொடு கண்ணன் மிசைகொள்ள , இசை தோய்
அவண விண்ணிடை எழுந்து , படர்கின்றவன் , அறம்
சிவண , அன்ன சிறைமுன் அவரொடு ஏகு செலவத்து
உவணன் என்னும் நெடும் மன்னவனும் ஒத்தனன் அரோ . - 3.1.37



2643 - சீதாபிராட்டி வருந்துதல்

மா தயா உடைய தன் கணவன் வஞ்சன் வினையின்
போதலோடும் அலமந்தனள் , புலர்ந்து பொடியில்
கோதையோடும் ஒசி கொம்பு என விழுந்தனள் குலச்
சீதை , சேவல் பிடியுண்ட சிறை அன்னம் அனையாள் . - 3.1.38



2644 - சீதாபிராட்டி விராதனை நோக்கிக் கூறுதல்

பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை பெறாள்
மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து தொடர்வாள் ,
'அன்னையே அனைய அன்பின் அறவோர்கள் தமை விட்டு
என்னையே நுகர்தி 'என்றனள் எழுந்து விழுவாள் . - 3.1.39



2645 - இராமனிடம் இலக்குவன் கூறுதல்

அழுது வாய் குழறி ஆர் உயிர் அழுங்கி உலையும்
எழுது பாவை அனையாள் நிலை உணர்ந்து , இளையவன்
தொழுது ,'தேவி துயர்கூர விளையாடல் தொழிலோ !
பழுது ; வாழி 'என , ஊழிமுதல்வன் பகர்வுறும் . - 3.1.40



2646 - இராமன் கழலால் உந்த விராதன் விழுதல்

'ஏக நின்ற நெறி எல்லை கடிது ஏறி , இனிதின்
போகல் நன்று என நினைந்தனன் ; இவன் , பொரு இலோய் !
சாகல் இன்று பொருளன்று 'என நகும் தகைமையோன் ,
வேக வெம் கழலின் உந்தலும் , விராதன் விழவே . - 3.1.41



2647 - தோள்களைத் துணித்து விராதனை மண்ணிடைப் புதைத்தல் (2647-2649)

தோள் இரண்டும் வடி வாள்கொடு துணித்து விசையால்
மீளி மொய்ம்பினர் குதித்தலும் , வெகுண்டு , புருவத்
தேள் இரண்டும் நெரியச் சினவு செம் கண் அரவக்
கோள் , இரண்டு சுடரும் தொடர்வதில் குறுகலும் . - 3.1.42



2648 - புண் இடைப் பொழி உயிர்ப்புனல் பொலிந்து வரவும்
விண் இடைப் படர்தல் விட்டு எழு விகற்பம் நினையா ,
எண் உடைக் குரிசில் , எண்ணி , இளையோய் !'இவனை இம்
மண் இடைக் கடிது பொத்துதல் வழக்கு 'எனலுமே . - 3.1.43



2649 - மத நல் யானை அனையான் நிலம் வகிர்ந்த குழிவாய்
நதம் உலாவும் நளிநீர் வயின் அழுந்த நவை தீர்
அதவம் ஆய் நறு நெய் உண்டு உலகில் அன்பர் கருதிற்று
உதவு சேவடியினால் அமலன் உந்துதலுமே . - 3.1.44



2650 - விராதன் சாபம் நீங்கி விண்மிசைத் தோன்றல்
பட்ட தன்மையும் உணர்ந்து , படர் சாபம் இட முன்
கட்ட வன் பிறவி தந்த கடை ஆன உடல்தான்
விட்டு , விண்ணிடை விளங்கினன் ; விரிஞ்சன் என ஓர்
முட்டை தந்து , அதனில் வந்த முதல் முன்னவனினே . - 3.1.45



2651 - விராதன் இராமனைத் துதித்தல் (2651-2665)
பொறியின் ஒன்றி அயல் சென்று திரி புந்தி உணரா
நெறியின் ஒன்றி நிலைநின்ற நினைவு உண்டு அதனினும் ,
பிறிவு இல் அன்பு நனி பண்டு உடைய பெற்றிதனினும் ,
அறிவு வந்து உதவ , நம்பனை அறிந்து பகர்வான் . - 3.1.46



2652 - வேதங்கள் அறைகின்ற உலகு எங்கும் விரிந்தன உன்
பாதங்கள் இவை என்னில் , படிவங்கள் எப்படியோ !
ஓதம் கொள் கடல் அன்றி , ஒன்றினோடு ஒன்று ஒவ்வாப்
பூதங்கள் தொறும் உறைந்தால் அவை உன்னைப் பொறுக்குமோ . - 3.1.47



2653 - கடுத்த கராம் கதுவ , நிமிர்
        கை எடுத்து மெய் கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று
        ஒலி கொள்ள , உறு துயரால்
'அடுத்த பெருந் தனி மூலத்து
        அரும்பரமே ! பரமே ! 'என்று
எடுத்து , ஒரு வாரணம் அழைப்ப ,
        நீயோ அன்று'ஏன் ? 'என்றாய் . - 3.1.48



2654 - புறம் காண அகம் காணப் பொது முகத்தின் அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன் ! இயம்புதியால் ;
அறம் காத்தற்கு உனக்கு ஒருவர் ஆரும் ஒரு துணை இன்றிக்
கறங்கு ஆகும் எனத் திரிய நீயேயோ கடவாய் ! தான் . - 3.1.49



2655 - துறப்பதே தொழில் ஆகத் தோன்றினோர் தோன்றியக்கால் ,
மறப்பரோ தம்மை ? அது அன்றாகி , மற்றவர்போல்
பிறப்பரோ ? எவர்க்கும் தாம் பெற்ற பதம் பெறல் அரிதோ ?
இறப்பதே பிறப்பதே எனும் விளையாட்டு இனிது உகந்தோய் ! - 3.1.50



2656 - பனி நின்ற பெரும் பிறவிக் கடல் கடக்கும் படி பற்றி
நனி நின்ற சமயத்தோர் எல்லாரும்'நன்று 'என்னத்
தனி நின்ற தத்துவத்தின் தகை மூர்த்தி நீ ஆகில்
இனி நின்ற முதல் தேவர் என்கொண்டு என்செய்வாரே ? - 3.1.51



2657 - ஓயாத மலர் அயனே முதல் ஆக உளர் ஆகி ,
மாயாத வானவர்க்கும் மற்று ஒழிந்த மன் உயிர்க்கும்
நீ ஆதி முதல் தாதை , நெறி முறையால் ஈன்று எடுத்த
தாய் ஆவார் யாவரே ? தருமத்தின் தனி மூர்த்தி ! - 3.1.52



2658 - நீ ஆதி பரம்பரமும் ; நின்னவே உலகங்கள் ;
ஆயாத சமயமும் நின் அடியவே ; அயல் இல்லை ;
தீயாரின் ஒளித்தியால் , வெளி நின்றால் தீங்கு உண்டோ ?
வீயாத பெரு மாய விளையாட்டும் வேண்டுமோ ? - 3.1.53



2659 - தாய் தன்னை அறியாத கன்று இல்லை ; தன் கன்றை
ஆயும் அறியும் ; உலகின் தாயாகின் , ஐய !
நீ அறிதி எப்பொருளும் ; அவை உன்னை நிலை அறியா ;
மாயை இது என்கொலோ ? வாராதே வரவல்லாய் ! - 3.1.54



2660 - 'பன்னல் ஆம் 'என்று உலகம் , பலபலவும் நினையும் ஆல் ;
உன் அலால் பெருந்தெய்வம் உயர்ந்துளோர் ஒழுக்கன்றே ;
அன்னவூர்தியை முதலாம் அந்தணர்மாட்டு அருந்தெய்வம்
நின் அலால் இல்லாமை நெறி நின்றார் நினையாரோ . - 3.1.55



2661 - பொரு அரிய சமயங்கள் புகல்கின்ற புத்தேளிர் ,
இரு வினையும் உடையார்போல் அருந்தவம் நின்று இயற்றுவார் ;
திரு உறையும் மணிமார்ப ! நினக்கு என்னை செயற்பால ?
ஒரு வினையும் இல்லார்போல் உறங்குதியால் உறங்காதாய் ! - 3.1.56



2662 - அரவு ஆகிச் சுமத்தியால் , அயில் எயிற்றின் ஏந்துதியால் ,
ஒரு வாயின் விழுங்குதியால் , ஓர் அடியால் ஒளித்தியால் ,
திரு ஆன நிலமகளை ; இ•து அறிந்தால் சீறாளோ ?
மரு ஆரும் துழாய் அலங்கல் மணிமார்பின் வைகுவாள் . - 3.1.57



2663 - மெய்யைத்தான் சிறிது உணர்ந்து நீ விதித்த மன்னுயிர்கள்
உய்யத்தான் ஆகாதோ ? உனக்கு என்ன குறை உண்டோ ?
வையத்தார் வானத்தார் மழு ஆளிக்கு அன்று அளித்த
ஐயத்தால் சிறிது ஐயம் தவிர்ந்தாரும் உளர் . ஐயா ! - 3.1.58



2664 - அன்னம் ஆய் அருமறைகள் அறைந்தாய் நீ , அவை உன்னை
முன்னம் ஆர் ஓதுவித்தார் ? எல்லாரும் முடிந்தாரோ ?
பின்னம் ஆய் ஒன்றாதல் , பிரிந்தேயோ ? பிரியாதோ ?
என்ன மா மாயம் இவை ஏனமாய் மண் இடந்தாய் ! - 3.1.59



2665 - ஒப்பு இறையும் பெறல் அரிய
        ஒருவா ! முன் உவந்து உறையும்
அப்பு உறையுள் துறந்து , அடியேன்
        அருந்தவத்தால் அணுகுதலால் ,
இப் பிறவிக் கடல் கடந்தேன் ;
        இனிப் பிறவேன் ; இரு வினையும்
துப்பு உறழும் நீர்த்த சுடர்த்
        திருவடியால் துடைத்தாய் நீ . - 3.1.60



2666 - 'உன் வரலாறு கூறுக 'என இராமன் விராதனை வினாவுதல்
இற்று எலாம் இயம்பினான்
நிற்றலோடும்'நீ இவ் ஆறு
உற்ற ஆறு உணர்த்து 'எனா
வெற்றியான் விளம்பினான் . - 3.1.61



2667 - விராதன் தன்சரிதம் கூறுதல் (2667-2675)
கள்ளம் மாய , வாழ்வு எலாம்
விள்ள , ஞானம் வீசு தாள்
வள்ளல் ! வாழி ! கேள் ! எனா
உள்ள ஆறு உணர்த்தினான் . - 3.1.62



2668 - இம்பர் உற்று இது எய்தினேன் ,
வெம்பு விற்கை வீர ! பேர்
தும்புரு ; தனதன் சூழ்
அம்பரத்து உளேன் அரோ . - 3.1.63



2669 - ஆடு அரம்பை நீடு அரங்கு
ஊடு நின்று பாடலால் ,
ஊடு உவந்து கூட , இக்
கூடு வந்து கூடினேன் . - 3.1.64



2670 - கரக்க வந்த காமநோய்
துரக்க , வந்த தோமினால் ,
இரக்கம் இன்றி ஏவினான் ;
அரக்கன் மைந்தன் ஆயினேன் . - 3.1.65



2671 - அன்ன யக்கன் , ஆதியாய் !
இன்னல் தீரும் ஈகையான்
நின்ன தாளின் நீங்கும் என்று
உன்னும் எற்கு உணர்த்தினான் . - 3.1.66



2672 - வலம் செய்து இந்த வான் எலாம்
நலிஞ்சு தின்னும் நாம வேல்
பொலிஞ்ச வென்றி பூணும் அக்
கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன் . - 3.1.67



2673 - அன்று மூலம் ! ஆதியா
இன்று காறும் ஏழையேன் ,
நன்று தீது நாடலேன் ,
நின்று தீய நேடினேன் . - 3.1.68



2674 - தூண்ட நின்ற தொன்மைதான்
வேண்ட நின்ற வேத நூல்
பூண்ட நின் பொலம் கொள் தாள்
தீண்ட இன்று தேறினேன் . - 3.1.69



2675 - திறத்தின் வந்த தீது எலாம்
அறுத்த உன்னை ஆதனேன்
ஒறுத்த தன்மை ஊழியாய் !
பொறுத்தி என்று போயினான் . - 3.1.70



2676 - இராமன் முதலியோர் அப்பாற் செல்லுதல்
'தேவு காதல் சீரியோன்
ஆவி போயினான் 'எனாப்
பூ உலாவு பூவையோடு
ஏ வலாரும் ஏகினார் . - 3.1.71



2677 - இராமன் முதலியோர் ஒரு சோலையில் தங்குதல்
கை கொள் கால வேலினார் ,
மெய் கொள் வேத மெய்யர் வாழ்
மொய் கொள் சோலை முன்னினார் ,
வைகல் தானும் வைகினார் . - 3.1.72
----------------------

3.2 . சரபங்கன் பிறப்பு நீங்கு படலம் (2678 - 2721)




2678 - இராமன் முதலியோர் சரபங்கமுனிவர் ஆச்சிரமத்தை அடைதல்
குரவம் குவி கோங்கு அலர் கொம்பினொடும்
இரவு அங்கு அணுகும்பொழுது எய்தினர் ஆல் ;
சரவங்கன் இருந்து தவம் கருதும்
மரவம் கிளர் கோங்கு ஒளிர் வாச வனம் . - 3.2.1



2679 - இந்திரன் வருதல்
செவ்வேலவர் சென்றனர் , சேரல் உறும்
அவ்வேலையின் எய்தினன் ஆயிரம் ஆம்
தவ்வாது இரவும் பொலி தாமரையின்
வெவ்வேறு அலர் கண்ணினன் விண்ணவர் கோன் . - 3.2.2



2680 - இந்திரனை வருணித்தல் (2680-2690)
அன்னச் செலவின் படிமேல் அயல் சூழ் ,
பொன்னின் பொலிவார் , அணி பூண் ஒளிமேல் ,
மின்னின் செறி கற்றை விரிந்தன போல் ,
பின்னிச் சுடரும் பிறழ் பேர் ஒளியான் . - 3.2.3



2681 - வானில் பொலி தோகையர் கண் மலர் வான்
கானில் படர் கண் களி வண்டொடு , தார்
மேனித் திரு நாரதன் வீணை இசைத்
தேனில் படியும் செவி வண்டு உடையான் . - 3.2.4



2682 - அனையின் துறை ஐம்பதொடு ஐம்பது நூல்
வினையின் தொகை வேள்வி நிரப்பிய மா
முனைவன் , முது தேவரின் மூவர் அலார்
புனையும் முடி துன்று பொலம் கழலான் . - 3.2.5



2683 - செம் மா மலராள் நிகர் தேவியொடும்
மும் மா மத வெண் நிறம் முன் உயர் தாள்
வெம் மா மிசையான் , விரி வெள்ளி விளங்கு
அம் மா மலை அண்ணலையே அனையான் . - 3.2.6



2684 - தான் நின்று , அயல் நின்று ஒளிர் தண் கதிரோன் ,
'யான் நின்றது என் ? 'என்று ஒளி எஞ்சிட , மா
வான் நின்ற பெரும் பதம் வந்து உருவாய்
மேல் நின்றென நின்று ஒளிர் வெண் குடையான் . - 3.2.7



2685 - திசை கட்டிய மால் கரி தெட்ட மதப்
பசை கட்டின கிட்டின பற்பல போர் ,
விசை கட்டு அழி தானவர் விட்டு அகல் பேர்
இசை கட்டிய ஒத்து , இவர் சாமரையான் . - 3.2.8



2686 - தீர்வு இல் திரி செம் கதிர் தங்குவது ஓர்
ஊர் உற்றது எனப் பொலி ஒள் முடியான் ;
போர் வித்தகன் நேமி பொறுத்தவன் மா
மார்வில் திருவின் பொலி மாலையினான் . - 3.2.9



2687 - செற்றிக் கதிரின் பொலி செம் மணியின்
கற்றைச் சுடர் விட்டு எரி கஞ்சுகியான்
வெற்றித்திருவின் குளிர் வெண் நகை போல்
சுற்றிக் கிளரும் சுடர் தோள்வளையான் . - 3.2.10



2688 - பல் ஆயிரம் மா மணி பாடம் உறும்
தொல் ஆர் அணி கால் சுடரின் தொகை தாம்
எல்லாம் உடனாய் எழலால் , ஒரு தன்
வில்லால் ஒளிர் மேகம் எனப் பொலிவான் . - 3.2.11



2689 - மானா உலகந்தனில் மன்றல் பொரும்
தேன் நாறு நலம் செறி தொங்கலினான்
மீனோடு கடுத்து உயர் வென்றிய ஆம்
வான் நாடியர் கண் எனும் வாள் உடையான் . - 3.2.12



2690 - வெல்வான் நசையால் விசையால் விடும்நாள் ,
எல் வான் சுடர் மாலை இராவணன்மேல் ,
நெல்வாலும் அறாத நிறம் பிறழா
வல்வாய் மடியா வயிரப்படையான் . - 3.2.13



2691 - முனிவர் இந்திரனை வினவுதல்
நின்றான் ; எதிர் நின்ற நெடுந்தவனும்
சென்றான் எதிர்கொண்டு சிறப்பு அமையா ,
'என் தான் இவண் எய்திய ஆறு ? '' எனலும் ,
பொன்றாத பொலம் கழலோன் புகலும் . - 3.2.14



2692 - இந்திரன் மறுமொழி (2692-2694)
'நின்னால் இயல் நீதி நெடும் தவம் இன்று
என்னானும் விளம்பரிது 'என்று உணர்வான்
அந் நான்முகன் நின்னை அழைத்தனன் ஆல் ,
பொன் ஆர் சடை மாதவ ! போதுதி ஆல் . - 3.2.15



2693 - எந்தாய் ! உலகு யாவையும் எவ் உயிரும்
தந்தான் உறையும் நெறி தந்தனன் ஆல்
நந்தாத பெரும் தவ நாடு அது நீ
வந்தாய் எனின் நின் எதிரே வருவான் . - 3.2.16



2694 - எல்லா உலகிற்கும் உயர்ந்தமை , யான்
சொல்லா வகை நீ உணர் தொன்மையை ; ஆல்
நல்லாளுடனே நட நீ எனலும்
அல்லேன் என வால் அறிவான் அறைவான் . - 3.2.17



2695 - சரபங்கரது மறுமொழி (2695-2697)
சொல் பொங்கு பெரும் புகழோய் ! தொழில் மாய்
சிற்பங்களின் வீவன சேர்குவென் ஓ ?
அற்பம் கருதேன் என் அருந்தவமோ
கற்பம் பல சென்றது காணுதி ஆல் ! - 3.2.18



2696 - சொற்றும் தரம் அன்று இது ; சூழ் கழலாய் !
பெற்றும் பெறுகில்லது ஒர் பெற்றியதே ;
மற்று என் பல சொல் : இவண் வந்து தவம்
முற்றும் பகல் தானும் முடித்தனன் ஆல் . - 3.2.19



2697 - சிறு காலை இலா , நிலையோ திரியா ,
குறுகா , நெடுகா , குணம் வேறுபடா
உறு கால் கிளர் பூதம் எலாம் உகினும் ,
மறுகா நெறி எய்துவென் ; வானுடையாய் ! - 3.2.20



2698 - இராமன் முதலியோர் சரபங்காச்சிரமத்தினுள் நிகழ்ந்துள்ளதை ஆராய்தல்
என்று இன்ன விளம்பிடும் எல்லையின்வாய் ,
வன் திண் சிலை வீரரும் வந்து அணுகா ,
ஒன்றும் கிளர் ஓதையினால் உணர்வார் ,
நின்று என்னை கொல் இன்னது ? எனா நினைவார் . - 3.2.21



2699 - சரபங்கரிடம் இந்திரன் வந்திருத்தலை உய்த்துணர்தல்
கொம்பு ஒத்தன நால் ஒளிர் கோள் வயிரக்
கம்பக் கரி நின்றது கண்டனம் ஆல் ,
'இம்பர்த்தலை மாதவர்பால் இவன் ஆம்
உம்பர்க்கு அரசு எய்தினன் 'என்று உணரா . - 3.2.22



2700 - இராமன் தனித்துச் சோலையுட் புகுதல்
மானே அனையாளொடு மைந்தனை அப்
பூ நேர் பொழிலின் புறனே நிறுவா ,
ஆன் ஏறு என ஆள் அரி ஏறு இது எனத்
தானே அவ் அகன் பொழில் சாருதலும் . - 3.2.23



2701 - இந்திரன் இராமனைக் காண்டல்
கண் தாம் அவை ஆயிரமும் கதுவக்
கண் தாமரை போல் கரு ஞாயிறு எனக்
கண்டான் இமையோர் இறை காசினியின்
கண் தான் அரும் நான்மறையின் கனியை . - 3.2.24



2702 - இந்திரன் இராமனைத் தொழுதல்
காணா மனம் நொந்து கவன்றனன் ஆல் ,
ஆள் நாதனை அந்தணர் நாயகனை
நாள் நாளும் வணங்கிய நல் முடியால் ,
தூண் ஆகிய தோள் கொடு அவன் தொழுவான் . - 3.2.25



2703 - இராமன் பெருமை பற்றிய கவிக்கூற்று

துவசம் ஆர் தொல் அமருள் துன்னாரைச் செற்றும்
        சுருதிப் பெருங் கடலின் சொல் பொருள் கற்பித்தும்
திவசம் ஆம் நல் அறத்தின் செம் நெறியின் உய்த்தும்
        திரு அளித்தும் வீடு அளித்தும் சிங்காமைத் தங்கள்
கவசமாய் ஆருயிராய்க் கண்ணாய் மெய்த் தவமாய்க்
        கடை இலா ஞானமாய்க் காப்பானைக் காணா
அவசமாய்ச் சிந்தை அழிந்து அயலே நின்றான்
        அறியாதான் போல அறிந்த எலாம் சொல்வான் . - 3.2.26



2704 - இந்திரன் இராமனைத் துதித்தல் (2704-2708)

தோய்ந்தும் பொருள் அனைத்தும் தோயாது நின்ற சுடரே !
        தொடக்கு அறுத்தோர் சுற்றமே ! பற்றி ,
நீந்த அரிய நெடுங் கருணைக்கு எல்லாம் நிலயமே !
        வேதநெறி முறையின் நேடி
ஆய்ந்த உணர்வின் உணர்வே ! பகையால் அலைப்புண்டு
        அடியேம் அடிபோற்ற , அந்நாள்
ஈந்த வரம் உதவ எய்தினையே ! எந்தாய் ! இரு
        நிலத்தவோ நின் இணை அடித் தாமரை ? தாம் . - 3.2.27



2705 - மேவாதவர் இல்லை , மேவினரும் இல்லை ,
        வெளியோடு இருள் இல்லை , மேல் கீழும் இல்லை ,
மூவாமை இல்லை , மூத்தமையும் இல்லை , முதல் இடையோடு
        ஈறு இல்லை , முன்னொடு பின் இல்லை ,
தேவா இங்கு இவ்வோ நின் தொன்று நிலை என்றால் ,
        சிலை ஏந்தி வந்து எம்மைச் சேவடிகள் நோவக்
காவாது ஒழியின் பழி பெரிதோ அன்றேல் கருங்
        கடலில் கண்வளராய் ! கைம்மாறும் உண்டோ ? - 3.2.28



2706 - நாழி நவை தீர் உலகு எலாம் ஆக , நளினத்து
        நீ தந்த நான்முகனார் தாமே ,
ஊழி பல பலவும் நின்று அளந்தால் , ஒன்றும்
        உலவாப் பெருங்குணத்த உத்தமனே ! மேல் நாள் ,
தாழி தரை ஆகத் தண் தயிர் நீர் ஆகத் தடவரையே
        மத்து ஆகத் தாமரைக்கை நோவ ,
ஆழி கடைந்து அமுதம் எங்களுக்கே ஈந்தாய் ;
        அவுணர்கள்தாம் நின் அடிமை அல்லாமை உண்டோ ? - 3.2.29



2707 - 'ஒன்று ஆகி மூலத்து உருவம் பல ஆகி
        உணர்வும் உயிரும் பிறிது ஆகி ஊழி
சென்று ஆசு அறும் காலத்து அந்நிலையது
        ஆகித் திறத்து உலகம் தான் ஆகிச் செஞ்செவே நின்ற
நன்று ஆய ஞானத் தனிக்கொழுந்தே ! நங்கள்
        நவை தீர்க்கும் நாயகமே நல்வினையே நோக்கி
நின்றாரைக் காத்தி அயலோரைக் காய்தி நிலை
        இல்லாத் தீவினையும் நீ தந்தது அன்றே ? ' - 3.2.30



2708 - 'வல்லை வரம்பு இல்லாத மாயவினைதன்னால்
        மயங்கினரோடு எய்தி , மதிமயங்கி , மேல் நாள் ,
அல்லை இறையவன் நீ ஆதி எனப் பேதுற்று அலமருவேம் ,
        முன்னை அறப்பயன் உண்டாக ,
'எல்லை வலயங்கள் நின்னுழை 'என்று , அந்நாள் ,
        எரியோனைத் தீண்டி எழுவர் என நின்ற
தொல்லை முதல் முனிவர் சூளுற்றபோதே தொகை
        நின்ற ஐயம் துடைத்திலையோ ? எந்தாய் ! ' - 3.2.31



2709 - இந்திரன் தன்னுலகு சென்றமை
இன்னன பல நினைந்து ஏத்தினன் இயம்பாத்
'துன்னுதல் இடை உளது 'என நனி துணிவான் ,
தன் நிகர் முனிவனைத் 'தர விடை 'என்னாப்
பொன் ஒளிர் நெடு முடிப் புரந்தரன் போனான் . - 3.2.32



2710 - முனிவன் இராமனை எதிர்சென்றழைத்துச் சிறப்பித்தல்
போனவன் அகநிலை புலமையின் உணர்வான் ,
வானவர் தலைவனை வர எதிர்கொண்டான் ;
ஆனவன் அடி தொழ , அருள்வர அழுதான்
தான் உடை இடவகை தழுவினன் நுழைவான் . - 3.2.33



2711 - இராமன் முதலிய மூவரும் சரபங்கன் ஆச்சிரமத்தையடைதல்
'ஏழையும் இளவலும் வருக 'என ,'இனிதா
வாழிய 'அவரொடும் வந்தனன் மகிழ்வால்
ஊழியின் முதல் , முனி உறையுளை அணுக
ஆழியில் அறிதுயிலவன் என மகிழ்வான் . - 3.2.34



2712 - முனிவன் அறவுரை பகர்தல்
அவ்வயின் அழகனும் வைகினன் , அறிஞன்
செவ்விய அறவுரை செவிவயின் நுகரா
நவ்வியின் விழியவளொடும் , நனி இருளைக்
கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவில் . - 3.2.35



2713 - கதிரவன் தோற்றம்
விலகிடும் நிழலினன் வெயில் விரி அயில் வாள்
இலகிடு சுடரவன் இசையன திசை தோய்
அலகிடல் அரிய தன் அவிர் கரநிரையால்
உலகிடு நிறை இருள் உறையினை உரிவான் . - 3.2.36



2714 - முனிவன் எரிபுகுதற்குத் துணிதல்
ஆயிடை அறிஞனும் அவன் எதிர் அழுவத்
தீயிடை நுழைவது ஒர் தெளிவினை உடையான்
நீ விடை தருகென நிறுவினன் நெறியால்
காய் எரி வரன்முறை கடிதினில் இடுவான் . - 3.2.37



2715 - முனிவன் , தீப்புகுதற்கு இராமனிடம் விடை கேட்டல்
வரி சிலை உழவனும் மறை உழவனை'நீ
புரி தொழில் எனை ? அது புகலுதி 'எனலும் ,
'திருமகள் தலைவ ! செய் திருவினை உற யான்
எரி புக நினைகுவென் அருள்'கென இறைவன் . - 3.2.38



2716 - இராமன் வினாவும் முனிவன் விடையும் (2716-2718)
'யான் வரும் அமைதியின் இது செயல் எவனோ ?
மான் வரு தனி உரி மார்பினை ! 'எனலும் ,
மீன் வரு கொடியவன் விறல் அடு மறவோன் ,
ஊன் வரும் உவகையின் உரை நனி புரிவான் . - 3.2.39



2717 - ஆயிரம் முகம் உள தவம் அயர்குவென் யான்
நீ இவண் வருதிகொல் எனும் நிலை உடையேன் ;
போயின இரு வினை புகலுறு விதியால்
மேயினை ; இனி ஒரு வினை இலை விறலோய் ! - 3.2.40



2718 - இந்திரன் அருளினன் இறுதிசெய் பகலா
வந்தனன் ,'மருவுதி மலர் அயன் உலகம்
தந்தனன் 'என ,'அது சாரலென் 'உரவோய் !
அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன் . - 3.2.41



2719 - சரபங்கன் தீயிடைப்புக்கு வீடுபெறுதல் (2719-2720)
'ஆதலின் இது பெற அருள் 'என உரையாக்
காதலி அவளொடு கதழ் எரி முழுகிப்
போதலை மருவினன் ; ஒரு நெறி புகலா
வேதமும் அறிவரு மிகு பொருள் உணர்வோன் . - 3.2.42



2720 - தேவரும் , முனிவரும் , உறுவது தெரிவோர்
யாவரும் , நறு விரை மலர் அயன் முதலோர்
ஏவரும் , அறிவினில் இரு வினை ஒருவிப்
போவது கருதும் அவ் அரு நெறி புக்கான் . - 3.2.43



2721 - சரபங்கனது பேறுபற்றிய கவிக்கூற்று
'அண்டமும் அகிலமும் அறிவரும் நெறியால்
உண்டவன் ஒரு பெயர் உணர்குநர் உறு பேறு
எண் தவ நெடிது 'எனின் , இறுதியில் அவனைக்
கண்டவர் உறு பொருள் கருதுவது எளிதோ ? - 3.2.44
------------------------------

3.3 . அகத்தியப் படலம் (2722- 2780)




2722 - இராமன் முதலியோர் சரபங்கன் தவக்குடிலினின்று போதல் (2722-2723)
அனையவன் இறுதியின் அமைவு நோக்கினர் ,
இனியவர் , இன்னலின் இரங்கும் நெஞ்சினர் ,
குனிவரு திண்சிலைக் குமரர் , கொம்பொடும்
புனிதனது உறையுள் நின்று அரிதில் போயினார் . - 3.3.1



2723 - மலைகளும் , மரங்களும் , மணிக் கற் பாறையும்
அலை புனல் நதிகளும் , அருவிச் சாரலும் ,
இலை செறி பழுவமும் , இனிய சூழலும் ,
நிலை மிகு தடங்களும் , இனிது நீங்கினார் . - 3.3.2



2724 - தண்டக வனத்து முனிவர் இராமனைக் காண்டல்
பண்டைய அயன் தரு பாலகில்லரும் ,
முண்டரும் , மோனரும் , முதலினோர்கள் , அத்
தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம்
கண்டனர் இராமனைக் களிக்கும் சிந்தையார் . - 3.3.3



2725 - தண்டகவனத்து முனிவர்நிலை (2725-2729)
கனை வரு கடுஞ்சினத்து அரக்கர் காய , ஓர்
வினை பிறிது இன்மையின் , வெதும்புகின்றனர் ;
அனல் வரு கானகத்து , அமுது அளாவிய
புனல் வர , உயிர் வரும் உலவை போல்கின்றார் . - 3.3.4



2726 - ஆய் வரும் பெருவலி அரக்கர் நாமமே
வாய் வெரீஇ அலமரும் மறுக்கம் நீங்கினார் ;
தீ வரு வனத்திடை இட்டுத் தீர்ந்தது ஓர்
தாய்வர , நோக்கிய கன்றின் தன்மையார் . - 3.3.5



2727 - கரக்க (அ)ருங் கடுந் தொழில் அரக்கர் காய்தலின்
பொரற்கு இடம் இன்மையின் புழுங்கிச் சோருநர் ,
அரக்கர் என் கடலிடை ஆழ்கின்றார் , ஒரு
மரக்கலம் பெற்றென மறுக்கம் நீங்கினார் . - 3.3.6



2728 - தெரிஞ்சு உற நோக்கினர் ; செய்த செய்தவம்
அருஞ் சிறப்பு உதவ , நல் அறிவு கைதர ,
விரிஞ்சு உறப் பற்றிய பிறவி வெம் துயர்ப்
பெருஞ்சிறை வீடு பெற்றனைய பெற்றியார் . - 3.3.7



2729 - வேண்டின வேண்டினர்க்கு அளிக்கும் மெய்த்தவம்
பூண்டுளர் ஆயினும் , பொறையின் ஆற்றலால் ,
மூண்டு எழு வெகுளியை முதலின் நீக்கினார் ;
ஆண்டு உறை அரக்கரால் அலைப்புண்டார் அரோ . - 3.3.8



2730 - இராமன் தொழ , முனிவர் வாழ்த்தல்
எழுந்தனர் , எய்தினர் , இருண்ட மேகத்தின்
கொழுந்தென நின்ற அக் குரிசில் வீரனைப்
பொழிந்து எழு காதலின் பொருந்தினார் ; அவன்
தொழுந்தொறும் தொழுந்தொறும் , ஆசி சொல்லுவார் . - 3.3.9



2731 - இனியது ஓர் சாலை கொண்டு ஏகி ,'இவ்வயின்
நனி உறை 'என்று அவற்கு அமைய நல்கித் தாம்
தனி இடம் சார்ந்தனர் தங்கி , மாதவர் ,
அனைவரும் எய்தினர் அல்லல் சொல்லுவான் . - 3.3.10



2732 - முனிவர் இராமனுக்குத் தம் அல்லலைச் சொல்லுதல் (2732-2737)
எய்திய முனிவரை இறைஞ்சி , ஏத்து உவந்து ,
ஐயனும் இருந்தனன் ;'அருள் என் ? 'என்றலும் ,
'வையகம் காவலன் மைந்த ! வந்தது ஓர்
வெய்ய வெங் கொடுந்தொழில் விளைவு கேள் 'எனா . - 3.3.11



2733 - 'இரக்கம் என்று ஒரு பொருள் இலாத நெஞ்சினர் ,
அரக்கர் என்று உளர் சிலர் , அறத்தின் நீங்கினார் ,
நெருக்கவும் , யாம் படர் நெறி அலா நெறி
துரக்கவும் , அருந்தவத் துறையுள் நீங்கினேம் . ' - 3.3.12



2734 - ''வல்லியம் பல திரி வனத்து மான் என ,
எல்லியும் பகலும் நொந்து இரங்கி ஆற்றலெம் ;
சொல்லிய அற நெறித் துறையும் நீங்கினெம் ;
வில் இயல் மொய்ம்பினாய் ! வீடு காண்குமோ ? '' - 3.3.13



2735 - 'மா தவத்து ஒழுகலெம் ; மறைகள் யாவையும்
ஓதலெம் ; ஓதுவார்க்கு உதவல் ஆற்றலெம் ;
மூது எரி வளர்க்கிலெம் ; முறையின் நீங்கினேம் ;
ஆதலின் அந்தணரேயும் ஆகிலேம் ! ' - 3.3.14



2736 - 'இந்திரன் எனின் , அவன் அரக்கர் ஏயின
சிந்தையில் , சென்னியில் , கொள்ளும் செய்கையான் ;
எந்தை ! மற்று யார் உளர் இடுக்கண் நீக்குவார் ?
வந்தனை , யாம் செய்த தவத்தின் மாட்சியால் '. - 3.3.15



2737 - 'உருள் உடை நேமியால் உலகை ஓம்பிய
பொருள் உடை மன்னவன் புதல்வ ! போக்கிலா
இருள் உடை வைகலேம் ; இரவி தோன்றினாய் !
அருள் உடை வீர ! நின் அபயம் யாம் 'என்றார் . - 3.3.16



2738 - இராமன் அபயம் அளித்தல் (2738-2746)
'புகல் புகுந்திலரேல் , புறத்து அண்டத்தின்
அகல்வரேனும் , என் அம்பொடு வீழ்வரால் ;
தகவு இல் துன்பம் தவிருதிர் நீர் 'எனப்
பகலவன் குல மைந்தன் பணிக்கின்றான் . - 3.3.17



2739 - 'வேந்தன் வீயவும் , யாய் துயர் மேவவும் ,
ஏந்தல் எம்பி வருந்தவும் , என் நகர்
மாந்தர் வன் துயர் கூரவும் , யான் வனம்
போந்தது , என்னுடைப் புண்ணியத்தால் 'என்றான் . - 3.3.18



2740 - 'அறம் தவா நெறி அந்தணர் தன்மையை
மறந்த புல்லர் வலி தொலையேன் எனின் ,
இறந்து போகினும் நன்று ; இது அல்லது ,
பிறந்து யான் பெறும் பேறு என்பது யாவதோ ? ' - 3.3.19



2741 - 'நிவந்த வேதியர் நீவிரும் , தீயவர்
கவந்த பந்தக் களி நடம் கண்டிட ,
அமைந்த வில்லும் அருங்கணைத் தூணியும்
சுமந்த தோளும் பொறைத் துயர் தீருமால் . - 3.3.20



2742 - 'ஆவுக்கு ஆயினும் , அந்தணர்க்கு ஆயினும் ,
யாவர்க்கு ஆயினும் , எளியவர்க்கு ஆயினும் ,
சாவப் பெற்றவரே தகை வான் உறை
தேவர்க்கும் தொழும் தேவர்கள் ஆகுவார் '. - 3.3.21



2743 - 'சூர் அறுத்தவனும் , சுடர் நேமியும் ,
ஊர் அறுத்த ஒருவனும் , ஓம்பினும் ,
ஆர் அறத்தினொடு அன்றி நின்றார் அவர்
வேர் அறுப்பென் ; வெருவன்மின் நீர் 'என்றான் . - 3.3.22



2744 - உரைத்த வாசகம் கேட்டு உவந்து ஓங்கிட
இரைத்த காதலர் , ஏகிய இன்னலர் ,
திரித்த கோலினர் , தேம் மறை பாடினர் ;
நிருத்தம் ஆடினர் ; நின்று விளம்புவார் . - 3.3.23



2745 - தோன்றல் ! நீ முனியின் , புவனத் தொகை
மூன்று போல்வன முப்பது கோடி வந்து
ஏன்ற போதும் , எதிர் அல ; என்றலின்
சான்று அரோ எம் , தவப் பெரு ஞானமே . - 3.3.24



2746 - 'அன்னது ஆகலின் ஏயின ஆண்டு எலாம் ,
இன்னல் காத்து இங்கு இனிது உறைவாய் 'எனச்
சொன்ன மாதவர் பாதம் தொழுது , உயர்
மன்னர் மன்னவன் மைந்தனும் வைகினான் . - 3.3.25



2747 - பத்தாண்டுகள் தண்டகவனத்திருந்த இராமன்
அகத்தியன் குடிலுக்குப் புறப்படுதல்

ஐந்தும் ஐந்தும் அமைதியின் ஆண்டு , அவண் ,
மைந்தர் , தீது இலர் வைகினர் ; மாதவர்
சிந்தை எண்ணி ,'அகத்தியற் சேர்க 'என ,
இந்து நல் நுதல் தன்னொடும் ஏகினார் . - 3.3.26



2748 - இடைவழியில் சுதீக்கணன் இராமனை உபசரித்து உரையாடல் (2748-2755) விடரகங்களும் , வேய் செறி கானமும் ,
படரும் சில் நெறி பைப்பய நீங்கினார் ;
சுடரும் மேனிச் சுதீக்கணன் என்னும் அவ்
இடர் இலான் உறை சோலை சென்று எய்தினார் . - 3.3.27



2749 - அருக்கன் அன்ன முனிவனை அவ் வழிச்
செருக்கு இல் சிந்தையர் , சேவடி தாழ்தலும் ,
'இருக்க ஈண்டு 'என்று , இனியன கூறினான் ;
மருக் கொள் சோலையில் மைந்தரும் வைகினார் . - 3.3.28



2750 - வைகும் வைகலின் , மாதவன் , மைந்தன்பால்
செய்கை யாவையும் செய்து ,'இவண் , செல்வ ! நீ
எய்த யான் செய்தது எத்தவம் ? 'என்றனன் ;
ஐயனும் அவற்கு அன்பினன் கூறுவான் . - 3.3.29



2751 - 'சொன்ன நான்முகன் தன் வழித் தோன்றினர்
முன்னையோருள் உயர் தவம் முற்றினார்
உன்னின் யார் உளர் ? உன் அருள் எய்திய
என்னின் யார் உளர் இற் பிறந்தார் ? 'என்றான் . - 3.3.30



2752 - உவமை நீங்கிய தோன்றல் உரைக்கு எதிர் ,
நவமை நீங்கிய நற்றவன் சொல்லுவான் ;
'அவம் இலா விருந்து ஆகி , என்னால் அமை
தவம் எலாம் கொள்க தக்கணையா 'என்றான் . - 3.3.31



2753 - மறைவலான் எதிர் , வள்ளலும் கூறுவான் ,
'இறைவ ! நின் அருள் எத்தவத்திற்கு எளிது ?
அறைவது ஈண்டு ஒன்று ; அகத்தியற் காண்பது ஓர்
குறை கிடந்தது , இனி 'எனக் கூறினான் . - 3.3.32



2754 - 'நல்லதே நினைந்தாய் ; அது , நானும் முன்
சொல்லுவான் துணிகின்றது ; தோன்றல் ! நீ ,
செல்க ஆண்டு ; அவற் சேருதி ; சேர்ந்த பின் ,
இல்லை , நின் வயின் எய்த கில்லாதவே '. - 3.3.33



2755 - 'அன்றியும் நின் வரவினை ஆதரித்து ,
இன்று காறும் நின்று ஏமுறுமால் : அவற்
சென்று சேருதி ; சேருதல் , செவ்வியோய் !
நன்று தேவர்க்கும் , யாவர்க்கும் நன்று 'எனா . - 3.3.34



2756 - இராம இலக்குவர் விடைபெற்றுச் செல்லல்
வழியும் கூறி , வரம்பு அகல் ஆசிகள்
மொழியும் மாதவன் மொய்ம் மலர்த் தாள் தொழாப்
பிழியும் தேனின் பிறங்கு அருவித் திரள்
பொழியும் சோலை விரைவினில் போயினார் . - 3.3.35



2757 - அகத்தியர் இராமனை எதிர்கொள்ளுதல் (2757-2771)
ஆண் தகையர் அவ் வயின் அடைந்தமை அறிந்தான் ,
ஈண்டு உவகை வேலை துணை ஏழ் உலகும் எய்த ,
மாண்ட வரதன் சரண் வணங்க , எதிர் வந்தான் ;
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் . - 3.3.36



2758 - பண்டு ,'அவுணர் மூழ்கினர் ; படார்கள் 'என வானோர் ,
'எண் தவ ! எமக்கு அருள்க 'எனக் குறை இரப்பக்
கண்டு , ஒருகை வாரினன் முகந்து கடல் எல்லாம்
உண்டு , அவர்கள் பின்'உமிழ்க 'என்றலும் உமிழ்ந்தான் . - 3.3.37



2759 - தூய கடன் நீர் அடிசில் உண்டு அது துரந்தான்
ஆய அதனால் அமரும் மெய்யுடைய அன்னான் ,
மாய வினை வாள் அவுணன் வாதவிதன் வன்மைக்
காயம் இனிது உண்டு உலகின் ஆர் இடர் களைந்தான் . - 3.3.38



2760 - 'யோகம் உறு பேர் உயிர்கள் தாம் , உலைவு உறாமல்
ஏகும் நெறி யாது ? 'என , மிதித்து அடியின் ஏறி ,
மேக நெடு மாலை தவழ் விந்தம் எனும் விண் தோய்
நாகமது நாகம் உற , நாகம் என நின்றான் . - 3.3.39



2761 - மூசு அரவு சூடும் முதலோன் , உரையின் ,'மூவா
மாசு இல் தவ ! ஏகு 'என , வடாது திசை மேல் நாள்
நீசம் உற , வானின் நெடு மா மலயம் நேரா ,
ஈசன் நிகராய் , உலகு சீர் பெற இருந்தான் . - 3.3.40



2762 - உழக்கும் மறை நாலினும் உயர்ந்து , உலகம் ஓதும்
வழக்கினும் , மதிக் கவியினும் , மரபின் நாடி ,
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான் . - 3.3.41



2763 - ' ''விண்ணினில் , நிலத்தினில் , விகற்ப உலகில் , பேர்
எண்ணினில் , இருக்கினில் , இருக்கும் '' என யாரும்
உள் நினை கருத்தினை , உறப்பெறுவெனால் , என்
கண்ணினில் 'எனக் கொடு களிப்புறும் மனத்தான் . - 3.3.42



2764 - 'இரைத்த மறை நான்கினொடு இயைந்த பிற யாவும்
நிரைத்த நெடு ஞான நிமிர் கல்லில் நெடுநாள் இட்டு
அரைத்தும் அயனாரும் அறியாத பொருள் , நேர் நின்று
உரைத்து உதவுமால் 'எனும் உணர்ச்சியின் உவப்பான் . - 3.3.43



2765 - 'உய்ந்தனர் இமைப்பிலர் ; உயிர்த்தனர் தவத்தோர் ;
அந்தணர் அறத்தின் நெறி நின்றனர்கள் ஆனார் ;
வெம் திறல் அரக்கர் விட வேர் முதல் அறுப்பான் ,
வந்தனன் மருத்துவன் 'எனத் தனி வலிப்பான் . - 3.3.44



2766 - 'ஏனை உயிராம் உலவை யாவும் இடை வேவித்து
ஊன் நுகர் அரக்கர் உருமைச் சுடு சினத்தின்
கான அனலைக் கடிது அவித்து உலகு அளிப்பான்
வான மழை வந்தது 'என மைந்துறு மனத்தான் . - 3.3.45



2767 - கண்டனன் இராமனை வரக் கருணை கூரப்
புண்டரிக வாள் நயனம் நீர் பொழிய நின்றான் ;
எண் திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்யக்
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான் . - 3.3.46



2768 - நின்றவனை , வந்த நெடியோன் அடி பணிந்தான் ;
அன்று , அவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணான்
'நன்று வரவு 'என்று , பல நல் உரை பகர்ந்தான் .
என்றும் உள தென் தமிழ் இயம்பி இசை கொண்டான் . - 3.3.47



2769 - வேதியர்கள் வேத மொழி வேறு பல கூறக்
காதல் மிக நின்று , எழில் கமண்டலுவின் நல் நீர்
மாதவர்கள் வீசி , நெடு மா மலர்கள் தூவப்
போது மணம் நாறு குளிர் சோலை கொடு புக்கான் . - 3.3.48



2770 - பொருந்த அமலன் பொழில் அகத்து இனிது புக்கான் ;
விருந்து அவண் அமைத்தபின் விரும்பி முனி ,'மேனாள்
இருந்தவம் இழைத்த எனது இல்லிடையின் வந்து , என்
அருந்தவம் முடித்தனை ; அருட்கு அரச ! 'என்றான் . - 3.3.49



2771 - என்ற முனியைத் தொழுது இராமன் ,'இமையோரும் ,
நின்ற தவம் முற்றும் நெடியோரின் நெடியோரும் ,
உன்தன் அருள் பெற்றிலர்கள் , உன் அருள் சுமந்தேன் ;
வென்றனென் அனைத்துலகும் ; மேல் இனி என் ? 'என்றான் . - 3.3.50



2772 - அகத்தியன் சொல்லுதல் (2772-2774)
' ''தண்டக வனத்து உறைதி '' என்று உரை தரக் கொண்டு ,
'உண்டு வரவு இத்திசை 'எனப் பெரிது உவந்தேன் ;
எண் தகு குணத்தினை ! 'எனக் கொடு உயர் சென்னித்
துண்ட மதி வைத்தவனை ஒத்த முனி சொல்லும் . - 3.3.51



2773 - 'ஈண்டு உறைதி ஐய ! இனி , இவ் வயின் இருந்தால் ,
வேண்டியன மா தவம் விரும்பினை முடிப்பாய் ;
தூண்டு சின வாள் நிருதர் தோன்றியுளர் என்றால் ,
மாண்டு உக மலைந்து , எமர் மனத் துயர் துடைப்பாய் . ' - 3.3.52



2774 - 'வாழும் மறை ; வாழும் மனுநீதி ; அறம் வாழும் ;
தாழும் இமையோர் உயர்வர் ; தானவர்கள் தாழ்வார் ;
ஆழி உழவன் புதல்வ ! ஐயம் இலை ; மெய்யே !
ஏழ் உலகும் வாழும் ; இனி , இங்கு உறைதி 'என்றான் . - 3.3.53



2775 - இராமன் மறுமொழி
'செருக்கு அடை அரக்கர் புரி தீமை சிதைவு எய்தத்
தருக்கு அழிதரக் கடிது கொல்வது சமைந்தேன் ;
வருக்க மறையோய் ! அவர் வரும் திசையில் முந்து உற்று
இருக்கை நலம் ; நிற்கு அருள் என் ? 'என்றனன் இராமன் . - 3.3.54



2776 - அகத்தியன் இராமனுக்குப் படைவழங்கிப் பஞ்சவடிக்கனுப்புதல் (2776-2779)

'விழுமியது சொற்றனை ; இவ் வில் இது இவண் , மேல் நாள்
முழுமுதல்வன் வைத்துளது ; மூவுலகும் , யானும் ,
வழிபட இருப்பது ; இது தன்னை வடி வாளிக்
குழு , வழு இல் புட்டிலொடு கோடி 'என , நல்கி . - 3.3.55



2777 - இப்புவனம் முற்றும் ஒரு தட்டின் இடை இட்டால்
ஒப்பு வரவிற்று என உரைப்பு அரிய வாளும் ,
வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லா
முப்புரம் எரித்த தனி மொய்க்கணையும் , நல்கா . - 3.3.56



2778 - ஓங்கும் மரன் ஓங்கி , மலை ஓங்கி , மணல் ஓங்கிப்
பூங்குலை குலாவு குளிர் சோலை புடை விம்மித்
தூங்கு திரை ஆறு தவழ் சூழலது ஒர் குன்றின்
பாங்கர் உளதால் , உறையுள் பஞ்சவடி ; மஞ்ச ! - 3.3.57



2779 - கன்னி இள வாழை கனி ஈவ , கதிர் வாலின்
செந் நெல் உள ; தேன் ஒழுகு போதும் உள ; தெய்வப்
பொன்னி எனல் ஆய புனல் ஆறும் உள ; போதா
அன்னம் உள பொன் இவளொடு அன்பின் விளையாட . - 3.3.58



2780 - இராமன் விடைபெற்றுச் செல்லுதல்
'ஏகி , இனி அவ் வயின் இருந்து உறைமின் 'என்றான் ;
மேக நிற வண்ணனும் வணங்கி விடை கொண்டான் ;
பாகு அனைய சொல்லியொடு தம்பி பரிவின் பின்
போக , முனி சிந்தை தொடரக் கடிது போனான் . - 3.3.59
-----------------------

3.4 . சடாயு காண் படலம் (2781- 2828 )




2781 - இராமன் முதலியோர் சடாயுவைக் கண்டது
நடந்தனர் காவதம் பலவும் ; நல் நதி
கிடந்தன , நின்றன , கிரிகள் கேண்மையின்
தொடர்ந்தன , துவன்றின சூழல் யாவையும் ,
கடந்தனர் ; கண்டனர் கழுகின் வேந்தையே . - 3.4.1



2782 - சடாயுவின் இயல்பு (2782-2789)
உருக்கிய சுவணம் ஒத்து , உதயத்து உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து அலங்கு திக்கு எலாம்
தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் திசை
விரித்து இருந்தனன் என , விளங்குவான் தனை . - 3.4.2



2783 - முந்து ஒரு கருமலை முகட்டு முன்றிலின்
சந்திரன் ஒளியொடு தழுவச் சார்த்திய ,
அந்தம் இல் கனை கடல் அமரர் நாட்டிய ,
மந்தர கிரி என வயங்குவான் தனை . - 3.4.3



2784 - மால் நிற விசும்பு எழில் மறையத் தன் மணிக்
கால் நிறச் சேயொளி கதுவக் கண் அகல்
நீல் நிற வரையினில் பவள நீள் கொடி
போல் நிறம் பொலிந்திடப் பொலிகின்றான் தனை . - 3.4.4



2785 - தூய்மையன் , இருங்கலை துணிந்த கேள்வியன் ,
வாய்மையன் , மறு இலன் , மதியின் கூர்மையன் ,
ஆய்மையின் மந்திரத்து அறிஞன் ஆம் எனச்
சேய்மையின் நோக்குறு சிறு கணான் தனை . - 3.4.5



2786 - வீட்டி வாள் அவுணரை , விருந்து கூற்றினை
ஊட்டி , வீழ் மிச்சில் தான் உண்டு , நாள்தொறும்
தீட்டி , மேல் இந்திரன் சிறு கண் யானையின்
தோட்டிபோல் தேய்ந்து ஒளிர் துண்டத்தான் தனை . - 3.4.6



2787 - கோள் இருநான்கினோடு ஒன்று கூடின
ஆளுறு திகிரிபோல் ஆரத்தான் தனை ,
நீளுறு மேருவின் நெற்றி முற்றிய
வாள் இரவியில் பொலி மௌலியான் தனை , - 3.4.7



2788 - சொல் பங்கம் உற நிமிர் இசையின் சும்மையை ,
அல் பங்கம் உற வரும் அருணன் செம்மலைச்
சிற்பம் கொள் பகல் எனக் கடிது சென்று தீர்
கற்பங்கள் எனைப்பல கண்டுளான் தனை . - 3.4.8



2789 - ஓங்கு உயர் நெடுவரை ஒன்றில் நின்று , அது
தாங்கலது இருநிலம் தாழ்ந்து தாழ்வுற ,
வீங்கிய வலியினில் இருந்த வீரனை ,
ஆங்கு அவர் அணுகினர் , அயிர்க்குஞ் சிந்தையார் . - 3.4.9



2790 - இராம இலக்குவர் சடாயுவை ஐயுற்று நோக்குதல்
'இறுதியைத் தன்வயின் இயற்ற எய்தினான் ,
அறிவு இலி அரக்கன் ஆம் ; அல்லனாம் எனின் ,
எறுழ் வலிக் கலுழனே 'என்ன உன்னி , அச்
செறி கழல் வீரரும் செயிர்த்து நோக்கினார் . - 3.4.10



2791 - சடாயுவின் ஐயம் (2791-2795)
வனை கழல் வரி சிலை மதுகை மைந்தரை
அனையவன் தானும் கண்டு அயிர்த்து நோக்கினான்
'வினை அறு நோன்பினர் அல்லர் ; வில்லினர்
புனை சடை முடியினர் புலவரோ ? 'எனா , - 3.4.11



2792 - 'புரந்தரன் முதலிய புலவர் யாரையும்
நிரந்தரம் நோக்குவென் ; நேமியானும் , அவ்
வரம் தரும் இறைவனும் , மழு வலாளனும் ,
கரந்திலர் என்னை ; யான் என்றும் காண்பெனால் . - 3.4.12



2793 - 'காமன் என்பவனையும் , கண்ணின் நோக்கினேன் ;
தாமரைச் செங்கண் இத் தடக்கை வீரர்கள்
பூமரு பொலங் கழல் பொடியினோடும் ஒப்பு
ஆம் என அறிகிலென் ; ஆர்கொலாம் இவர் ? - 3.4.13



2794 - 'உலகு ஒருமூன்றும் தம் உடைமை ஆக்குறும்
அலகு அறும் இலக்கணம் அமைந்த மெய்யினர் ;
மலர்மகட்கு உவமையாளோடும் வந்த இச்
சிலை வலி வீரரைத் தெரிகிலேன் 'எனா , - 3.4.14



2795 - 'கருமலை செம்மலை அனைய காட்சியர் ;
திரு மகிழ் மார்பினர் ; செங்கண் வீரர்தாம் ,
அருமை செய் குணத்தின் என் துணைவன் ஆழியான்
ஒருவனை இருவரும் ஒத்துளார் அரோ . ' - 3.4.15



2796 - சடாயுவின் வினா
எனப் பல நினைப்பினன் மனத்துள் எண்ணுவான் ,
சினப் படை வீரர்மேல் செல்லும் அன்பினான் ,
'கனப் படை வரி சிலைக் காளை நீர்கள் யார் ?
மனப்பட எனக்கு உரை வழங்குவீர் 'என்றான் . - 3.4.16



2797 - இராம இலக்குவர் விடை
வினவிய காலையில் , மெய்ம்மை அல்லது
புனை மலர்த் தாரவர் புகல்கிலாமையால் ,
'கனை கடல் நெடுநிலம் காவல் ஆழியான் ,
வனை கழல் தயரதன் மைந்தர் யாம் 'என்றார் . - 3.4.17



2798 - சடாயு , தயரதன் நலம் வினாதல்
உரைத்தலும் , பொங்கிய உவகை வேலையன் ,
தரைத்தலை இழிந்து , அவர்த் தழுவும் காதலன் ,
'விரைத் தடம் தாரினிர் ! வேந்தர் வேந்தன் தன் ,
வரைத்தடம் தோள் இணை வலியவோ ? 'என்றான் . - 3.4.18



2799 - தயரதன் துறக்கமுற்றது அறிந்து சடாயு வருந்துதல் (2799-2800)
'மறக்க முற்றாத தன் வாய்மை காத்து , அவன்
துறக்கம் உற்றான் 'என , இராமன் சொல்லலும் ,
இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் ;
உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் . - 3.4.19



2800 - தழுவினர் , எடுத்தனர் , தடக்கையால் ; முகம்
கழுவினர் இருவரும் , கண்ணின் நீரினால் ;
வழுவிய இன் உயிர் வந்த மன்னனும் ,
அழிவுறு நெஞ்சினன் , அரற்றினான் அரோ . - 3.4.20



2801 - சடாயு அரற்றல் (2801-2804)
பரவல் அருங் கொடைக்கும் நின்தன் பனிக்குடைக்கும்
        பொறைக்கும் நெடும் பண்பு தோற்ற
கரவல் அருங் கற்பகமும் , உடுபதியும் ,
        கடல் இடமும் , களித்து வாழப்
புரவலர்தம் புரவலனே ! பொய்ப்பகையே ! மெய்க்கு
        அணியே ! புகழின் வாழ்வே !
இரவலரும் , நல் அறமும் , யானும் இனி என்பட
        நீத்து ஏகினாயே . - 3.4.21



2802 - அலங்காரம் என உலகுக்கு அமுது அளிக்கும்
        தனி குடையாய் ! ஆழி சூழ்ந்த
நிலம் காவல் அது கிடக்க , நிலையாத
        நிலை உடையேன் நேய நெஞ்சின்
நலம் காண நடந்தனையோ ? நாயகனே !
        தீவினையேன் , நண்பின் நின்றும்
விலங்கு ஆனேன் ஆகலினால் , விலங்கினேன் ;
        இன்னும் உயிர் விட்டிலேனால் . - 3.4.22



2803 - தயிர் உடைக்கும் மத்து என்ன உலகை
        நலி சம்பரனைத் தடிந்த அந்நாள்
அயிர் கிடக்கும் கடல் வலயத்தவர் அறிய ,
        'நீ உடல் நான் ஆவி 'என்று
செயிர் கிடத்தல் செய்யாத திருமனத்தாய் !
        செப்பினாய் ; திறம்பா , நின்சொல் ;
உயிர் கிடக்க , உடலை விசும்பு ஏற்றினார் ,
        உணர்வு இறந்த கூற்றினாரே . - 3.4.23



2804 - 'எழுவது ஓர் இசை பெருக , இப்பொழுதே ,
        ஒப்பு அரிய எரியும் தீயின்
விழுவதே நிற்க , மட மெல்லியலார் தம்மைப்போல்
        நிலத்தின் மேல் வீழ்ந்து
அழுவதே யான் ? 'என்னா , அறிவுற்றான் என
        எழுந்து , ஆங்கு அவரை நோக்கி ,
'முழுவது ஏழ் உலகு உடையான் மைந்தன்மீர் !
        கேண்மின் 'என முறையில் சொல்வான் . - 3.4.24



2805 - உயிர்களின் தோற்ற வரலாறு (2805-2809)
தக்கன் மனை வயிற்று உதித்தார் ஐம்பதின்மர்
        தடங் கொங்கைத் தையலாருள்
தொக்க பதின்மூவரை அக் காசிபனும்
        புணர்ந்தனன் ; அத் தோகைமாருள்
மிக்க அதிதிப் பெயராள் , முப்பத்து முக்கோடி
        விண்ணோர் ஈந்தாள் ;
மை கரும் கண் திதி என்பாள் , அதின் இரட்டி
        அசுரர்தமை வயிறுவாய்த்தாள் . - 3.4.25



2806 - தானவரே முதலோரைத் தனுப் பயந்தாள் ;
        மதி என்பாள் , மனிதர்தம் ஊடு
ஆன வருணங்கள் அவயவத்து அடைவே
        பயந்தனளால் ; சுரபி என்பாள் ,
தேனுவுடன் கந்தருவம் மற்றுள்ள பிற
        பயந்தாள் ; தெரிக்கும் காலை
மானமுடைக் குரோதவசை , கழுதை ,
        மரை , ஒட்டை பிற வயிறு வாய்த்தாள் . - 3.4.26



2807 - மழை புரையும் குழல் விநதை வான் , இடி ,
        மின் , அருணனுடன் வயிநதேயன் ,
தழை புரையும் சிறைக் கூகை , பாறு முதல்
        பெரும் பறவை தம்மை ஈன்றாள் ;
இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி , சிவல் ,
        காடையுடன் பிறவும் ஈன்றாள் ;
கழை எனும் அக் கொடி பயந்தாள் கொடி
        உடனே செடி முதலாக் கண்ட எல்லாம் . - 3.4.27



2808 - வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம்
        கத்துருவாம் மின்னும் ஈன்றாள் ;
மருட்டி எழும் ஒரு தலைய புயங்கம் எலாம்
        சுதை என்னும் மாது தந்தாள் ;
அருட்டை எனும் அவள் பயந்தாள் ஓந்தி உடும்பு
        அணில்கள் முதலாய எல்லாம் ;
தெருட்டிடும் மாது இளை ஈந்தாள் செலசரம்
        ஆகிய பலவும் தெரிக்கும் காலை . - 3.4.28



2809 - அதிதி , திதி , தனு , அருட்டை , சுதை , கழையே ,
        சுரபி , அணி விநதை , ஆன்ற
மதி , இளை , கத்துருவுடனே குரோதவசை ,
        தாம்பிரை , ஆம் மடநலார்கள் ,
விதிமுறையே இவை அனைத்தும் பயந்தனர்கள் ;
        விநதை சுதன் அருணன் மென் தோள்
புது மதி சேர் நுதல் அரம்பைதனைப் புணர
        உதித்தனம் யாம் புவனி மீதே . - 3.4.29


2810 - சடாயு , தன் வரலாறு கூறியது
''அருணன்தன் புதல்வன் யான் ; அவன் படரும்
        உலகு எல்லாம் படர்வேன் ; ஆழி
இருள் மொய்ம்பு கெடத் துரந்த தயரதற்கு
        இன் உயிர்த் துணைவன் ; இமையோரோடும்
வருணங்கள் வகுத்திட்ட காலத்தே வந்து உதித்தேன் ;
        கழுகின் மன்னன் ;
தருணங்கொள் பேர் ஒளியீர் ! சம்பாதி பின்னர்
        வரு சடாயு '' என்றான் . - 3.4.30



2811 - இராம இலக்குவர் மகிழ்ச்சி
ஆண்டு அவன் ஈது உரை செய்ய , அஞ்சலித்த
        மலர்க் கையார் , அன்பினோடும்
மூண்ட பெருந் துன்பத்தால் முறைமுறையின் நிறை
        மலர்க் கண் மொய்த்த நீரார் ,
பூண்ட பெரும் புகழ் நிறுவித் தம்பொருட்டால்
        மேல் உலகம் புக்க தாதை
மீண்டனன் வந்தான் அவனைக் கண்டனரே
        ஒத்தனர் , அவ் விலங்கல் தோளார் . - 3.4.31



2812 - சடாயு இறக்கத் துணிதல்
மருவினிய குணத்தவரை இரு சிறகால் உறத் தழுவி ,
        'மக்காள் ! நீரே
உரிய கடன் வினையேற்கும் உதவுவீர் ; உடல்
        இரண்டுக்கு உயிர் ஒன்று ஆனான்
பிரியவும் தான் பிரியாதே இனிதிருக்கும் உடல்
        பொறை யான் , பீழை பாராது ,
எரி அதனின் இன்றே புக்கு இறவேனேல்,
        இத்துயரம் மறவேன் 'என்றான் . - 3.4.32



2813 - இராம இலக்குவரின் துன்பச் சொல் (2813-2815)
என்று உரைத்த எருவை அரசனைத்
துன்று தாரவர் நோக்கித் தொழுது , கண்
ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக ,
நின்று மற்று இன நீர்மை நிகழ்த்தினார் . - 3.4.33



2814 - 'உய்விடத்து உதவற்கு உரியானும் தன்
மெய் விடக் கருதாது விண் ஏறினான் ;
இவ்விடத்தினில் எம்பெருமாஅன் ! எமைக்
கைவிடில் பினை யார் களைகண் உளார் ? - 3.4.34



2815 - '''தாயின் , நீங்கரும் தந்தையின் , தண் நகர்
வாயில் நீங்கி வனம் புகுந்து எய்திய
நோயும் நீங்கினம் நுன்னின் என் '' எங்களை
நீயும் நீங்குதியோ ? நெறி நீங்கலாய் ! ' - 3.4.35



2816 - சடாயு அமைதி கூறி , அவர் வனம்புகுந்தமைக்குக் காரணம் வினவல் (2816-2818)
என்ற சொல்லர் ; இரந்து அழி நெஞ்சினர் ;
நின்ற வீரரை நோக்கி நினைந்து அவன் ,
'அன்று அது என்னின் , அயோத்தியின் , ஐயன்மீர் !
சென்றபின் அவற் சேர்குவென் யான் 'என்றான் . - 3.4.36



2817 - ''வேந்தன் விண் அடைந்தான் எனின் , வீரர் நீர்
ஏந்தும் ஞாலம் இனிது அளியாது , இவண்
போந்தது என்னை ? புகுந்த என் ? புந்தி போய்க்
காந்துகின்றது ; கட்டுரையீர் '' என்றான் . - 3.4.37



2818 - 'தேவர் தானவர் , திண் திறல் நாகர் , வேறு
ஏவர் ஆக இடர் இழைத்தார் எனின் ,
பூ அராவு பொலம் கதிர் வேலினீர் !
சாவர் ஆக்கித் தருவென் அரசு 'என்றான் . - 3.4.38



2819 - இலக்குவன் , வனம்போந்த வரலாறு கூறல்
தாதை கூறலும் தம்பியை நோக்கினான்
சீதை கேள்வன் ; அவனும் தன் சிற்றவை
மாதரால் வந்த செய்கை வரம்பு இலா
ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் . - 3.4.39



2820 - சடாயு இராமனைப் புகழ்தல் (2820-2821)
'உந்தை உண்மையன் ஆக்கி , உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக் கொண்டு , தாரணி
வந்த தம்பிக்கு உதவிய வள்ளலே !
எந்தை வல்லது யாவர் வல்லார் ? 'எனா . - 3.4.40



2821 - அல்லித் தாமரைக் கண்ணனை அன்பு உறப்
புல்லி , மோந்து , பொழிந்த கண் நீரினன் ,
வல்லை ; மைந்த !'அம் மன்னையும் , என்னையும் ,
எல்லை இல் புகழ் எய்துவித்தாய் 'என்றான் . - 3.4.41



2822 - சடாயு சீதையைப் பற்றி வினவுதல்
பின்னரும் அப் பெரியவன் பெய் வளை
அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் ;
மன்னர் மன்னவன் மைந்த !'இவ் வாள் நுதல்
இன்னள் என்ன இயம்புதியால் 'என்றான் . - 3.4.42



2823 - இலக்குவன் விடை
அல் இறுத்து அன தாடகை ஆதியா
வில் இறுத்தது இடை என மேலை நாள்
புல் இறுத்தது யாவும் புகன்று , தன்
சொல் இறுத்தனன் ; தோன்றல் பின் தோன்றினான் . - 3.4.42



2824 - இக்காட்டில் தங்குக என்றல்
கேட்டு உவந்தனன் கேழ்கிளர் மௌலியான் ;
''தோட்டு அலங்கலினீர் ! துறந்தீர் வளம் ;
நாட்டின் நீவிரும் நல் நுதல் தானும் இக்
காட்டில் வைகுதிர் ; காக்குவென் யான் '' என்றான் . - 3.4.44



2825 - இராமன் விடை
'இறைவ ! எண்ணி அகத்தியன் ஈந்துளது ,
அறையும் நல் மணி ஆற்றின் அகன் கரைத்
துறையுள் உண்டு ஒரு சூழல் ; அச்சூழல் புக்கு
உறைதும் ;' என்றனன் உள்ளத்து உறைகுவான் . - 3.4.45



2826 - சடாயு சிறை நிழலில் இராமன் முதலியோர் செல்லுதல்
''பெரிதும் நன்று ; அப் பெருந்துறை வைகி , நீர்
புரிதிர் மாதவம் ; போதுமின் ! யான் அது
தெரிவுறுத்துவென் '' என்று அவர் திண் சிறை
விரியும் நீழலில் செல்ல , விண் சென்றனன் . - 3.4.46



2827 - இராமன் முதலியோர் சோலையில் தங்குதல்
ஆய சூழல் அறிய உணர்த்தி , அத்
தூய சிந்தைய தோம் இல் குணத்தினான்
போய பின்னைப் பொரு சிலை வீரரும்
ஏய சோலை இனிது சென்று எய்தினார் . - 3.4.47



2828 - சடாயு அவர்களைக் குறிக்கொண்டு காத்தல்
வார்ப் பொன் கொங்கை மருகியை , மக்களை
ஏர்ப்பச் சிந்தனை இட்டு அவ் வரக்கர்தம்
சீர்ப்பைச் சிக்கு அறத் தேறினன் , சேக்கையில்
பார்ப்பைப் பார்க்கும் பறவையில் பார்க்கின்றான் . - 3.4.48

---------------------------------

3.5 . சூர்ப்பணகைப் படலம் ( 2829 -2971 )




2829 - கோதாவரியின் தோற்றம் (2829-2831)
புவியினுக்கு அணியாய் , ஆன்ற
        பொருள் தந்து , புலத்திற்று ஆகி ,
அவி அகத் துறைகள் தாங்கி ,
        ஐந்திணை நெறி அளாவிச்
சவி உறத் தெளிந்து , தண் என்று
        ஒழுக்கமும் தழுவிச் சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா
        வரியினை வீரர் கண்டார் . - 3.5.1



2830 - வண்டு உறை கமலச் செவ்வி வாள் முகம் பொலிய வாசம்
உண்டு உறை குவளை ஒண் கண் ஒருங்கு உற நோக்கி ஊழின்
தெண் திரைக் கரத்தின் வாரித் திரு மலர் தூவிச் செல்வர்க்
கண்டு அடி பணிவது என்னப் பொலிந்தது கடவுள் யாறு . - 3.5.2



2831 - எழுவுறு காதலால் இங்கு
        இரைத்து இரைத்து ஏங்கி ஏங்கிப்
பழுவ நாள் குவளைச் செவ்விக்
        கண் பனி பரந்து சோர ,
வழு இலா வாய்மை மைந்தர்
        வனத்து உறை வருத்தம் நோக்கி ,
அழுவதும் ஒத்ததால் , அவ்
        அலங்கு நீர் ஆறு மன் ஓ . - 3.5.3



2832 - இராமனும் சீதையும் இயற்கை யெழிலைக் கண்டு மகிழ்தல் (2832-2834)
நாளம் கொள் நளினப் பள்ளி ,
        நயனங்கள் அமைய , நேமி
வாளங்கள் உறைவ கண்டு
        மங்கைதன் கொங்கை நோக்கும்
நீளம் கொள் சிலையோன் ;
        மற்றை நேரிழை , நெடிய நம்பி
தோளின்கண் மனம் வைத்து அன்ன
        சுடர் மணித் தடங்கள் கண்டாள் . - 3.5.4



2833 - ஓதிமம் ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையள் ஆகும்
சீதைதன் நடையை நோக்கிச் சிறியது ஓர் முறுவல் செய்தான் ;
மாது அவள்தானும் , ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்
போதகம் நடப்ப நோக்கிப் புதியது ஓர் முறுவல் பூத்தாள் . - 3.5.5



2834 - வில் இயல் தடக்கை வீரன் வீங்கு நீர் ஆற்றின் பாங்கர்
வல்லிகள் நுடங்கக் கண்டான் மங்கைதன் மருங்குல் நோக்க ,
எல்லி அம் குவளைக் கானத்து இடை இடை மலர்ந்து நின்ற
அல்லி அம் கமலம் கண்டாள் , அண்ணல்தன் வடிவு கண்டாள் . - 3.5.6



2835 - பன்னசாலையில் தங்குதல்
அனையது ஓர் தன்மையால் அவ் அருவி நீர் ஆற்றின் பாங்கர்ப்
பனி தரு படிவப் பஞ்சவடி எனும் பருவச் சோலைத்
தனி இடம் அதனை நண்ணித் தம்பியால் சமைக்கப்பட்ட
இனிய பூஞ்சாலை எய்தி இருந்தனன் இராமன் ; இப்பால் . - 3.5.7



2836 - சூர்ப்பணகை வருகை (2836-2839)
நீல மா மணி நிற நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும் மொய்ம்பினாள் ,
மேலை நாள் உயிரொடும் பிறந்து , தான் விளை
காலம் ஓர்ந்து , உடன் உறை கடிய நோய் அனாள் . . - 3.5.8



2837 - செம்பு அராகம் படச் செறிந்த கூந்தலாள் ,
வெம்பு அராகம் தனி விளைந்த மெய்யினாள் ,
உம்பர் ஆனவர்க்கும் ஒண் தவர்க்கும் ஓத நீர்
இம்பர் ஆனவர்க்கும் ஓர் இறுதி ஈட்டுவாள் . - 3.5.9



2838 - வெய்யதோர் காரணம் உண்மை மேயினாள் ,
வைகலும் தமியள் அவ் வனத்து வைகுவாள் ,
நொய்தின் இவ் உலகு எலாம் நுழையும் நோன்மையாள் ,
எய்தினள் , இராகவன் இருந்த சூழல்வாய் . - 3.5.10



2839 - எண் தகும் இமையவர் ,'அரக்கர் எங்கள்மேல்
விண்டனர் , விலக்குதி 'என்ன , மேலை நாள்
அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக்
கண்டனள் , தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் . - 3.5.11



2840 - இராமனழகை வியத்தல் (2840-2855)
'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் ;
இந்திரற்கு ஆயிரம் நயனம் ; ஈசற்கு
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று ; நான்கு தோள்
உந்தியின் உலகு அளித்தாற்கு 'என்று உன்னுவாள் . - 3.5.12



2841 - 'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால்
இற்றவன் , அன்றுதொட்டு இன்றுகாறும் தான்
நல் தவம் இயற்றி , அவ் அநங்கன் , நல் உருப்
பெற்றனன் ஆம் 'எனப் பெயர்த்தும் எண்ணுவாள் . - 3.5.13



2842 - 'தரங்களின் அமைந்து தாழ்ந்து அழகின் சார்பின ;
மரங்களும் நிகர்க்கல ; மலையும் புல்லிய ;
உரங்களின் உயர் திசை ஓம்பும் ஆனையின்
கரங்களே இவன் மணிக் கரம் 'என்று உன்னுவாள் . - 3.5.14



2843 - 'வில் மலை வல்லவன் வீரத் தோளொடும்
கல் மலை நிகர்க்கல ; கனிந்த நீலத்தின்
நல் மலை அல்லது , நாம மேருவும்
பொன் மலை ஆதலால் , பொருவலாது 'என்பாள் . - 3.5.15



2844 - 'தாள் உயர் தாமரைத் தளங்கள் தம்மொடும்
கேள் உயர் நாட்டத்துக் கிரியின் தோற்றத்தான்
தோளொடு தோள் செலத் தொடர்ந்து நோக்குறின்
நீளிய அல்ல கண் ; நெடிய மார்பு 'என்பாள் . - 3.5.16



2845 - 'அதிகம் நின்று ஒளிரும் இவ் அழகன் வாள் முகம்
பொதி அவிழ் தாமரைப் பூவை ஒப்பதோ ?
கதிர் மதி ஆம் எனில் கலைகள் தேயும் ; அம்
மதியெனின் , மதிக்கும் ஓர் மறு உண்டு 'என்னும் ஆல் . - 3.5.17



2846 - 'எவன் செய , இனிய இவ் அழகை எய்தினோன் ,
அவம் செயத் திரு உடம்பு அலச நோற்கின்றான் ?
நவம் செயத் தகைய இந் நளின நாட்டத்தான்
தவம் செயத் தவன் செய்த தவன் என் ? 'என்கின்றாள் . - 3.5.18



2847 - 'உடுத்த நீர் ஆடையள் , உருவச் செவ்வியள் ,
பிடித்தரு நடையினள் பெண்மை நன்று ! இவன்
அடித்தலம் தீண்டலின் அவனிக்கு அம் மயிர்
பொடித்தன போலும் இப் புல் 'என்று உன்னுவாள் . - 3.5.19



2848 - 'வாள் நிலா முறுவலான் வயங்கு சோதியைக்
காணலனே கொலோ கதிரின் நாயகன்
சேண் எலாம் புல் ஒளி செலுத்திச் சிந்தையின்
நாணலன் மீமிசை நடக்கின்றான் 'என்றாள் . - 3.5.20



2849 - 'குப்புறற்கு அரிய மாக் குன்றை வென்று உயர்
இப் பெருந் தோளவன் இதழுக்கு ஏற்பது ஓர்
ஒப்பு என உலகமேல் உரைக்க ஒண்ணுமோ ?
துப்பினில் துப்புடை யாதைச் சொல்லுகேன் ? ' - 3.5.21



2850 - 'நல் கலை மதி உற வயங்கு நம்பிதன்
எல் கலை திரு அரை எய்தி ஏமுற
வற்கலை நோற்றன மாசு இலா மணிப்
பொன் கலை நோற்றில போலும் , ஆல் 'என்பாள் . - 3.5.22



2851 - 'தொடை அமை நெடு மழைத் தொங்கல் ஆம் எனக்
கடை குழன்று இடை நெறி கரிய குஞ்சியைச்
சடை எனப் புனைந்திலன் என்னில் , தையலார்
உடை உயிர் யாவையும் உடையும் , ஆல் 'என்றாள் . - 3.5.23



2852 - 'நாறிய நகை அணி நல்ல புல்லினால்
ஏறிய செவ்வியின் இயற்றுமோ ? 'எனா ,
'மாறு அகல் முழு மணிக்கு அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால் விளங்குமோ ? 'என்பாள் . - 3.5.24



2853 - 'கரந்திலன் இலக்கணம் எடுத்துக் காட்டிய
பரம்தரு நான் முகன் பழிப்பு உற்றான் அரோ !
இரந்து இவன் இணை அடிப் பொடியும் ஏற்கலாப்
புரந்தரன் உலகு எலாம் புரக்கின்றான் 'என்பாள் . - 3.5.25



2854 - நீத்தமும் பரவையும் குறுக நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள ,
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் எனத் தேயும் கற்பினாள் . - 3.5.26



2855 - வான் தனில் வரைந்தது ஓர் மாதர் ஓவியம்
போன்றனள் , நின்றனள் , புழுங்கும் நெஞ்சினள் ,
தோன்றல்தன் சுடர் மணித் தோளில் நாட்டங்கள்
ஊன்றினள் , பறிக்க ஓர் ஊற்றம் பெற்றிலள் . - 3.5.27



2856 - இராமன்மேல் காதல் கொள்ளல்
நின்றனள் ,''இருந்தவன் நெடிய மார்பகம்
ஒன்றுவென் ; அன்று எனின் , அமுதம் உண்கினும்
பொன்றுவென் ; போக்கு இனி அரிது போன்ம் '' எனாச்
சென்று , எதிர் நிற்பது ஓர் செய்கை தேடுவாள் . - 3.5.28



2857 - உருமாறிச் செல்ல எண்ணுதல்
'' 'எயிறு உடை அரக்கி , எவ் உயிரும் இட்டது ஓர்
வயிறு உடையாள் 'என மறுக்கும் , ஆதலால்
குயில் தொடர் குதலை ஓர் கொவ்வைச் செவ்வி வாய்
மயில் தொடர் இயலி ஆய் மருவல் நன்று '' எனா . - 3.5.29



2858 - திருமகள் அருளால் உருமாறி வருதல் (2858-2861)
பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள் ,
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள் செவ்வியள்
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள் . - 3.5.30



2859 - பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்கச்
செஞ்செவிய கஞ்சம் நிமிர் சீறடியள் ஆகி ,
அம் சொல் இள மஞ்ஞை என , அன்னம் என , மின்னும்
வஞ்சி என , நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள் . - 3.5.31



2860 - பொன் ஒழுகு பூவில் உறை பூவை எழில் பூவை
பின்னு எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்து ஓர்
கன்னி எழில் கொண்டது கலைத் தட மணித் தேர்
மின் அழிவு இல் தன்மையது விண் இழிவது என்ன . - 3.5.32



2861 - கானின் உயர் கற்பகம் உயிர்த்த கதிர் வல்லி
மேனி நனி பெற்று விளை காமம் நிறை வாசத்
தேனின் மொழி உற்று , இனிய செவ்வி நனி பெற்று , ஓர்
மானின் விழி பெற்று , மயில் வந்தது என வந்தாள் . - 3.5.33



2862 - அவள் வரும் வழியை இராமன் நோக்குதல்
''நூபுரமும் , மேகலையும் , நூலும் அறல் ஓதிப்
பூ முரலும் வண்டும் இவை , பூசலிடும் ஓசை
தாம் , உரை செய்கின்றது ;'ஒரு தையல் வரும்’ '' என்னாக்
கோமகனும் , அத்திசை குறித்து எதிர் விழித்தான் . - 3.5.34



2863 - சூர்ப்பணகையின் அழகை இராமன் வியந்து காண்டல் (2863-2864)
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன
வண்ண முலை கொண்டு , இடை வணங்க வரு போழ்தத்து ,
எண் அருளி , ஏழைமை துடைத்து , எழும் மெய்ஞ்ஞானக்
கண் அருள்செய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான் . - 3.5.35



2864 - பேர் உழைய நாகர் உலகின் , பிறிது வானின்
பார் உழையின் இல்லது ஒரு மெல் உருவு பாரா ,
ஆர் உழை அடங்கும் ? அழகிற்கு அவதி உண்டோ ?
நேர் இழையர் யாவர் இவர் நேர் ? என நினைந்தான் . - 3.5.36



2865 - சூர்ப்பணகை இராமனை வணங்கி நிற்றல்
அவ்வயின் அவ் ஆசை தன் அகத்து உடைய அன்னாள் ,
செவ்வி முகம் முன்னி , அடி செங்கையின் இறைஞ்சா ,
வெவ்விய நெடுங்கண் அயில் வீசி , அயல் பாரா ,
நவ்வியின் ஒதுங்கி , இறை நாணி , அயல் நின்றாள் . - 3.5.37



2866 - இராமன் சூர்ப்பணகை உரையாடல் (2866-2884)
தீது இல் வரவு ஆக திரு ! நின் வரவு சேயோய் !
போத உளது எம் உழை ஓர் புண்ணியமது அன்றோ
ஏது பதி ? ஏது பெயர் ? யாவர் உறவு என்றான்
வேதமுதல் ; பேதை அவள் தன் நிலை விரிப்பாள் . - 3.5.38



2867 - 'பூவிலோன் புதல்வன் மைந்தன்
        புதல்வி ; முப் புரங்கள் செற்ற
சே வலோன் துணைவன் ஆன
        செங்கையோன் தங்கை ; திக்கின்
மா எலாம் தொலைத்து , வெள்ளி
        மலை எடுத்து , உலகம் மூன்றும்
காவலோன் பின்னை ; காம
        வல்லியாம் கன்னி 'என்றாள் . - 3.5.39



2868 - அவ்வுரை கேட்ட வீரன் .
        ஐயுறு மனத்தான் ,'செய்கை
செவ்விது அன்று ; அறிதல் ஆகும்
        சிறிதின் 'என்று உணரச்''செங்கண்
வெவ்வுரு அமைந்தோன் தங்கை ''
        என்றது மெய்ம்மை ஆயின் ,
இவ்வுரு இயைந்த தன்மை
        இயம்புதி இயல்பின் என்றான் . - 3.5.40



2869 - தூயவன் பணியாமுன்னம்
        சொல்லுவாள் , சோர்வு இலாள் : 'அம்
மாய வல் அரக்கரோடு
        வாழ்வினை மதிக்கலாதேன்
ஆய்வுறு மனத்தேன் ஆகி ,
        அறம் தலைநிற்பது ஆனேன் .
தீவினை தீய நோற்றுத்
        தேவரில் பெற்றது ' என்றாள் . - 3.5.41



2870 - 'இமையவர் தலைவனேயும் எளிமையின் ஏவல் செய்யும்
அமைதியின் , உலகம் மூன்றும் ஆள்பவன் தங்கை ஆயின் ,
சுமை உறு செல்வத்தோடும் தோன்றலை ; துணையும் இன்றித்
தமியை நீ வருதற்கு ஒத்த தன்மை என் ? தையல் !' என்றான் . - 3.5.42



2871 - வீரன் அஃது உரைத்தலோடும்
        மெய் இலாள் ,'விமல ! யான் அச்
சீரியர் அல்லார் மாட்டுச்
        சேர்கிலென் ; தேவர்பாலும்
ஆரிய முனிவர்பாலும்
        அடைந்தனென் ; இறைவ ! ஈண்டு ஓர்
காரியம் உண்மை நின்னைக்
        காணிய வந்தேன் 'என்றாள் . - 3.5.43



2872 - அன்னவள் உரைத்தலோடும் ,
        ஐயனும் ,'அறிதற்கு ஒவ்வா
நல் நுதல் மகளிர் சிந்தை
        நல் நெறிப் பால அல்ல ;
பின் இது தெரியும் 'என்னாப் ,
        'பெய் வளைத் தோளி ! என்பால்
என்ன காரியத்தை ? சொல் ; அஃது
        இயையுமேல் இழைப்பல் 'என்றான் . - 3.5.44



2873 - 'தாம் உறு காமத் தன்மை
        தாங்களே உரைப்பது என்பது
ஆம் எனல் ஆவது அன்றால் ,
        அருங்குல மகளிர்க்கு அம்மா !
ஏம் உறும் உயிர்க்கு நோவேன் ;
        என் செய்கேன் ? யாரும் இல்லேன் ;
காமன் என்று ஒருவன் செய்யும்
        வன்மையைக் காத்தி 'என்றாள் . - 3.5.45



2874 - சேண் உற நீண்டு , மீண்டு ,
        செவ்வரி சிதறி , வெவ்வேறு
ஏண் உற மிளிர்ந்து , நானா
        விதம் புரண்டு , இருண்ட வாள் கண்
பூண் இயல் கொங்கை அன்னாள்
        அம்மொழி புகறலோடும் ,
'நாண் இலள் ; ஐயன் , நொய்யள் ;
        நல்லளும் அல்லள் 'என்றான் . - 3.5.46



2875 - பேசலன் இருந்த வள்ளல்
        உள்ளத்தின் பெற்றி ஓராள் ,
பூசல் வண்டு அரற்றும் கூந்தல்
        பொய்ம் மகள் ,''புகன்ற என்கண்
ஆசை கண்டு அருளிற்று உண்டோ ?
        அன்று எனல் உண்டோ ? '' என்னும்
ஊசலின் உலாவுகின்றாள் ,
        மீட்டும் ஓர் உரையைச் சொல்வாள் . - 3.5.47



2876 - 'எழுதரு மேனியாய் ! ஈண்டு எய்தியது அறிந்திலாதேன் ,
முழுது உணர்முனிவர் ஏவல் செய் தொழில் முறையின் முற்றிப்
பழுது அறு பெண்மையோடும் இளமையும் பயனின்று ஏகப்
பொழுதொடு நாளும் வாளா கழிந்தன போலும் 'என்றாள் . - 3.5.48



2877 - 'நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள் : வினை மற்று எண்ணி
வந்தனள் ஆகும் 'என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான் ;
'சுந்தரி ! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால் ;
அந்தணர் பாவை நீ ; யான் அரசரில் வந்தேன் 'என்றான் . - 3.5.49



2878 - 'ஆரண மறையோன் எந்தை ; அருந்ததிக் கற்பின் எம்மோய் ,
தாரணி புரந்த சால கடங்கடர் மரபின் தையல் ;
போர் அணி பொலம் கொள் வேலாய் ! பொருந்தலை இகழ்தற்கு ஒத்த
காரணம் இதுவே ஆயின் , என் உயிர் காண்பென் 'என்றாள் . - 3.5.50



2879 - அருத்தியள் அனைய கூற , அகத்து உறு நகையின் வெள்ளைக்
குருத்து எழுகின்ற நீலக் கொண்டல் உண்டாட்டம் கொண்டான் ,
'''வருத்தம் நீங்கு அரக்கர் தம்மில் மானுடர் மணத்தல் , நங்கை !
பொருத்தம் அன்று '' என்று சாலப் புலமையோர் புகல்வர் 'என்றான் . - 3.5.51



2880 - 'பராவருஞ் சிரத்தை ஆரும் பத்தியின் பயத்தை ஓராது
''இராவணன் தங்கை '' என்றது ஏழைமைப்பாலது 'என்னா ,
'அராவணை அமலன் அன்னாய் ! அறிவித்தேன் முன்னம் ; தேவர்ப்
பராவினில் நீங்கினேன் அப் பழிபடு பிறவி 'என்றாள் . - 3.5.52



2881 - 'ஒருவனோ உலகம் மூன்றிற்கு ஓங்கு ஒரு தலைவன் ; ஊங்கின்
ஒருவனோ குபேரன் ; நின்னோடு உடன் பிறந்தவர்கள் ; அன்னார்
தருவரேல் , கொள்வென் ; அன்றேல் , தமியை வேறு இடத்துச் சார்தி ;
வெருவுவன் ; நங்கை ! 'என்றான் , வேதத்தின் அறிவை வென்றான் . - 3.5.53



2882 - 'காந்தர்ப்பம் என்பது உண்டால் : காதலின் கலந்த சிந்தை
மாந்தர்க்கும் மடந்தைமார்க்கும் மறைகளே வகுத்த கூட்டம் ,
ஏந்தல் பொன் தோளினாய் ! இ•து இயைந்தபின் , எனக்கு மூத்த
வேந்தர்க்கும் விருப்பிற்றாகும் ; வேறும் ஓர் உரை உண்டு 'என்றாள் . - 3.5.54



2883 - 'முனிவரோடு உடையர் முன்னே முதிர்பகை , முறைமை நோக்கார் ,
தனியை நீ ; ஆதலால் , மற்று அவரொடும் தழுவற்கு ஒத்த
வினையம் ஈது அல்லது இல்லை ; விண்ணும் நின் ஆட்சி ஆக்கி ,
இனியராய் அன்னர் வந்து உன் ஏவலின் நிற்பர் 'என்றாள் . - 3.5.55



2884 - இராமன் இகழ்ச்சிக் குறிப்பால் சிரித்தல்
'நிருதர்தம் அருளும் பெற்றேன் ; நின் நலம் பெற்றேன் ; நின்னோடு
ஒருவருஞ் செல்வத்து யாண்டும் உறையவும் பெற்றேன் ; ஒன்றோ ?
திருநகர் தீர்ந்த பின்னர்ச் செய் தவம் பயந்தது 'என்னா ,
வரி சிலை வடித்த தோளான் வாள் எயிறு இலங்க நக்கான் . - 3.5.56



2885 - சீதை வருதல்
விண் இடை , இம்பர் , நாகர் , விரிஞ்சனே முதலோர்க்கு எல்லாம்
கண்ணிடை ஒளியின் பாங்கர்க் கடி கமழ் சாலை நின்றும்
பெண்ணிடை அரசி , தேவர் பெற்ற நல் வரத்தால் , பின்னர்
மண்ணிடை மணியின் வந்த வஞ்சியே போல்வாள் வந்தாள் . - 3.5.57



2886 - சூர்ப்பணகை சீதையைக் கண்டு வியத்தல் (2886-2890)
ஊன் சுட உணங்கு பேழ் வாய் உணர்வு இலி , உருவம் நாறும்
வான் சுடர்ச் சோதி வெள்ளம் வந்து இடை வயங்கல் , நோக்கி ,
மீன் சுடர் விண்ணும் மண்ணும் விரிந்த போர் அரக்கர் என்னும்
கான் சுட முளைத்த கற்பின் கனலியைக் கண்ணின் கண்டாள் . - 3.5.58



2887 - 'மரு ஒன்று கூந்தலாளை வனத்து இவன் கொண்டு வாரான் ;
உரு இங்கு இது உடையர் ஆக மற்றையோர் யாரும் இல்லை ;
அரவிந்த மலருள் நீங்கி , அடி இணை படியில் தோயத்
திரு இங்கு வருவாள் கொல்லோ ? 'என்று அகம் திகைத்து நின்றாள் . - 3.5.59



2888 - பண்பு உற நெடிது நோக்கிப் ,''படைக்குநர் சிறுமை அல்லால் ,
எண் பிறங்கு அழகிற்கு எல்லை இல்லை ஆம் '' என்று நின்றாள் ;
''கண் பிற பொருளில் செல்லா ; கருத்து எனின் , அ•தே ; கண்ட
பெண் பிறந்தேனுக்கு என்றால் , என்படும் பிறருக்கு ? '' என்றாள் . - 3.5.60



2889 - 'பொரு திறத்தானை நோக்கிப் பூவையை நோக்கி , நின்றாள் ;
கருத மற்று இனி வேறு இல்லை ; கமலத்துக் கடவுள் தானே ,
ஒரு திறத்து உணர நோக்கி , உருவினுக்கு , உலகம் மூன்றின்
இரு திறத்தார்க்கும் , செய்த வரம்பு இவர் இருவர் 'என்றாள் . - 3.5.61



2890 - 'பொன்னைப் போல் பொரு இல் மேனிப்
        பூவைப்பூ வண்ணத்தான் , இம்
மின்னைப் போல் இடையாளோடும் மேவும்
        மெய் உடையன் அல்லன் ;
தன்னைப் போல் தகையோர் இல்லாத்
        தளிரைப் போல் அடியினாளும் ,
என்னைப் போல் இடையே வந்தாள் ;
        இகழ்விப்பென் இவளை 'என்னா . - 3.5.62



2891 - சீதையை அரக்கியெனல்
வரும் இவள் , மாயம் வல்லள் ; வஞ்சனை அரக்கி ; நெஞ்சம்
தெரிவு இலம் ; தேறும் தன்மை , சீரியோய் ! செயல் இது அன்றால் ,
உரு இது மெய்யது அன்றால் ; ஊன் நுகர் வாழ்க்கையாளை
வெருவினென் ; எய்திடாமல் விலக்குதி , வீர ! என்றாள் . - 3.5.63



2892 - சூர்ப்பணகையின் பொய்யுரை கேட்டு இராமன் சிரித்தல்
'ஒள்ளிது உன் உணர்வும் மின்னே ! உன்னை ஆர் ஒளிக்கும் மீட்டார் ?
தெள்ளிய நலத்தினால் உன் சிந்தனை தெரிந்தது ; அம்மா !
கள்ள வல் அரக்கி போலாம் இவளும் நீ காண்டி 'என்னா ,
வெள்ளிய முறுவல் முத்தம் வெளிப்பட வீரன் நக்கான் . - 3.5.64



2893 - சீதைமேல் அரக்கி வெகுளல்
ஆயிடை , அமுதின் வந்த , அருந்ததிக் கற்பின் அம் சொல்
வேய் இடை தோளினாளும் , வீரனைச் சேரும் வேலை ,
'நீ இடை வந்தது என்னை ? நிருதர்தம் பாவை 'என்னாக்
காய் எரி அனைய கள்ள உள்ளத்தான் கதித்தலோடும் . - 3.5.65



2894 - சீதை அஞ்சி இராமனைத் தழுவுதல்
அஞ்சினள் ; அஞ்சி அன்னம் , மின் இடை அலச ஓடிப்
பஞ்சின் மெல் அடிகள் நோவப் பதைத்தனள் ; பருவக் கால
மஞ்சு இடை வயங்கித் தோன்றும் பவளத்தின் வல்லி என்னக்
குஞ்சரம் அனைய வீரன் குவவுத் தோள் தழுவிக்கொண்டாள் . - 3.5.66



2895 - இராமன் சூர்ப்பணகையைக் கடிதல்
'வளை எயிற்றவர்களோடு வரும் விளையாட்டு என்றாலும் ,
விளைவன தீமையே ஆம் 'என்பதை உணர்ந்து , வீரன் ,
'உளைவன இயற்றல் ; ஒல்லை உன் நிலை உணருமாயின் ,
இளையவன் முனியும் ; நங்கை ! ஏகுதி விரைவின் 'என்றான் . - 3.5.67



2896 - சூர்ப்பணகையின் தற்புகழ்ச்சி
பொற்பு உடை அரக்கி ,'பூவில் , புனலினில் , பொருப்பில் , வாழும்
அற்பு உடை உள்ளத்தாரும் அநங்கனும் , அமரர் மற்றும்
எற்பெறத் தவம் செய்கின்றார் ; என்னை நீ இகழ்வது என்னே ?
நல் பொறை நெஞ்சின் இல்லாக் கள்வியை நச்சி 'என்றாள் . - 3.5.68



2897 - சீதையோடு இராமன் பன்னசாலை புகுதல்
'தன்னொடும் தொடர்வு இலாதேம் என்னவும் தவிராள் ; தான் இக்
கல் நெடு மனத்தி சொல்லும் கள்ள வாசகங்கள் 'என்னா ,
மின்னொடு தொடர்ந்து செல்லும் மேகம் போல் , மிதிலை வேந்தன்
பொன்னொடும் புனிதன் போய் , அப் பூம் பொழிற் சாலை புக்கான் . - 3.5.69



2898 - சூர்ப்பணகையின் காதல்நோய் (2898-2912)
புக்க பின் போயது என்னும் உணர்வினள் ; பொறையுள் நீங்கி
உக்கது ஆம் உயிரள் ; ஒன்றும் உயிர்த்திலள் ; ஒடுங்கிநின்றாள் ;
'தக்கிலன் ; மனத்துள் யாதும் தழுவிலன் ; சலமும் கொண்டான் ;
மைக் கருங்குழலினாள் மாட்டு அன்பினில் வலியன் 'என்பாள் . - 3.5.70



2899 - நின்றிலள் ; அவனைச் சேரும் நெறியினை நினைந்து போனாள் ;
'இன்று இவன் ஆகம் புல்லேன் எனின் , உயிர் இழப்பென் 'என்னாப்
பொன் திணி சரளச் சோலைப் பளிக்கறைப் பொதும்பர் புக்காள் ;
சென்றது , பரிதி மேல்பால் ; செக்கர் வந்து இறுத்தது அன்றே . - 3.5.71



2900 - அழிந்த சிந்தையள் ஆய் அயர்வாள் வயின் ,
மொழிந்த காமக் கடுங்கனல் மூண்டதால் ,
வழிந்த நாகத்தின் வன் தொளை வாள் எயிற்று
இழிந்த கார் விடம் ஏறுவது என்னவே . - 3.5.72



2901 - தாடகைக் கொடியாள் தட மார்பிடை ,
ஆடவர்க்கு அரசன் அயில் அம்புபோல் ,
பாடவத் தொழில் மன்மதன் பாய் கணை
ஓட , உட்கி , உயிர் உளைந்தாள் அரோ ! - 3.5.73



2902 - கலை உவாமதியே கறி ஆக , வன்
சிலையின் மாரனைத் தின்னும் நினைப்பினாள் ,
மலைய மாருதம் ஆம் நெடுங் கால வேல்
உலைய மார்பிடை ஊன்றிட , ஓயுமால் , - 3.5.74



2903 - அலைக்கும் ஆழி அடங்கிட , அங்கையான்
மலைக் குலங்களின் தூர்க்கும் மனத்தினாள் ,
நிலைக்கும் வானில் நெடுமதி நீள் நிலா
மலைக்க , நீங்கும் மிடுக்கினள் மாந்துவாள் . - 3.5.75



2904 - 'பூ எலாம் பொடி ஆக , இப் பூமியுள்
கா எலாம் ஒடிப்பென் 'எனக் காந்துவாள் ,
சேவலோடு உறை செந்தலை அன்றிலின்
நாவினால் வலி எஞ்ச , நடுங்குவாள் . - 3.5.76



2905 - 'அணைவு இல் திங்களை நுங்க அராவினைக்
கொணர்வென் , ஓடி 'எனக் கொதித்து உன்னுவாள் ,
பணை இன் மென் முலை மேல் பனி மாருதம்
புணர , ஆர் உயிர் வெந்து புழுங்குவாள் . - 3.5.77



2906 - கைகளால் , தன் கதிர் இளங் கொங்கை மேல்
ஐய தண் பனி அள்ளினள் அப்பினாள் ;
மொய் கொள் தீயிடை வெந்து முருங்கிய
வெய்ய பாறையில் வெண்ணெய் நிகர்க்கும் ஆல் . - 3.5.78



2907 - அளிக்கும் மெய் , உயிர் , காந்து அழல் அஞ்சினள் ,
குளிக்கும் நீரும் கொதித்து எழக் கூசுமால் ;
விளிக்கும் வேலையை , வெங்கண் அநங்கனை ,
ஒளிக்கல் ஆம் இடம் யாது ? என , உன்னுமால் . - 3.5.79



2908 - வந்து கார் மழை தோன்றினும் , மா மணிக்
கந்து காணினும் , கைத்தலம் கூப்புமால் ;
இந்துகாந்தத்தின் ஈர நெடுங்கலும்
வெந்து காந்த , வெதுப்புறு மேனியாள் . - 3.5.80



2909 - வாம மா மதியும் பனி வாடையும்
காமனும் தனைக் கண்டு உணராவகை
நாம வாள் எயிற்று ஓர் கத நாகம் வாழ்
சேம மால் வரையின் முழை சேருமால் . - 3.5.81



2910 - அன்ன காலை அழல் மிகுத்து ஏறலும்
முன்னின் மும்மடியாய் முலை வெந்து உக ,
இன்னவா செய்வது என்று அறியாது இளம்
பொன்னின் வார் தளிரில் புரண்டாள் அரோ . - 3.5.82



2911 - வீரன் மேனி வெளிப்பட , வெய்யவள் ,
கார் கொள் மேனியைக் கண்டனளாம் எனச்
சோரும் ; வெள்கும் ; துணுக்கெனும் ; அவ் உருப்
பேருங்கால் , வெம் பிணியிடைப் பேரும் ஆல் . - 3.5.83



2912 - ஆகக் கொங்கையின் , ஐயன் என்று , அஞ்சன
மேகத்தைத் தழுவும் ; அவை வெந்தன
போகக் கண்டு புலம்பும் ; அப்புன்மையாள்
மோகத்துக்கு ஓர் முடிவும் உண்டாங்கொலோ ? - 3.5.84



2913 - கவிக்கூற்று
'ஊழி வெம் கனல் உற்றனள் ஒத்தும் , அவ்
ஏழை ஆவி இறந்திலள் 'என்பர் ஆல் ;
'ஆழியானை அடைந்தனள் பின்னையும்
வாழலாம் எனும் ஆசை மருந்தினே . ' - 3.5.85



2914 - சூர்ப்பணகையின் காமமிக்க கழிபடர்கிளவி (2914-2916)
'வஞ்சனைக் கொடு மாயை வளர்க்கும் என்
நெஞ்சு புக்கென தாவத்தை நீக்கு 'எனும் ;
'அஞ்சனக் கிரியே ! அருளாய் 'எனும் ;
நஞ்சு நக்கினள் போல நடுங்குவாள் . - 3.5.86



2915 - 'காவியோ , கயலோ , எனும் கண் இணைத்
தேவியோ திருமங்கையின் செவ்வியாள் ;
பாவியேனையும் பார்க்குங்கொலோ ? 'எனும் ,
ஆவி ஓயினும் , ஆசையின் ஓய்வு இலாள் . - 3.5.87



2916 - 'மாண்ட கற்பு உடையாள் மலர் மார்பகம்
ஆண்டு இருக்கும் நல்லாள் மகள் 'என்னுமால் ;
வேண்டகிற்பின் அல்லால் அவர் மெய்யிடைத்
தீண்டகிற்பது அன்றோ ? தெறும் காமமே . - 3.5.88



2917 - சூரியன் உதித்தல்
ஆன்ற காதல் அஃது உற எய்துழி ,
மூன்று உலோகமும் மூடும் அரக்கராம்
ஏன்ற கார் இருள் நீக்க இராகவன்
தோன்றினான் என , வெய்யவன் தோன்றினான் . - 3.5.89



2918 - சூர்ப்பணகையின் எண்ணம் (2918-2920)
விடியல் காண்டலின் , ஈண்டு தன் உயிர் கண்ட வெய்யாள் ,
'படி இலாள் மருங்கு உள்ளளவு , எனை அவன் பாரான் ;
கடிதின் ஓடினென் எடுத்து , ஒல்லைக் கரந்து , அவள் காதல்
வடிவில் நான் உடன் வாழ்வதே மதி 'என மதியா . - 3.5.90



2919 - வந்து நோக்கினள் ; வள்ளல் போய் ஒரு மணித் தடத்தில்
சந்தி நோக்கினன் இருந்தது கண்டனள் ; தம்பி
இந்து நோக்கிய நுதலியைக் காத்து , அயல் இருண்ட
கந்தம் நோக்கிய சோலையில் இருந்தது காணாள் . - 3.5.91



2920 - தனி இருந்தனள் ; சமைந்தது என் சிந்தனை ; தாழ்வுற்று
இனி இருந்து எனக்கு எண்ணுவது இல் 'என , எண்ணாத்
துனி இருந்த வல் மனத்தினள் தோகையைத் தொடர்ந்தாள் ;
கனி இரும் பொழில் , காத்து அயல் இருந்தவன் கண்டான் . - 3.5.92



2921 - இலக்குவன் சூர்ப்பணகையின் உறுப்புக்களை அறுத்தல் (2921-2922)
'நில் அடீஇ 'எனக் கடுகினன் , பெண் என நினைந்தான் ;
வில் எடாது , அவள் வயங்கு எரி ஆம் என விரிந்த
சில் வல் ஓதியைச் செங்கையில் திருகுறப் பற்றி ,
ஒல்லை ஈர்த்து , உதைத்து , ஒளி கிளர் சுற்று வாள் உருவி . - 3.5.93



2922 - ஊக்கித் தாங்கி ,'விண் படர்வென் 'என்று உருத்து எழுவாளை
நூக்கி , நொய்தினின் ,'வெய்து இழையேல் 'என நுவலா ,
மூக்கும் , காதும் , வெம் முரண் முலைக் கண்களும் முறையால்
போக்கிப் போக்கிய சினத்தொடும் , புரி குழல் விட்டான் . - 3.5.94



2923 - உறுப்பறுப்புண்ட சூர்ப்பணகையின் நிலை (2923-2925)
அக் கணத்து அவள் வாய் திறந்து அரற்றிய அமலை
திக்கு அனைத்தினும் சென்றது ; தேவர்தம் செவியும்
புக்கது ; உற்றது புகல்வது என் ? மூக்கு எனும் புழையூடு
உக்க சோரியின் ஈரம் உற்று , உருகியது உலகம் . - 3.5.95



2924 - கொலை துமித்து உயர் கொடுங் கதிர் வாளின் அக் கொடியாள்
முலை துமித்து , உயர் மூக்கினை நீக்கிய முறைமை ,
மலை துமித்தென , இராவணன் மணி உடை மகுடத்
தலை துமித்தற்கு நாள் கொண்டது , ஒத்தது ஓர் தன்மை . - 3.5.96



2925 - அதிர , மா நிலத்து , அடி பதைத்து அரற்றிய அரக்கி ,
கதிர் கொள் கால வேல் கரன் முதல் நிருதர் , வெம் கதப் போர்
எதிர் இலாதவர் இறுதியின் நிமித்தமா எழுந்து , ஆண்டு ,
உதிர மாரி பெய் கார் நிற மேகம் ஒத்து உயர்ந்தாள் . - 3.5.97



2926 - சூர்ப்பணகையின் துன்பநிலை (2926-2928)
உயரும் விண்ணிடை ; மண்ணிடை விழும் ; கிடந்து உழைக்கும் ;
அயரும் ; கை குலைத்து அலமரும் ; ஆர் உயிர் சோரும் ;
பெயரும் ;'பெண் பிறந்தேன் பட்ட பிழை 'எனப் பிதற்றும் ;
துயரும் அஞ்சி முன் தொடர்ந்திலாத் தொல் குடிப் பிறந்தாள் . - 3.5.98



2927 - ஒற்றும் மூக்கினை ; உலை உறு தீ என உயிர்க்கும் ;
எற்றும் கையினை நிலத்தினில் ; இணைத் தடங் கொங்கை
பற்றும் ; பார்க்கும் ; மெய் வெயர்க்கும் ; தன் பரு வலிக் காலால்
சுற்றும் ஓடும் ; போய்ச் சோரி நீர் சொரிதரச் சோரும் . - 3.5.98



2928 - ஊற்று மிக்க நீர் அருவியின் ஒழுகிய குருதிச்
சேற்று வெள்ளத்துள் திரிபவள் , தேவரும் இரியக்
கூற்றும் உட்கும் தன் குலத்தினோர் பெயர் எலாம் கூறி ,
ஆற்றுகிற்கிலள் , பற்பல பன்னி நின்று , அழைத்தாள் . - 3.5.100



2929 - சூர்ப்பணகை தன் உறவினரை அழைத்தல் (2929-2941)
நிலை எடுத்து , நெடு நிலத்து நீ இருக்கத் தாபதர்கள்
சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ ? தேவர் எதிர்
தலை எடுத்து விழியாமைச் சமைப்பதே ? தழல் எடுத்தான் !
மலை எடுத்த தனி மலையே ! இவை காண வாராயோ ? - 3.5.101



2930 - ''புலிதானே புறத்து ஆகக் குட்டி கோட்படாது '' என்ன
ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை பொய்யோ ? ஊழியினும்
சலியாத மூவர்க்கும் , வானவர்க்கும் , தானவர்க்கும் ,
வலியானே ! யான் பட்ட வலி காண வாராயோ ? - 3.5.102



2931 - ஆர்த்து , ஆனைக்கு அரசு உந்தி , அமரர் கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது , அவனைப் போர் தொலைத்து ,
வேர்த்தானை , உயிர் கொண்டு மீண்டானை , வெரிந் பண்டு
பார்த்தானே ! யான் பட்ட பழி வந்து பாராயோ ? - 3.5.103



2932 - காற்றினையும் , புனலினையும் , கனலினையும் , கடுங் காலக்
கூற்றினையும் , விண்ணினையும் , கோளினையும் , பணி கோடற்கு
ஆற்றினை நீ , ஈண்டு இருவர் மானுடவர்க்கு ஆற்றாது
மாற்றினையோ ? உன் வலத்தைச் சிவன் தடக்கை வாள் கொண்டாய் ! - 3.5.104



2933 - உருப் படிவம் மன்மதனை ஒத்துளரே ஆயினும் , உன்
செருப்பு அடியில் பொடி ஒவ்வா மானிடரைச் சீறுதியோ ?
நெறுப்பு அடியில் பொடி சிதற நிறைந்த மதத் திசை யானை
மருப்பு ஒடியப் பொருப்பு இடியத் தோள் நிமிர்த்த வலியோனே ! - 3.5.105



2934 - தேன் உடைய நறுந்தெரியல் தேவரையும் தெறும் ஆற்றல்
தான் உடைய இராவணற்கும் , தம்பியர்க்கும் , தவிர்ந்ததோ ?
ஊன் உடைய உடம்பினராய் , எம் குலத்தோர்க்கு உணவு ஆய
மானுடவர் மருங்கே புக்கு ஒடுங்கினதோ வலி ? அம்மா ! - 3.5.106



2935 - மரன் ஏயும் நெடுங்கானின் மறைந்து உறையும் தாபதர்கள்
உரனேயோ ? அடல் அரக்கர் ஓய்வேயோ ? உற்று எதிர்ந்தார்
அரனேயோ ? அயனேயோ ? அரியேயோ ? எனும் ஆற்றல்
கரனேயோ ! யான் பட்ட கையறவு காணாயோ ? - 3.5.107



2936 - இந்திரனும் , மலர் அயனும் , இமையவரும் , பணி கேட்பச்
சுந்தரி பல்லாண்டு இசைப்ப , உலகு ஏழும் தொழுது ஏத்தச்
சந்திரன் போல் தனிக் குடைக் கீழ் நீ இருக்கும் சவை நடுவே
வந்து , அடியேன் நாணாது முகம் காட்ட வல்லேனோ ? - 3.5.108



2937 - உரன் நெரிந்து விழ என்னை உதைத்து உருட்டி , மூக்கு அரிந்த
நரன் இருந்து தோள் பார்க்க , நான் இருந்து புலம்புவதோ ?
கரன் இருந்த வனம் அன்றோ ? இவை படவும் கடவேனோ ?
அரன் இருந்த மலை எடுத்த அண்ணாவோ ! அண்ணாவோ ! - 3.5.109



2938 - 'நசையாலே மூக்கு இழந்து , நாணம் இலா நான் பட்ட
வசையாலே நினது புகழ் மாசுண்டது ஆகாதோ ?
திசையானை விசை கலங்கச் செருச் செய்து , மருப்பு ஒசித்த
இசையாலே நிறைந்த புயத்து இராவணவோ ! இராவணவோ ! - 3.5.110



2939 - 'கானம் அதின் இடை இருவர் , காதொடு மூக்கு உடன் அரிய ,
ஈனமதால் பாவியேன் , இவண் மடியக் கடவேனோ ?
தானவரைக் கரு அறுத்துச் சதமகனைத் தளையிட்டு
வானவரைப் பணி கொண்ட மருகாவோ ! மருகாவோ! ! ' - 3.5.111



2940 - 'ஒரு காலத்து , உலகு ஏழும் உருத்து எதிரத் தனு ஒன்றால் ,
திருகாத சினம் திருகித் திசை அனைத்தும் செல நூறி ,
இரு காலில் , புரந்தரனை இருஞ் சிறையின் இடுவித்த
மருகாவோ ! மானிடவர் வலி காண வாராயோ ? ' - 3.5.112



2941 - 'கல் ஈரும் படைத் தடக்கை அடல் , கர தூடணர் முதலா ,
அல் ஈரும் சுடர் மணிப் பூண் , அரக்கர் குலத்து அவதரித்தீர் !
கொல் ஈரும் படைக் கும்பகருணனைப்போல் , குவலயத்துள்
எல்லீரும் உறங்குதிரோ ? யான் அழைத்தல் கேளீரோ ? ' - 3.5.113



2942 - அப்பொழுது இராமன் வருதல்
என்று , இன்ன பல பன்னி , இகல் அரக்கி அழுது இரங்கிப்
பொன் துன்னும் படியகத்துப் புரள்கின்ற பொழுதகத்து ,
நின்று , அந்த நதியகத்து , நிறை தவத்தின் குறை முடித்து ,
வன் திண் கைச் சிலை நெடுந்தோள் மரகதத்தின் மலை வந்தான் . - 3.5.114



2943 - சூர்ப்பணகை தான் பட்டதை இராமனுக்குணர்த்தல்
வந்தானை முகம் நோக்கி , வயிறு அலைத்து , மழைக் கண்ணீர் ,
செந்தாரைக் குருதி கொடு செழுநிலத்தைச் சேறு ஆக்கி ,
'அந்தோ ! உன் திருமேனிக்கு அன்பு இழைத்த வன் பிழையால்
எந்தாய் ! யான் பட்டபடி இதுகாண் 'என்று எதிர் விழுந்தாள் . - 3.5.115



2944 - இராமன் வினா
விரிந்தாய கூந்தலாள் , வெய்ய வினை யாதானும்
புரிந்தாள் என்பது , தனது பொரு அரிய திரு மனத்தால்
தெரிந்தான் ; இன்று , இளையானே இவளை நெடுஞ் செவியொடு மூக்கு
அரிந்தான் என்பதும் உணர்ந்தான் ;'அம்மனை ! நீ யார் ? 'என்றான் , - 3.5.116



2945 - சூர்ப்பணகையின் விடை
அவ் உரை கேட்டு , அடல் அரக்கி'அறியாயோ நீ , என்னை ?
தெவ் உரை என்றோர் உலகும் இல்லாத சீற்றத்தான் ;
வெவ் இலை வேல் இராவணனாம் , விண் உலகம் முதலாக
எவ் உலகும் உடையானுக்கு உடன் பிறந்தேன் யான் 'என்றாள் . - 3.5.117



2946 - இராமன் வினாவும் சூர்ப்பணகையின் விடையும் (2946-2947)
'தாம் இருந்த தகை அரக்கர் புகல் ஒழியத் தவம் இயற்ற
யாம் இருந்த நெடுஞ் சூழற்கு என் செய வந்தீர் ? 'எனலும் ,
'வேம் இருந்தில் எனக் கனலும் வெம் காம வெம் பிணிக்கு
மா மருந்தே ! நெருநலினும் வந்திலனோ யான் ? 'என்றாள் . - 3.5.118



2947 - '''செங்கயல் போல் கரு நெடும் கண் , தேம்மரு தாமரை உறையும்
நங்கை இவர் '' என நெருநல் நடந்தவரோ நாம் ? 'என்னக்
'கொங்கைகளும் குழைக் காதும் கொடி மூக்கும் குறைத்து அழித்தால் ,
அங்கண் அரசே ! ஒருவர்க்கு அழியாதோ அழகு ? 'என்றாள் . - 3.5.119



2948 - இராமன் இலக்குவனை வினவுதல்
மூரல் முறுவலன் , இளைய மொய்ம்பினோன் முகம் நோக்கி ,
'வீர ! விரைந்தனை , இவள்தன் விடு காதும் , கொடி மூக்கும் ,
ஈர , நினைந்து இவள் இழைத்த பிழை என் ? 'என்று இறை வினவச்
சூர நெடுந்தகை அவனை அடி வணங்கிச் சொல்லுவான் : - 3.5.120



2949 - இலக்குவன் விடை
'தேட்டம் தான் வாள் எயிற்றில் தின்னவோ ? தீவினையோர்
கூட்டம் தான் புறத்து உளதோ ? குறித்த பொருள் உணர்ந்திலனால்
நாட்டம் தான் எரி உமிழ , நல்லாள் மேல் பொல்லாதாள்
ஓட்டந்தாள் ; அரிதின் இவள் உடன்று எழுந்தாள் 'என உரைத்தான் . - 3.5.121



2950 - சூர்ப்பணகை இடைமறித்துக் கூறுதல்
ஏற்ற வளை வரி சிலையோன் இயம்பாமுன் , இகல் அரக்கி ,
'சேற்ற வளை தன் கணவன் அருகு இருப்பச் சினம் திருகிச்
சூல் தவளை , நீர் உழக்கும் துறை கெழு நீர் வள நாடா !
மாற்றவளைக் கண்டக்கால் அழலாதோ மனம் ? 'என்றாள் . - 3.5.122



2951 - 'ஓடிப்போ 'என இராமன் சினந்துரைத்தல்
'பேடிப் போர் வல் அரக்கர் பெருங்குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம் ; இன்று , தீ மாற்றம் சில விளம்பி ,
வீடிப்போகாதே ; இம் மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப்போ 'என்று உரைத்த உரை கடந்தாற்கு , அவள் உரைப்பாள் . - 3.5.123



2952 - சூர்ப்பணகையின் சொல் (2952-2962)
'நிரை திரை என்று இல்லாத நான்முகனே முதல் அமரர்
கரை இறந்தோர் , இராவணற்குக் கரம் இறுக்கும் குடி என்றால் ,
விரையும் இது நன்று அன்று ; வேறு ஆக யான் உரைக்கும்
உரை உளது , நுமக்கு உறுதி உணர்வு உளதேல் 'என்று உரைப்பாள் . - 3.5.124



2953 - '''ஆக்கரிய மூக்கு , உங்கை அரியுண்டாள் '' என்றாரை
நாக்கு அரியும் தயமுகனார் ; நாகரிகர் அல்லாமை ,
மூக்கு அரிந்து நும் குலத்தை முதல் அரிந்தீர் ; இனி , உமக்குப்
போக்கு அரிது ; இவ் அழகை எல்லாம் புல்லிடையே உகுத்தீரே ! - 3.5.125



2954 - 'வான் காப்போர் , மண் காப்போர் , மா நாகர் வாழ் உலகம்
தான் காப்போர் , இனித் தங்கள் தலை காத்து நின்று , உங்கள்
ஊன் காக்க உரியார் யார் ? என்னை , உயிர் நீர் காக்கின் ,
யான் காப்பென் ; அல்லால் , அவ் இராவணனார் உளர் ! என்றால் . - 3.5.126



2955 - 'காவல் திண் கற்பு அமைந்தார் தம் பெருமை தாம் கழறார் ;
ஆவல் பேர் அன்பினால் , அறைகின்றேன் ஆம் அன்றோ ?
''தேவர்க்கும் வலியான் தன் திருத் தங்கையாள் இவள் ; ஈண்டு
ஏவர்க்கும் வலியாள் '' என்று , இளையானுக்கு இயம்பீரோ ? - 3.5.127



2956 - 'மாப் போரில் புறம் காப்பேன் ; வான் சுமந்து செல வல்லேன் ;
தூப் போல்வ கனி பலவும் சுவை உடைய தர வல்லேன் ;
காப்போரைக் கைத்து என் ? நீர் கருதியது தருவேன் ; இப்
பூப் போலும் மெல்லியலால் பொருள் என்னோ ? புகல்வீரே . - 3.5.128



2957 - 'குலத்தாலும் , நலத்தாலும் , குறித்தனவே கொணர்தக்க
வலத்தாலும் , மதியாலும் , வடிவாலும் , மடத்தாலும் ,
நிலத்தாரும் , விசும்பாரும் , நேரிழையார் , என்னைப்போல்
சொலத்தான் இங்கு உரியாரைச் சொல்லீரோ , வல்லீரேல் ? - 3.5.129



2958 - 'போக்கினீர் என் நாசி ; போய்த்து என் ? நீர் பொறுக்கிலிரேல் ,
ஆக்குவென் ஓர் நொடி வரையின் ; அழகு அமைவென் ; அருள்கூரும்
பாக்கியம் உண்டு எனின் , அதனால் , பெண்மைக்கு ஓர் பழுது உண்டோ ?
மேக்கு உயரும் நெடு மூக்கு மடந்தையர்க்கு மிகை அன்றோ ? - 3.5.130



2959 - 'விண்டாரே அல்லாரோ வேண்டாதார் நான் வேண்டின் ?
உண்டாய காதலின் , என் உயிர் என்பது உமது அன்றோ ?
கண்டாரே காதலிக்கும் கட்டழகும் விடம் அன்றோ ?
கொண்டாரே கொண்டாடும் உருப்பெற்றால் , கொள்ளீரோ ? - 3.5.131



2960 - 'சிவனும் , மலர்த் திசைமுகனும் , திருமாலும் , தெறு குலிசத்து
அவனும் , அடுத்து ஒன்றகி நின்றன்ன உருவோனே !
புவனம் அனைத்தையும் , ஒரு தன் பூங்கணையால் உயிர் வாங்கும்
அவனும் , உனக்கு இளையானோ ? இவனே போல் அருள் இலனால் . - 3.5.132



2961 - 'பொன் உருவப் பொரு கழலீர் ! புழை காண ,
        மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ ?
''இன் உருவம் இது கொண்டு , இங்கு இருந்தொழியும்
        நம் மருங்கே ; ஏகாள் அப்பால் ;
பின் , இவளை அயல் ஒருவர் பாரார் '' என்றே
        அரிந்தீர் ; பிழை செய்தீரோ ?
அன்னதனை அறிந்து அன்றோ , அன்பு இரட்டி
        பூண்டது ? நான் அறிவிலேனோ ? - 3.5.133



2962 - 'வெப்பு அழியா நெடு வெகுளி வேல் அரக்கர்
        ஈது அறிந்து வெகுண்டு நோக்கின் ,
அப்பழியால் , உலகு அனைத்தும் , நும்
        பொருட்டால் அழிந்தனவாம் ; அறத்தை நோக்கி ,
ஒப்பு அழியச் செய்கிலார் உயர் குலத்துத்
        தோன்றினோர் ; உணர்ந்து நோக்கி ,
இப்பழியைத் துடைத்து உதவி , இனிது இருத்திர் ,
        என்னொடும் 'என்று , இறைஞ்சி நின்றாள் . - 3.5.134



2963 - இராமன் வெகுண்டு அச்சுறுத்தியது (2963-2965)
'நாடு அறியாத் துயர் இழைத்த நவை அரக்கி ,
        நின் அன்னை தன்னை நல்கும்
தாடகையை , உயிர் கவர்ந்த சரம் இருந்தது ;
        அன்றியும் , நான் தவம் மேற்கொண்டு ,
தோள் தகைய துறு மலர்த் தார் இகல் அரக்கர்
        குலம் தொலைப்பான் , தோன்றி நின்றேன் ;
போடு , அகலப் புல் ஒழுக்கை ; வல் அரக்கி ! '
        என்று இறைவன் புகலும் பின்னும் . - 3.5.135



2964 - 'தரை அளித்த தனி நேமித் தயரதன் தன்
        புதல்வர் யாம் ; தாய்சொல் தாங்கி ,
விரை அளித்த கான் புகுந்தேம் ; வேதியரும்
        மாதவரும் வேண்ட , நீண்டு
கரை அளித்தற்கு அரிய படைக் கடல் அரக்கர்
        குலம் தொலைத்துக் கண்டாய் , பண்டை
வரை அளித்த குல மாட நகர் புகுவேம் ; இவை
        தெரிய மனக்கொள் 'என்றான் . - 3.5.136



2965 - '''நெறித் தாரை செல்லாத நிருதர் எதிர்
        நில்லாதே , நெடிய தேவர்
மறித்தார் ; ஈண்டு இவர் இருவர் ; மானிடவர் ''
        என்னாது , வல்லை ஆகின் ,
வெறித் தாரை வேல் அரக்கர் , விறல் இயக்கர்
        முதலினர் , நீ மிடலோர் என்று
குறித்தாரை யாவரையும் , கொணருதியேல் ,
        நின் எதிரே கோறும் 'என்றான் . - 3.5.137



2966 - சூர்ப்பணகை மீண்டும் வற்புறுத்தல் (2966-2969)
'கொல்லலாம் ; மாயங்கள் குறித்தனவே
        கொள்ளலாம் ; கொற்றம் முற்ற
வெல்லலாம் ; அவர் இயற்றும் வினை எல்லாம்
        கடக்கலாம் ;''மேல்வாய் நீங்கிப்
பல் எலாம் உறத் தோன்றும் பகுவாயள் ''
        என்னாது , பார்த்தி ஆயின் ,
நெல் எலாம் சுரந்து அளிக்கும் நீர் நாட !
        கேள் 'என்று , நிருதி கூறும் . - 3.5.138



2967 - 'காம்பு அறியும் தோளாளைக் கைவிடீர் எனினும் ,
        யான் மிகையோ ? கள்வர்
ஆம் , பொறி இல் அடல் அரக்கர் அவரோடே
        செருச் செய்வான் அமைந்தீராயின் ,
தாம் பொறியின் பல மாயம் தரும் பொறிகள்
        அறிந்து , அவற்றைத் தடுப்பென் அன்றே ?
''பாம்பு அறியும் பாம்பின்கால் '' என மொழியும்
        பழமொழியும் பார்க்கிலீரோ ? - 3.5.139



2968 - 'உளம் கோடல் உனை இழைத்தாள் உளள்
        ஒருத்தி என்னுதியேல் , நிருதரோடும்
களம் கோடற்கு உரிய செருக் கண்ணியக்கால்
        ஒரு மூவேம் கலந்த காலைக்
குளம் கோடும் என்றிதுவும் உறுகோளே ?
        என்று உணரும் குறிக்கோள் இல்லா
இளங்கோவோடு எனை இருத்தின் இருகோளும்
        சிறைவைத்தாற்கு இளையேன் 'என்றாள் . - 3.5.140



2969 - 'பெருங்குலா உறு நகர்க்கே ஏகும் நாள் வேண்டும்
        உருப் பிடிப்பேன் நன்றே ;
அருங்கலாம் உற்று அரிந்தான் என்னினும்
        ஈங்கு இளையவன்தான் அரிந்த நாசி
ஒருங்கு இலா இவளோடும் உறைவேனோ ?
        என்பானேல் இறைவ ! ஒன்றும்
மருங்கு இலாதவளோடும் அன்றோ நீ
        நெடும் காலம் வாழ்ந்தது ? என்பாய் . - 3.5.141



2970 - இலக்குவன் அவளைக் கொல்ல எண்ணுதல்
என்றவள்மேல் , இளையவன்தான் இலங்கு
        இலைவேல் கடைக்கணியா ,'இவளை ஈண்டுக்
கொன்று களையேம் என்றால் , நெடிது அலைக்கும் ;
        அருள் என் கொல் ? கோவே ! 'என்ன ,
'நன்று , அதுவே ஆம் அன்றோ ? போகாளேல்
        ஆக ! 'என நாதன் கூற ,
'ஒன்றும் இவர் எனக்கு இரங்கார் ; உயிர்
        இழப்பென் , நிற்கின் 'என , அரக்கி உன்னா . - 3.5.142



2971 - சூர்ப்பணகை அவர்களை அச்சுறுத்திச் செல்லுதல்
'ஏற்ற நெடுங் கொடி மூக்கும் , இரு காதும்
        முலை இரண்டும் , இழந்தும் வாழ
ஆற்றுவனே ? வஞ்சனையால் , உமை உள்ள
        பரிசு அறிவான் அமைந்தது அன்றோ ?
காற்றினிலும் கனலினிலும் கடியானைக்
        கொடியானைக் கரனை , உங்கள்
கூற்றுவனை , இப்பொழுதே கொணர்கின்றேன் '
        என்று சலம் கொண்டு போனாள் . - 3.5.143

-----------------

3.6 . கரன்வதைப் படலம் (2972 -3163 )




2972 - சூர்ப்பணகை கரன் முன் விழுந்து புரளுதல் (2972-2973)
இருந்த மாக் கரன் தாள் இணையின் மிசைச்
சொரிந்த சோரியள் , கூந்தலள் , தூம்பு எனத்
தெரிந்த மூக்கினள் , வாயினள் , செக்கர் மேல்
விரிந்த மேகம் என விழுந்தாள் ; அரோ . - 3.6.1



2973 - 'அழுங்கும் நாள் இது 'என்று அந்தகன் ஆணையால்
தழங்கு பேரி எனத் தனித்து ஏங்குவாள் ,
முழங்கும் மேகம் இடித்த வெம் தீயினால்
புழுங்கும் நாகம் எனப் புரண்டாள் அரோ ! - 3.6.2



2974 - கரன் வினவுதல்
வாக்கின் கோபப் புகை முந்து வாயினான் ,
நோக்கிக்'கூசலர் , நுன்னை இத்தன்மையை
ஆக்கிப் போனவர் , ஆர்கொல் ? 'என்றான் ; அவள்
மூக்கின் சோரி முழீஇக்கொண்ட கண்ணினான் . - 3.6.3



2975 - சூர்ப்பணகை கூறுதல் (2975-2978)
இருவர் , மானிடர் , தாபதர் , ஏந்திய
வரி வில் வாள் கையர் , மன்மதன் மேனியர் ,
தரும நீரர் , தயரதன் காதலர் ,
செருவில் நேரும் நிருதரைத் தேடுவார் . - 3.6.4



2976 - ஒன்றும் நோக்கலர் உன் வலி , ஓங்கு அறம்
நின்று நோக்கி நிறுத்தும் நினைப்பினார் ,
'வென்றி வேல் கை நிருதரை வேர் அறக்
கொன்று நீக்குதும் 'என்று உணர் கொள்கையார் . - 3.6.5



2977 - மண்ணில் நோக்கரு வானினில் மற்றினின்
எண்ணில் நோக்கு உறின் யாவரும் நேர்கிலாப்
பெண்ணின் நோக்கு உடையாள் ஒரு பேதை , என்
கண்ணின் நோக்கி உரைப்பருங் காட்சியாள் . - 3.6.6



2978 - 'கண்டு , நோக்கரும் காரிகையாள் தனைக்
கொண்டு போவன் இலங்கையர் கோக்கு எனா
விண்டு மேல் விழுந்தேனை , வெகுண்டு , அவர் ,
துண்டம் ஆக்கினர் மூக்கு 'எனச் சொல்லினாள் . - 3.6.7



2979 - கரன் வெகுண்டெழுதல் (2979-2980)
கேட்டனன் உரை ; கண்டனன் , கண்ணினால்
தோட்ட நுங்கில் தொளை உறும் மூக்கினை ;
'காட்டு 'எனா எழுந்தான் ; எதிர் கண்டவர்
நாட்டம் தீய உலகை நடுக்குவான் . - 3.6.8



2980 - எழுந்து நின்று , உலகு ஏழும் எரிந்து உகப்
பொழிந்த கோபக் கனல் உகப் பொங்குவான் ,
'''கழிந்துபோயினர் மானிடர் '' என்னுங்கால் ,
அழிந்ததோ ? இவ் அரும்பழி 'என்னுமால் . - 3.6.9



2981 - கரன் போர்க்கு எழ , அடுத்திருந்த வீரர் பதினால்வர் போர்ப்பணி தமக்குத் தருமாறு வேண்டல் (2981-2983)
'வருக தேர் 'எனும் மாத்திரை மாடு உளோர் ,
இரு கை மால் வரை ஏழினொடு ஏழ் அனார் ,
ஒரு கையால் உலகு ஏந்தும் உரத்தினார் ,
'தருக இப்பணி எம் வயின் 'தான் என்றார் . - 3.6.10



2982 - சூலம் வாள் மழுத் தோமரம் சக்கரம்
காலபாசம் கதை பொரு கையினார் ;
வேலை ஞாலம் வெரு உறும் ஆர்ப்பினார் ;
ஆலகாலம் திரண்டன்ன ஆக்கையார் . - 3.6.11



2983 - வெம்பு கோபக் கனலர் விலக்கினார் ;
'நம்பி ! எம் அடிமைத்தொழில் நன்று ! 'எனா
'உம்பர்மேல் இன்று உருத்தனை போதியோ ?
இம்பர்மேல் இனி யாம் உளெமோ ? 'என்றார் . - 3.6.12



2984 - கரன் , வீரர் வேண்டுகோட்கு இசைதல்
'நன்று சொல்லினிர் ! நான் இச் சிறார்கள் மேல்
சென்று போர் செயின் , தேவர் சிரிப்பரால் ;
கொன்று , சோரி குடித்து , அவர் கொள்கையை
வென்று , மீளுதிர் மெல்லியலோடு 'என்றான் . - 3.6.13



2985 - கரன் வீரர் பதினால்வரும் இராமனிருக்குமிடம் அடைதல்
என்னலோடும் விரும்பி இறைஞ்சினார் ,
சொன்ன நாண் இலி அந்தகன் தூது என ,
அன்னள் பின் படர்வார் என ஆயினார் ,
மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார் . - 3.6.14



2986 - சூர்ப்பணகை வீரர்க்கு இராமனைக் காட்டுதல்
துமிலப் போர் வல் அரக்கர்க்குச் சுட்டினாள் ,
அமலத் தொல் பெயர் ஆயிரத்து ஆழியான்
நிமலப் பாதம் நினைவின் இருந்த அக்
கமலக் கண்ணனைக் கையினில் காட்டினாள் . - 3.6.15



2987 - கரன்வீரர் இராமனை வளைதல்
'எற்றுவாம் பிடித்து ஏந்தினம் 'என்குநர் ,
'பற்றுவாம் நெடும் பாசத்தின் 'என்குநர் ,
'முற்றுவாம் இறை சொல் முறையால் 'எனாச்
சுற்றினார் வரை சூழ்ந்தன்ன தோற்றத்தார் . - 3.6.16



2988 - இராமன் போர்க்கு எழுதல்
ஏத்து வாய்மை இராமன் , இளவலைக்
'காத்தி தையலை 'என்று , தன் கற்பகம்
பூத்தது அன்ன பொரு இல் தடக்கையால்
ஆத்த நாணின் அருவரை வாங்கினான் . - 3.6.17



2989 - இராமன் கரன் வீரரொடு பொருதல் (2989-2990)
வாங்கி , வாளொடு வாளி பெய் புட்டிலும்
தாங்கித் தாமரைக் கண்ணன் , அச் சாலையை
நீங்கி ,'இவ்வழி நேர்மின் அடா 'எனா ,
வீங்கு தோளன் , மலைதலை மேயினான் . - 3.6.18



2990 - மழுவும் , வாளும் , வயங்கு ஒளி முச்சிகைக்
கழுவும் , கால வெம் தீ அன்ன காட்சியார்
எழுவின் நீள் தடக் கை எழு நான்கையும் ,
தழுவும் வாளிகளால் தலம் சார்த்தினான் . - 3.6.19



2991 - வீரர் இறந்துபடச் சூர்ப்பணகை கரனிடம் செல்லுதல்
மரங்கள்போல் நெடு வாளொடு தோள் விழ ,
உரங்களான் அடர்ந்தார் ; உரவோன் விடு
சரங்கள் ஓடின தைக்க , அரக்கர்தம்
சிரங்கள் ஓடின ; தீயவள் ஓடினாள் . - 3.6.20



2992 - வீரர் இறந்தமை சூர்ப்பணகை கரன்பாற் கூறல்
ஒளிறு வேல் கரற்கு உற்றது உணர்த்தினாள் ;
குளிறு கோப வெம் கோள் அரிமா அடக்
களிறு எலாம் படக் கை தலைமேல் உறப்
பிளிறி ஓடும் பிடி அன்ன பெற்றியாள் . - 3.6.21



2993 - கரன் வெகுளுதல்
'அங்கு அரக்கர் அவிந்து ஒழிந்தார் 'எனப்
பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக
வெம் கரப் பெயரோன் வெகுண்டான் ; விடைச்
சங்கரற்கும் தடுப்பருந் தன்மையான் . - 3.6.22



2994 - கரன் கட்டளை
'அழை என் தேர் ';'எனக்கு ஆக்கு வன் போர்ப் படை ';
'உழையர் ஓடி , ஒரு நொடி ஓங்கல் மேல்
மழையின் மா முரசு எற்றுதிர் வல் ;' என்றான் ,
முழையின் வாள் அரி அஞ்ச முழங்குவான் . - 3.6.23



2995 - தேர்ப்படை திரளுதல்
பேரி ஓசை பிறத்தலும் , பெட்பு உறும்
மாரி மேகம் வரம்பு இல வந்தெனத்
தேரின் சேனை திரண்டது ; தேவர்தம்
ஊரும் நாகர் உலகும் உலைந்தவே . - 3.6.24



2996 - காலாட்படை திரளுதல் (2996-3000)
போர்ப் பெரும் படை , பொம்மென் முழக்கமா
நீர்த் தரங்கம் நெடுந்தடம் தோள்களா
ஆர்த்து எழுந்தது ; இறுதியின் ஆர்கலிக்
கார்க் கரும் கடல் கால் கிளர்ந்து என்ன ஏ . - 3.6.25



2997 - காடு துன்றி விசும்பு கரந்தென
நீடி , எங்கும் நிரந்த நெடும் கொடி ,
'ஓடும் எங்கள் பசி 'என்று உவந்து , எழுந்து ,
ஆடுகின்ற அலகையின் ஆடவே . - 3.6.26



2998 - தறியின் நீங்கிய தாழ் தடக் கைத் துணைக்
குறி கொளா மத வேழக் குழு அனார்
செறிவின் வாளொடு வாள் இடை தேய்ந்து உகும்
பொறியின் கான் எங்கும் வெம் கனல் பொங்கவே . - 3.6.27



2999 - முருடு இரண்டும் முழங்குறத் தாக்கு ஒலி ,
உருள் திரண்டு எழும் தேர் ஒலியுள் புக ,
அருள் திரண்ட அருக்கன்றன் மேல் அழன்று
இருள் திரண்டு வந்து ஈண்டியது என்னவே . - 3.6.28



3000 - தலையில் மாசுணம் தாங்கிய தாரணி
நிலை நிலாது முதுகை நெளிப்பு உற ,
உலைவு இல் ஏழ் உலகத்தினும் ஓங்கிய
மலை எலாம் ஒரு மாடு தொக்க என்ன ஏ . - 3.6.29



3001 - வீரர் தோற்றமும் தொகையும்
வல்லியக் குழாங்களோ ? மழையின் ஈட்டமோ ?
ஒல் இபத் தொகுதியோ ? ஓங்கும் ஓங்கலோ ?
அல்ல , மற்று அரிகளின் அனிகமே எனப்
பல் பதினாயிரம் படைக் கை வீரரே . - 3.6.30



3002 - தேர்களின் அமைதி (3002-3003)
ஆளிகள் பூண்டன , அரிகள் பூண்டன ,
மீளிகள் பூண்டன , வேங்கை பூண்டன ,
ஞாளிகள் பூண்டன , நரிகள் பூண்டன ,
கூளிகள் பூண்டன , குதிரை பூண்டன . - 3.6.31



3003 - ஏற்றினம் ஆர்த்தன , ஏனம் ஆர்த்தன ,
காற்று இனம் ஆர்த்தன கழுதை ஆர்த்தன ,
தோற்றின மாத்திரத்து உலகு சூழ்வரும்
பாற்றினம் ஆர்த்தன , பணிலம் ஆர்த்தன . - 3.6.32



3004 - நால்வகைப் படையும் பெயர்தல்
தேரினம் துவன்றின , சிறுகண் செம்முகக் காரினம்
நெருங்கின , காலின் கால் வரு
தாரினம் குழுமின , தடை இல் கூற்று அன்ன
பேர் இனம் கடல் எனப் பெயருங்காலையே . - 3.6.33



3005 - படைக்கலங்கள் செறிதல் (3005-3007)
மழுக்களும் அயில்களும் வயிர வாள்களும்
எழுக்களும் தோமரத் தொகையும் ஈட்டியும்
முழுக் கலும் முசுண்டியும் தண்டும் முத்தலைக்
கழுக்களும் உலக்கையும் காலபாசமும் . - 3.6.34



3006 - குந்தமும் குலிசமும் கோலும் பாலமும்
அந்தம் இல் சாபமும் சரமும் ஆழியும்
வெம் தொழில் வலயமும் விளங்கு சங்கமும்
பந்தமும் கப்பணப் படையும் பாசமும் . - 3.6.35



3007 - ஆதிய , அருக்கனும் அனலும் அஞ்சுறும்
சோதிய , சோரியும் தூவும் துன்னிய ,
ஏதிகள் மிடைந்தன ; இமையவர்க்கெலாம்
வேதனை கொடுத்தன வாகை வேய்ந்தன . - 3.6.36



3008 - சேனைத்தலைவர் திறலும் தொகையும்
ஆயிரம் ஆயிரம் களிற்றின் ஆற்றலர் ,
மாயிரு ஞாலத்தை விழுங்கும் வாயினர் ,
தீ எரி விழியினர் , நிருதர் சேனையின்
நாயகர் , பதின்மரோடு அடுத்த நால்வரே . - 3.6.37



3009 - திரண்ட சேனையின் அளவு
'ஆறினோடு ஆயிரம் அமைந்த ஆயிரம்
கூறின ஒரு படை ; குறித்த அப்படை
ஏறினது ஏழினது இரட்டி 'என்பரால் ,
ஊறின சேனையின் தொகுதி உன்னுவார் . - 3.6.38



3010 - சேனை வீரர் திறம் (3010-3017)
உரத்தினர் , உருமென உரறும் வாயினர் ,
கரத்து எறி படையினர் , கமலத்தோன் தரும்
வரத்தினர் , மலை என மழை துயின்று எழு
சிரத்தினர் , தருக்கினர் , செருக்கும் சிந்தையார் . - 3.6.39



3011 - விண் அளவிட நிமிர்ந்து உயர்ந்த மேனியர் ,
கண் அளவிடல் அரு மார்பர் , காலினால்
மண் அளவிடும் நெடுவலத்தர் , வானிடை
எண் அளவிடல் அரும் செரு வென்று ஏறினார் . - 3.6.40



3012 - இந்திரன் முதலினோர் எறிந்த மாப் படை ,
சிந்தின தெறித்து உகச் செறிந்த தோளினார் ;
அந்தகன் அடி தொழுது அடங்கும் ஆணையார் ;
வெம் தழல் உருவுகொண்டனைய மேனியார் . - 3.6.41



3013 - சூலமும் பாசமும் தொடர்ந்த செம் மயிர்ச்
சாலமும் தறுகணும் எயிறும் தாங்கினார் ,
ஆலமும் வெளிது எனும் நிறத்தர் , ஆற்றலால்
காலனும் காலன் என்று அயிர்க்கும் காட்சியார் . - 3.6.42



3014 - கழலினர் , தாரினர் , கவச மார்பினர் ,
நிழல் உறு பூணினர் , நெறித்த நெற்றியர் ,
அழல் உறு குஞ்சியர் , அமரை வேட்டு உவந்து
எழல் உறும் மனத்தினர் , ஒருமை எய்தினார் . - 3.6.43



3015 - மருப்பு இறா மதக் களிற்று அமரர் மன்னனும் ,
விருப்பு உறா முகத்து எதிர் விழிக்கின் , வெந்நிடும் ;
உருப் பொறாது உலைவுறும் உலகம் ; ஊன் தினும்
செருப் பெறாத் தினவு உறு சிகரத் தோளினார் . - 3.6.44



3016 - குஞ்சரம் குதிரை பேய் குரங்கு கோள் அரி
வெம் சினக் கரடி நாய் வேங்கை யாளி என்று
அஞ்சுறக் கனல் புரை முகத்தர் , ஆர்கலி
நஞ்சு தொக்கெனப் புரை நயனத்தார்களும் . - 3.6.45



3017 - எண் கையர் , எழு கையர் , ஏழும் எட்டும் ஆய்க்
கண் கனல் சொரிதரும் முகத்தர் , காலினர் ,
வண் கையின் வளைத்து , உயிர் வாரி , வாயின் இட்டு
உண் கையின் உவகையர் , உலப்பு இலார்களும் . - 3.6.46



3018 - கொடி முதலியவை செறிந்தமை (3018-3019)
இயக்கரில் பறித்தன , அவுணர் இட்டன ,
மயக்கு உறுத்து அமரரை வலியின் வாங்கின ,
துயக்கு இல் கந்தர்ப்பரைத் துரந்து வாரின ,
நயப்பு உறு சித்தரை நலிந்து வவ்வின . - 3.6.47



3019 - கொடி , தழை , கவிகை , வான் தொங்கல் , குஞ்சரம்
படியுறு பதாகை , மீ விதானம் , பல்வகை
இடை இலாது எங்கணும் இசைய , மீமிசை
மிடைதலின் , உலகு எலாம் வெயில் இழக்கவே . - 3.6.48



3020 - சேனைத் தலைவர் திறம் (3020-3021)
எழுவரொடு எழுவர் , ஆம் உலகம் ஏழொடு ஏழ்
தழுவிய வென்றியர் , தலைவர் தானையர் ,
மழுவினர் , வாளினர் , வயங்கு சூலத்தர் ,
உழுவையொடு அரியென உடற்றும் சீற்றத்தார் . - 3.6.49



3021 - வில்லினர் , வாளினர் , இதழின்மீது இடு
பல்லினர் , மேருவைப் பறிக்கும் ஆற்றலர் ,
புல்லினர் , திசைதொறும் ; புரவித் தேரினர்
சொல்லின முடிக்குறும் துணிவின் நெஞ்சினார் . - 3.6.50



3022 - கரனைத் தூடணன் முதலியோர் சூழ்தல்
தூடணன் திரிசிராத் தோன்றல் ஆதியர் ,
கோடு அணை முரசினம் குளிறு சேனையர் ,
ஆடவர் உயிர் கவர் அலங்கல் வேலினர் ,
பாடவ நிலையினர் , பலரும் சுற்றினர் . - 3.6.51



3023 - படை சூழநின்ற கரனுடைய தோற்றம்
ஆன்று அமை எறி படை அழுவத்து , ஆர்கலி
வான் தொடர் மேருவை வளைத்தது ஆம் என ,
ஊன்றின தேரினன் , உயர்ந்த தோளினன் ,
தோன்றினன் ; யாவரும் துணுக்கம் எய்தவே . - 3.6.52



3024 - கரன்படை இராமனிருக்கும் இடம் நோக்கிச் செல்லுதல் (3024-3028)
அசும்பு உறு மத கரி , புரவி , ஆடகத்
தசும்பு உறு சயந்தனம் , அரக்கர் , தாள் தர
விசும்பு உறு தூளியான் வெண்மை மேயின
பசும் பரி பகலவன் பைம்பொன் தேர் அரோ . - 3.6.53



3025 - வனம் துகள் பட்டன ; மலையின் வான் உயர்
கனம் துகள் பட்டன ; கடல்கள் தூர்ந்தன ;
இனம் தொகு தூளியால் , இசைப்பது என் ? இனிச்
சினம் தொகு நெடுங் கடல் சேனை செல்லவே . - 3.6.54



3026 - நிலை மிசை விசும்பிடை நெருக்கலால் , நெடு
மலைமிசை , மலையினம் வருவ போல் , மலைத்
தலைமிசைத் தலைமிசைத் தாவிச் சென்றனர் ;
கொலை மிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார் . - 3.6.55



3027 - வந்தது சேனை வெள்ளம்
        வள்ளியோன் மருங்கு ; மாயா
பந்த மா வினையம் மாளப்
        பற்று அறு பெற்றியோர்க்கும்
உந்தரு நிலையது ஆகி ,
        உடன் உறைந்து , உயிர்கள் தம்மை
அந்தகற்கு அளிக்கும் நோய் போல்
        அரக்கி முன் ஆக , அம்மா ! - 3.6.56



3028 - தூரியக் குரலின் வானின்
        முகில் குலம் துணுக்கம் கொள்ள ,
வார் சிலை ஒலியின் அஞ்சி ,
        உருமெலாம் மறுக்கம் கொள்ள
ஆர்கலி ஆர்ப்பின் உட்கி ,
        அசைவு உற , அரக்கர் சேனை ,
போர் வனத்து இருந்த வீரர்
        உறைவிடம் புக்கது அன்றே . - 3.6.57



3029 - கரன் படைவரவுகண்ட புள் விலங்கு முதலியவற்றின் தோற்றம்
வாய் புலர்ந்து அழிந்த , மெய்யின்
        வருத்தத்த , வழியின் யாண்டும்
ஓய்வு இல , நிமிர்ந்து வீங்கும்
        உயிர்ப்பின , உலைந்த கண்ண ,
தீயவர் சேனை வந்து
        சேர்ந்தமை , தெரியச் சென்று ,
வேய் தெரிந்து உரைப்ப போன்ற
        புள்ளொடு விலங்கும் அம்மா ! - 3.6.58



3030 - கரன் சேனையின் வரவறிந்து இலக்குவன் போர்க்கு எழ இராமன்
அவனைத் தடுத்துத் தானே போர்க்கு எழுதல் (3030-3036)
தூளியின் படலை வந்து
        தொடர்வுற , மரமும் தூறும்
தாளிடை ஒடியும் ஓசை ,
        சடசட ஒலிப்பக் கானத்து
ஆளியும் அரியும் அஞ்சி ,
        இரிதரும் அமலை நோக்கி ,
மீளி மொய்ம்பின் அருஞ்சேனை
        மேல்வந்தது உளது என்று உன்னா . - 3.6.59



3031 - மின் நின்ற சிலையன் வீரக்
        கவசத்தன் விசித்த வாளன்
பொன் நின்ற வடிம்பின் வாளிப்
        புட்டிலன் புகையும் நெஞ்சன் ,
'நில் ; நின்று காண்டி ; யான் செய்
        நிலை ;' என விரும்பி நேரா
முன் நின்ற பின் வந்தோனை
        நோக்கினன் , மொழியல் உற்றான் . - 3.6.60



3032 - ''நெறிக் கொள் மாதவர்க்கு முன்னே
        நேர்ந்தனென்'நிருதர் ஆவி
பறிக்குவென் யானே 'என்ற
        பழமொழி பழுது உறாமே ,
வெறிக் கொள் பூங்குழலினாளை ,
        வீர ! நீ வேண்டினேன் யான் ;
குறிக்கொடு காத்தி ; இன்னே
        கொல்வென் இக்குழுவை '' என்னா . - 3.6.61



3033 - மரம் படர் கானம் எங்கும்
        அதர் பட வந்த சேனை
கரன் படை என்பது எண்ணிக்
        கரு நிறக் கமலக் கண்ணன் ,
சரம் படர் புட்டில் கட்டிச்
        சாபமும் தரித்தான் , தள்ளா
உரம் படர் தோளின் மீளாக்
        கவசம் இட்டு , உடைவாள் ஆர்த்தான் . - 3.6.62



3034 - 'மீளருஞ் செருவில் விண்ணும்
        மண்ணும் என்மேல் வந்தாலும் ,
நாள் உலந்து அழியுமன்றே !
        நான் உனக்கு உரைப்பது என்னே ?
ஆளியின் துப்பினாய் ! இவ்
        அமர் எனக்கு அருளிநின்று , என்
தோளினைத் தின்னுகின்ற
        சோம்பினைத் துடைத்தி 'என்றான் . - 3.6.63



3035 - என்றலும் , இளைய வீரன்
        இசைந்தனன் ; இராமன் ஏந்தும்
குன்று அன தோளின் ஆற்றல்
        உள்ளத்தின் உணரக் கொண்டான் ,
அன்றியும் , அண்ணல் ஆணை
        மறுக்கிலன் , அம் கை கூப்பி
நின்றனன் ; இருந்து கண்ணீர்
        நிலன் உறப் புலர்கின்றாள்பால் . - 3.6.64



3036 - குழை உறு மதியம் பூத்த
        கொம்பு அனாள் குழைந்து சோரத்
தழை உறு சாலை நின்றும்
        தனிச் சிலை தரித்த மேரு
மழை என முழங்குகின்ற
        வாள் எயிற்று அரக்கர் காண
முழையில் நின்று எழுந்து செல்லும்
        மடங்கலின் முனிந்து சென்றான் . - 3.6.65



3037 - சூர்ப்பணகை கரனுக்கு இராமனைக் காட்டுதல்
தோன்றிய தோன்றல் தன்னைச்
        சுட்டினள் காட்டிச் சொன்னாள் ;
வான்தொடர் மூங்கில் தந்த
        வயங்கு வெம் தீ இது என்னத்
தான் தொடர் குலத்தையெல்லாம்
        தொலைக்குமா சமைந்துநின்றாள் ,
''ஏன்று வந்து எதிர்ந்த வீரன்
        இவன் இகல் இராமன் '' என்றே . - 3.6.66



3038 - படையினரை நோக்கிக் கரன் கூறல் (3038-3039)
கண்டனன் கனகத் தேர்மேல் ,
        கதிரவன் கலங்கி நீங்க ,
விண்தனில் நின்ற வென்றிக்
        கரனெனும் விலங்கல் தோளான் ,
'மண்டு அமர் யானே செய்து , இம்
        மானிடன் வலியை நீக்கிக்
கொண்டனன் வாகை 'என்று
        படைஞரைக் குறித்துச் சொன்னான் . - 3.6.67



3039 - '''மானிடன் ; ஒருவன் ; வந்த
        வலி கெழு சேனைக்கு , அம்மா !
கான் இடம் இல்லை '' என்னும்
        கட்டுரை கலந்த காலை
யான் உடை வென்றி என்னாம் ?
        யாவரும் கண்டு நிற்றிர் ;
ஊன் உடை இவனை யானே ,
        உண்குவென் உயிரை 'என்றான் . - 3.6.68



3040 - தீயகுறிகளைக் கண்ட அகம்பன் அறிவுரை கூறுதல் (3040-3044)
அவ் உரை கேட்டு வந்தான் ,
        அகம்பன் , என்று அமைந்த கல்விச் ,
செவ்வியோன் ஒருவன் ,'ஐய !
        செப்புவென் ; செருவில் சால
வெவ்வியராதல் நன்றே !
        வீரருள் ஆண்மை வீர !
இவ்வயின் உளவாம் தீய
        நிமித்தம் 'என்று இயம்பலுற்றான் . - 3.6.69



3041 - குருதி மா மழை சொரிந்தன மேகங்கள் குமுறிப்
பருதி வானவன் ஊர் வளைப்புண்டது பாராய் !
கருது வீர ! நின் கொடி மிசைக்காக்கையின் கணங்கள்
பொருது வீழ்வன புலம்புவ நிலம்படப் புரள்வ . - 3.6.70



3042 - வாளின் வாய்களை ஈ வளைக்கின்றன ; வயவர்
தோளும் நாட்டமும் இடம் துடிக்கின்றன ; தூங்கி
மீளி மொய்ம்பு உடை இவுளி வீழ்கின்றன ; விரவி
ஞாளியோடு நின்று உளைக்கின்ற நரிக் குலம் பல , ஆல் . - 3.6.71



3043 - பிடியெலாம் மதம் பெய்திடப் பெருங்கவுள் வேழம்
ஒடியுமால் மருப்பு ; உலகமும் கம்பிக்கும் ; உயர் வான்
இடியும் வீழ்ந்திடும் ; எரிந்திடும் பெருந்திசை ; எவர்க்கும்
முடியின் மாலைகள் புலாலொடு முழுமுடை நாறும் . - 3.6.72



3044 - ''இனைய ஆகலின் , மானிடன்
        ஒருவன் என்று இவனை
நினையல் ; ஆவதொன்று அன்று அது ;
        நீதியாநின்ற
வினை எலாம் செய்தும் வெல்லலாம்
        தன்மையன் அல்லன் ;
புனையும் வாகையாய் ! பொறுத்தி
        என் உரை '' எனப் புகன்றான் . - 3.6.73



3045 - நிமித்திகன் கூறியதுகேட்ட கரன் கூறுதல்
உரைத்த வாசகம் கேட்டலும் , உலகு எலாம் உலையச்
சிரித்து ,'நன்று நம் சேவகம் , தெவ்வரைத் தேய
அரைத்த அம்மியாம் அலங்கு எழில் தோள் , அமர்வேண்டி
இரைத்து வீங்குவ , மானிடற்கு எளியவோ ? 'என்றான் . - 3.6.74



3046 - கரன் கூறியது கேட்ட படையினர் இராமனை வளைதல்
என்னும் மாத்திரத்தே'எறி பிடி 'என இடியா ,
மன்னர் மன்னவன் மதலையை வளைந்தன ; வனத்து ,
மின்னும் வால் உளை மடங்கலை முனிந்தன வேழம்
துன்னினால் எனச் சுடு சினத்து அரக்கர்தம் தொகுதி . - 3.6.75



3047 - இராமன் பொருதமையால் கரன்படை அழிதல் (3047-3066)
வளைந்தகாலையில் வளைந்தது அவ் இராமன் கை வரிவில் ;
விளைந்த போரையும் ஆவதும் விளம்புதும் ; விசையால்
புளைந்த பாய் பரி புரண்டன ; புகர்முகப் பூட்கை
உளைந்த மால் வரை உரும் இடி பட ஒடிந்தென்ன . - 3.6.76



3048 - சூலம் அற்றன ; அற்றன சுடர் மழுத் தொகை ; வாள்
மூலம் அற்றன ; அற்றன முரண் தண்டு ; பிண்டி
பாலம் அற்றன ; அற்றன பகழி , வெம் பகுவாய்
வேலும் அற்றன ; அற்றன வில்லொடு பல்லம் . - 3.6.77



3049 - தொடி துணிந்தன தோளொடு ; தோமரம் துணிந்த ;
அடி துணிந்தன கட களிறு ; அச்சொடு நெடுந் தேர் ,
கொடி துணிந்தன ; குரகதம் துணிந்தன ; குல மா
முடி துணிந்தன ; முளையொடு துணிந்தன முசலம் . - 3.6.78



3050 - கருவி மாவொடு கார் மதக் கைம்மலைக் கணத்தூடு
உருவி மாதிரத்து ஓடின சுடு சரம் ; உதிரம்
அருவி மாலையில் பிறங்கினது அவனியில் ; அரக்கர்
திரு இல் மார்பகம் திறந்தன துறந்தன சிரங்கள் . - 3.6.79



3051 - ஒன்று பத்து நூறாயிரம் கோடி என்று உணராத்
துன்று பத்திய , இராகவன் சுடுசரம் துரப்பச்
சென்று பத்திரத் தலை என மலை திரண்ட என்னக்
கொன்று பத்தியில் குவித்தன பிணப் பெருங்குன்றம் . - 3.6.80



3052 - காடு கொண்ட கார் உலவைகள் கதழ் எரி கதுவச்
சூடு கொண்டன எனத் தொடர் குருதி மீத் தோன்ற ,
ஆடுகின்றன , அறுகுறை ; அயில் அம்பு விண் மேல்
ஓடுகின்றன , உயிரையும் தொடர்வன ஒத்த . - 3.6.81



3053 - கைகள் வாளொடு களம் படக் கழுத்து அறக் கவச
மெய்கள் போழ்படத் தாள் விழ மிக நெடு நிருதர்
செய்ய மாத் தலை சிந்திடத் திசை உறச் சென்ற
தையலார் நெடு விழி எனக் கொடியன சரங்கள் . - 3.6.82



3054 - மாரி ஆக்கிய வடிக் கணை , வரை புரை நிருதர்
பேர் இயாக்கையின் பெருங்கரை வயின் தொறும் பிறங்க ,
ஏரி ஆக்கின ; ஆறுகள் இயற்றின ; நிறையச்
சோரி ஆக்கின ; போக்கின வனம் எனும் தொன்மை . - 3.6.83



3055 - அலை மிதந்தன குருதியின் பெருங்கடல் , அரக்கர்
தலை மிதந்தன ; நெடுந்தடி மிதந்தன ; தடக்கை
மலை மிதந்தன ; வாம் பரி மிதந்தன ; வயப் போர்ச்
சிலை மிதந்தன ; மிதந்தன கொடி நெடுந்தேர்கள் . - 3.6.84



3056 - ஆய காலையின் அனல் விழித்து , ஆர்த்து இகல் அரக்கர்
தீய வார் கணை முதலிய தெறு சினப் படைகள் ,
மேய மால் வரை ஒன்றினை வளைத்தன , மேகம்
தூய தாரைகள் சொரிவனவாம் எனச் சொரிந்தார் . - 3.6.85



3057 - சொரிந்த பல் படை துணி படத் துணி படச் சரத்தால்
அரிந்து , போந்தன சிந்திடத் திசைதிசை அகற்றி ,
நெரிந்து பார்மகள் நெளிவுற , வனம் முற்றும் நிறைய ,
விரிந்த செம் மயிர்க் கருந்தலை மலை என வீழ்த்தான் . - 3.6.86



3058 - கவந்த பந்தங்கள் களித்தன , குளித்த கைம் மலைகள்
சிவந்து பாய்ந்த வெம் குருதியில் ; திருகிய சினத்தால்
நிவந்த வெம் தொழில் நிருதர்தம் நெடு நிணம் தெவிட்டி ,
உவந்த , வன் கழுது ; உயிர் சுமந்து உளுக்கியது உம்பர் . - 3.6.87



3059 - மருள் தரும் களி வஞ்சனை வளை எயிற்று அரக்கர் ,
கருடன் அஞ்சுறு கண்மணி காகமும் கவர்ந்த ;
இருள் தரும் புரத்து இழுதையர் பழுது உரைக்கு எளிதோ ,
அருள் தரும் திறத்து அறன் அன்றி , வலியது உண்டாமோ ? - 3.6.88



3060 - பல்லாயிரம் இருள் கீறிய பகலோன் என ஒளிரும்
வில்லாளனை முனியா , வெயில் அயில் ஆம் என விழியாக்
கல் ஆர் மழை , கண மா முகில் கடைநாள் , விழுவன போல்
எல்லாம் ஒரு தொடையா உடன் எய்தார் ; வினை செய்தார் . - 3.6.89



3061 - எறிந்தார் என , எய்தார் என , நினைந்தார் என , எறிய
அறிந்தார் என அறியாவகை அயில் வாளியின் அறுத்தான் ;
செறிந்தாரையும் , பிறிந்தாரையும் , செறுத்தாரையும் , சினத்தால்
மறிந்தாரையும் , வலித்தாரையும் , மடித்தான் சிலை பிடித்தான் . - 3.6.90



3062 - வானத்தன , கடலின் புற வலயத்தன , மதி சூழ்
மீனத்தன , மிளிர் குண்டல மிதுனத்தன , மிடல் வெம்
கானத்தன , மலையத்தன , திசை சுற்றிய கரியின்
தானத்தன , காகுத்தன சரம் உந்திய சிரமே . - 3.6.91



3063 - மண் மேலன , மலை மேலன , மழை மேலன , மதி தோய்
விண் மேலன , நெடு வேலையின் மேல் கீழன , மிடலோர்
புண் மேலன , குருதிப் பொரு திரை யாறுகள் பொங்கத்
திண் மேருவை நகும் மார்பினை உருவித் திரி சரமே . - 3.6.92



3064 - பொலம் தாரினர் அனலின் சிகை
        பொதி கண்ணினர் எவரும் ,
வலம் தாங்கிய வடி வெம் படை
        விடுவார் , சர மழையால்
உலந்தார் ; உடல் கடலோடு உற
        உலவா உடல் உற்றார் ;
அலந்தார் நிசிசரர் ஆம் என
        இமையோரொடும் ஆர்த்தார் . - 3.6.93



3065 - ஈரல் செறி கமலத்தன , இரதத் திரள் புளினம் ,
வீரக் கரி முதலைக் குலம் மிதக்கின்றன , உதிக்கும்
பாரக் குடர் மிடை பாசடை படர்கின்றன , பல வால்
மூரித் திரை உதிரக் கடல் முழுகிக் கழுது எழுமே . - 3.6.94



3066 - அழைத்தார் சிலர் , அயர்த்தார் சிலர் ,
        அழிந்தார் சிலர் , கழிந்தார் ,
உழைத்தார் சிலர் , உயிர்த்தார் சிலர் ,
        உருண்டார் சிலர் , புரண்டார்
குழைத்து ஆழ் திரைக் குருதிக் கடல்
        குளித்தார் சிலர் , கொலைவாய்
மழைத்தாரைகள் படப் பாரிடை
        மடிந்தார் சிலர் உடைந்தார் . - 3.6.95



3067 - கரன்படைத்தலைவர் பதினால்வரும் இராமனோடு பொருதல் (3067-3079)
உடைந்தார்களை நகை செய்தனர் ,
        உருள் தேரினர் , உடன் ஆய்
அடைந்தார் , படைத் தலைவீரர்கள்
        பதினால்வரும் ; அயில் வாள்
மிடைந்து ஆர் நெடுங்கடல் தானையர் ,
        மிடல் வில்லினர் , விரி நீர்
கடைந்தார் வெரு உற மீது எழு
        கடு ஆம் எனக் கொடியார் . - 3.6.96



3068 - நாகத் தனி ஒரு வில்லியை , நளிர் முப்புரர் , முன்னாள் ,
மாகத்திடை வளைவுற்றனர் என , வள்ளலை மதியார் ,
ஆகத்து எழு கனல் கண்வழி உக , உற்று எதிர் அழன்றார் ;
மேகத்தினை நிகர் வில்லியை வளைத்தார் , செரு விளைத்தார் . - 3.6.97



3069 - எய்தார் பலர் , எறிந்தார் பலர் ,
        மழு ஓச்சினர் , எழுவால்
பொய்தார் பலர் , புடைத்தார் பலர் ,
        கிடைத்தார் பலர் , பொருப்பால்
பெய்தார் மழை , பிதிர்த்தார் எரி ,
        பிறை வாள் எயிற்று அரக்கர்
வைதார் பலர் , தெழித்தார் பலர் ,
        மலையாம் என வளைத்தார் . - 3.6.98



3070 - தேர் பூண்டன விலங்கு யாவையும் ,
        சிலை பூண்டு எழு கொலை ஆல் ,
பார் பூண்டன ; மத மா கரி
        பலி பூண்டன ; பரி மாத்
தார் பூண்டன , உடல் பூண்டில
        தலை ; வெம் கதிர் தழிவந்து
ஊர் பூண்டன பிரிந்தாலென ,
        இரிந்தார் உயிர் உலைந்தார் . - 3.6.99



3071 - மால் பொத்தின மறவோர் உடல்
        மழை பொத்தின ; வழி செம்
பால் பொத்தின நதியில் கிளர்
        படி பொத்தின ; படர் வான்
மேல் பொத்தின குழு விண்ணவர்
        விழி பொத்தினர் ; விரை வெம்
கால் பொத்தினர் நமன் தூதுவர்
        கடிது உற்று உயிர் கவர்வார் . - 3.6.100



3072 - பேய் ஏறின செரு வேட்டு எழு பித்து ஏறினர் , பில வாய்
நாய் ஏறின ; தலை மேல் நெடு நரி ஏறின ; எரி கால்
வாய் ஏறின வடி வாளியின் வான் ஏறினர் ; வந்தார்
தீ ஏறு இகல் அரியேறு என , முகிலேறு எனச் செறிந்தார் . - 3.6.101



3073 - தலை சிந்தின , விழி சிந்தின , தழல் சிந்தின , தரை மேல் ,
மலை சிந்தினபடி சிந்தின வரு சிந்துரம் ; மழை போல்
சிலை சிந்தின கணை சிந்தின ; திசை சிந்தின . திசையூடு
உலை சிந்தின பொறி சிந்தின உயிர் சிந்தின உடலம் . - 3.6.102



3074 - படைப் பெருந்தலைவரும் படைத்த தேர்களும்
உடைத் தடம் படைகளும் ஒழிய , உற்று எதிர்
விடைத்து அடர்ந்து எதிர்த்தவர் , வீரன் வாளியால்
முடைத் தடங் குருதியின் கடலின் மூழ்கினார் . - 3.6.103



3075 - கரன் படைத்தலைவர் இராமனை வளைதல்
சுற்று உற நோக்கினர் , தொடர்ந்த சேனையில்
அற்றில தலை எனும் ஆக்கை கண்டிலர் ;
தெற்றினர் எயிறுகள் , திருகினார் சினம் ,
முற்றினர் இராமனை முடுகு தேரினார் . - 3.6.104



3076 - படைத்தலைவர் தேர் பதினான்கும் அழிதல்
ஏழிரு தேரும் வந்து , இமைப்பின் முன்பு இடைச்
சூழ , வன் கணைகளால் துணிய நூறினான் ;
ஆழியும் புரவியும் ஆளும் அற்று , அவை ,
ஊழி வெம் கால் எறி ஓங்கல் ஒத்தவே . - 3.6.105



3077 - படைத்தலைவர் தரையினின்று விற்போர் புரிதல்
அழிந்தன தேர் , அவர் , அவனி கீண்டு உக
இழிந்தனர் , வரி சிலை எடுத்த கையினர் ,
ஒழிந்திலர் , சரங்களை உருமின் ஏறு எனப்
பொழிந்தனர் பொழி கனல் பொடிக்கும் கண்ணினார் . - 3.6.106



3078 - படைத்தலைவர் விற்களை இராமன் துண்டித்தல்
நூறிய சரம் எலாம் நுறுங்க வாளியால்
ஈறு செய்து , அவர் சிலை ஏழொடு ஏழையும் ,
ஆறினொடு ஆறும் ஓர் இரண்டும் அம்பினால்
கூறுசெய்து , அமர்த் தொழிற் கொதிப்பை நீக்கினான் . - 3.6.107



3079 - படைத்தலைவர் மலைகொண்டு பொருதல்
வில் இழந்து , அனைவரும் வெகுளி மீக்கொளக்
கல் உயர் நெடு வரை கடிதின் ஏந்தினார் ,
ஒல்லையின் உருத்து , உயர் விசும்பின் ஓங்கி நின்று ,
எல் உயர் பொறி உக , எறிதல் மேயினார் . - 3.6.108



3080 - படைத்தலைவர் பதினால்வரும் இறத்தல்
கலைகளின் பெருங்கடல் கடந்த கல்வியான் ,
இலை கொள் வெம் பகழி ஏழிரண்டு வாங்கினான் ,
கொலை கொள் வெம் சிலையொடு புருவம் கோட்டினான் ,
மலைகளும் தலைகளும் விழுந்த , மண்ணினே . - 3.6.109



3081 - திரிசிரன்படை இராமனோடு பொருதல் (3081-3083)
படைத் தலைத் தலைவர்கள் படலும் , பல் படை
புடைத்து , அடர்ந்து , எதிர் அழல் புரையும் கண்ணினார் ,
கிடைத்தனர் , அரக்கர்கள் , கீழும் மேலும் மொய்த்து
அடைத்தனர் திசைகளை , அமரர் அஞ்சினார் . - 3.6.110



3082 - முழங்கின பெரும் பணை , மூரி மால் கரி ;
முழங்கின வரி சிலை முடுகும் நாண் ஒலி ;
முழங்கின சங்கொடு புரவி ; மொய்த்து உற
முழங்கின அரக்கர்தம் முகிலின் ஆர்ப்பு அரோ . - 3.6.111



3083 - 'வெம் படை நிருதர் வீச ,
        விண்ணிடை மிடைந்த , வீரன்
அம்பு இடை அறுக்கச் சிந்தி
        அற்றன படும் , என்று அஞ்சி
உம்பரும் இரியல் போனார் ;
        உலகு எலாம் உலைந்து சாய்ந்த ;
கம்பம் இல் திசையில் நின்ற
        களிறும் கண் இமைத்த அன்று ஏ . - 3.6.112



3084 - திரிசிரா வருதல்
அத்தலைத் தானையின் , அளவு இல் ஆற்றலன் ,
முத்தலைக் குரிசில் , பொன் முடியன் , முக்கணான்
கைத்தலைச் சூலமே அனைய காட்சியான் ,
வைத் தலைப் பகழியால் மழைசெய் வில்லினான் . - 3.6.113



3085 - அரக்கர் படையிடை இராமன் தோற்றம்
அன்னவன் நடு உற , ஊழி ஆழி ஈது
என்ன வந்து எங்கணும் இரைத்த சேனையுள் ,
தன் நிகர் வீரனும் தமியன் வில்லினன்
துன் இருள் இடையது ஓர் விளக்கில் தோன்றினான் . - 3.6.114



3086 - இராமன் திரிசிரன் படையை எதிர்த்துநிற்றல்
ஓங்கிய வாளினன் , உருமின் ஆர்ப்பினன் ,
வீங்கிய கவசத்தன் , வெய்ய கண்ணினன் ,
ஆங்கு அவன் அணிக்கு எதிர் அணிகள் ஆக , நேர்
தாங்கினன் இராமனும் சரத்தின் தானையால் . - 3.6.115



3087 - இராமன் சரத்தால் அரக்கர்படை அழிதல் (3087-3090)
தாள் இடை அற்றன ; தலையும் அற்றன ;
தோள் இடை அற்றன ; தொடையும் அற்றன ;
வாள் இடை அற்றன ; மழுவும் அற்றன ;
கோள் இடை அற்றன ; குடையும் அற்றன . - 3.6.116



3088 - கொடியொடு கொடிஞ்சு அறப் புரவிக் கூட்டு அறப்
படியொடு படிந்தன பருதித் தேர்ப்பணை ;
நெடிய வன் கட கரி புரண்ட , நெற்றியின்
இடியொடு முறிந்து வீழ் சிகரம் என்னவே . - 3.6.117



3089 - அற்றன சிரம் என அறிதல் தேற்றலர்
கொற்ற வெம் சிலைச் சரம் கோத்து வாங்குவார்
இற்றவர் ; இறாதவர் எழுந்து விண்ணினைப்
பற்றின மழை எனப் படை வழங்குவார் . - 3.6.118



3090 - கேடகத் தடக்கைய , கிரியின் தோற்றத்த ,
ஆடகக் கவசத்த , கவந்தம் ஆடுவ ,
பாடகத்து அரம்பையர் மருளப் பல் வித
நாடகத் தொழிலினை நடிப்ப ஒத்தவே . - 3.6.119



3091 - குருதியாறு பெருகுதல்
கவரி வெண் குடை எனும் நுரைய , கைம்மலைச்
சுவரின , கவந்தம் ஆழ் சுழிய , தண் துறைப்
பவர் இனப் படு மணி குவிக்கும் பண்ணைய ,
உவரியைப் புதுக்கின உதிர ஆறு அரோ . - 3.6.120



3092 - போர்க்களக் காட்சி (3092-3097)
சண்ட வெம் கடுங்கணை தடியத் தாம் சில
திண் திறல் வளை எயிற்று அரக்கர் , தேவர் ஆய் ,
வண்டு உழல் புரிகுழல் மடந்தைமாரொடும்
கண்டனர் தம் உடற் கவந்த நாடகம் . - 3.6.121



3093 - ஆய் வளை மகளிரொடு அமரர் ஈட்டத்தர் ,
தூய வெம் கடுங்கணை துணித்த தங்கள் தோள் ,
பேய் ஒருதலை கொளப் பிணங்கி வாய் விடா
நாய் ஒரு தலைகொள நகை உற்றார் சிலர் . - 3.6.122



3094 - தெரி கணை மூழ்கலின் திறந்த மார்பினர்
இருவினை கடந்துபோய் உம்பர் எய்தினார் ,
'நிருதர்தம் பெரும் படை நெடிது நின்றவன்
ஒருவன் 'என்று உள்ளத்தின் உலைவுற்றார் சிலர் . - 3.6.123



3095 - கைக் கரி அன்னவன் பகழி , கண்டகர்
மெய்க் குலம் வேரொடுந் துணித்து வீழ்த்தின ;
மைக் கரு மனத்து ஒரு வஞ்சன் மாண்பு இலன்
பொய்க் கரி கூறிய கொடுஞ்சொற் போலவே . - 3.6.124



3096 - அம் சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன்மயம் ஆக்கும் தன்மைபோல் ,
வஞ்சகத்து அரக்கரை வளைத்து , வள்ளல்தான் ,
செஞ்சரத் தூய்மையால் தேவராக்கினான் . - 3.6.125



3097 - வலம் கொள் போர் மானிடன் , வலிந்து கொன்றமை ,
அலங்கல் வேல் இராவணற்கு அறிவிப்பாம் எனச்
சலம் கொள் போர் அரக்கர்தம் உருக்கள் தாங்கின
இலங்கையின் உற்ற அக் குருதியாறு அரோ . - 3.6.126



3098 - திரிசிரா இராமனொடு பொருதல் (3098-3099)
சூழ்ந்த தார் நெடும் படை பகழி சுற்றுறப்
போழ்ந்து உயிர் குடித்தலின் , புரளப் பொங்கினான் ,
தாழ்ந்திலன் , முத்தலைத் தலைவன் , சோரியின்
ஆழ்ந்த தேர் அம்பரத்து ஓட்டி ஆர்க்கின்றான் . - 3.6.127



3099 - ஊன்றிய தேரினன் , உருமின் வெம் கணை ,
வான் தொடர் மழை என , வாய்மை யாவர்க்கும்
சான்று என நின்ற அத் தருமம் அன்னவன்
தோன்றல்தன் திரு உரு மறையத் தூவினான் . - 3.6.128



3100 - திரிசரன் தேரும் பாகனும் அழிதல்
தூவிய சரம் எலாம் துணிய , வெம் கணை
ஏவினன் இராமனும் , ஏவி , ஏழிரு
பூ இயல் வாளியால் பொலம் கொள் தேர் அழித்து ,
ஆவி வெம் பாகனை அழித்து மாற்றினான் . - 3.6.129



3101 - திரிசிரன் தலைகளுள் இரண்டு அறுபடல்
அன்றியும் , அக்கணத்து அமரர் ஆர்த்து எழப்
பொன் தெரி வடிம்பு உடைப் பொரு இல் வாளியால் ,
வன் தொழில் தீயவன் மகுட மாத் தலை
ஒன்று ஒழித்து , இரண்டையும் உருட்டினான் அரோ . - 3.6.130



3102 - திரிசிரன் ஒருதலையொடு பொருதல்
தேர் அழிந்து , அவ் வழித் திரிசிரா எனும்
பேர் அழிந்ததனினும் மறம் பிழைத்திலன் ,
வார் அழிந்து இமிழ் சிலை வளைய நாட்டுழிக்
கார் அழிந்தால் எனக் கணை வழங்கினான் . - 3.6.131



3103 - திரிசிரன்வில் துண்டமாதல்
ஏற்றிய நுதலினன் , இருண்ட கார் மழை
தோற்றிய வில்லொடும் தொடர , மீமிசைக்
காற்று இடை அழித்தெனக் கார்முகத்தையும்
மாற்றரும் பகழியால் அறுத்து மாற்றினான் . - 3.6.132



3104 - வில்லிழந்த நிலையினும் திரிசரன் போர்புரிதல்
வில் இழந்தனன் என்னினும் , விழித்த வாள் முகத்தின்
எல் இழந்திலன் ; இழந்திலன் வெம் கதம் ; இடிக்கும்
சொல் இழந்திலன் ; தோள் வலி இழந்திலன் ; சொரியும்
கல் இழந்திலன் ; இழந்திலன் கறங்கு எனத் திரிதல் . - 3.6.133



3105 - திரிசிரன் தாளும் தோளும் அறுதல்
ஆள் இரண்டு நூறு உள என , அந்தரத்து ஒருவன்
மூள் இரும் பெரு மாய வெம் செரு முயல்வானைத்
தாள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் தடிந்து ,
தோள் இரண்டையும் இரண்டு வெம் கணைகளால் துணித்தான் . - 3.6.134



3106 - திரிசிரன் ஒருதலையுமிழந்து இறந்துபடல்
அற்ற தாளொடு தோளினன் , அயில் எயிறு இலங்கப்
பொற்றை மா முழைப் புலால் உடை வாயினின் புகுந்து ,
பற்ற ஆதரிப்பான்தனை நோக்கினன் , பரியான் ,
கொற்ற வார் சரத்து ஒழிந்தது ஓர் தலையையும் குறைத்தான் - 3.6.135



3107 - திரிசிரன்படை சிதறியோடுதல் (3107-3111)
திரிசிரா எனும் சிகரம் மண் சேர்தலும் , சிந்தி ,
நிருதர் ஓடினர் , தூடணன் விலக்கவும் நில்லார் ,
பரிதி வாளினர் , கேடகத் தடக்கையர் , பரந்த
குருதி நீரிடை , வார்கழல் கொழுங்குடர் தொடக்க . - 3.6.136



3108 - கணத்தின் மேல் நின்ற வானவர் கை புடைத் தார்ப்பப்
பணத்தின் மேல் நிலம் குழி உறக் கால்கொடு பதைப்பார் ,
நிணத்தின் மேல் விழுந்து அழுந்தினர் சிலர் ; சிலர் , நிவந்த
பிணத்தின்மேல் விழுந்து உருண்டனர் உயிர்கொடு பிழைப்பார் . - 3.6.137



3109 - வேய்ந்த வாளொடு வேல் இடை மிடைதலின் ஓட்டம்
ஓய்ந்துளார் சிலர் ; உலந்தனர் உதிரநீர் ஆற்றில்
பாய்ந்து , கால் பறிந்து ஒழுகினர் சிலர் ; சிலர் பயத்தால்
நீந்தினார் , நெடுங் குருதியங் கடல் புக்கு நிலையார் . - 3.6.138



3110 - கச்சும் வாளும் தம் கால் தொடர்ந்து ஈர்வன காணார் ,
அச்சம் என்பது ஒன்று உருவுகொண்டால் என , அழிவார் ;
உச்ச வீரன் கைச் சுடுசரம் நிருதர் நெஞ்சு உருவத்
தச்சு நின்றன கண்டனர் , அவ் வழித் தவிர்ந்தார் . - 3.6.139



3111 - மண்டி ஓடினர் சிலர் , நெடுங் கட கரி வயிற்றுப்
புண் திறந்த மா முழையிடை வாளொடும் புகுவார் ,
தொண்டை நீங்கிய கவந்தத்தைத்''துணைவ ! நீ எம்மைக்
'கண்டிலேன் 'எனப் புகல் '' எனக் கை தலைக் கொள்வார் . - 3.6.140



3112 - அஞ்சி ஓடிய படையினரை நோக்கித் தூடணன் கூறுதல் (3112-3118)
அனையர் ஆகிய அரக்கரை ஆண் தொழிற்கு அமைந்த
வினையம் நீங்கிய மனத்தரை'வெருவன்மின் 'என்னா ,
நினையும்'யான் உமக்கு உரைப்பதும் உண்டு 'என்று நின்றன் ,
துனையும் வாம் பரித் தேரினன் தூடணன் சொன்னான் . - 3.6.141



3113 - பச்சை ஆம் எனப் பயம் மனத்து உண்டு என வாழும்
கொச்சை மாந்தரைக் கோல் வளை மகளிரும் கூடார் ;
நிச்சயம் எனும் கவசம் தான் நிலைநிற்பதன்றி ,
அச்சம் என்னும் ஈது ஆர் உயிர்க்கு அரும் துணை ஆமோ ? - 3.6.142



3114 - பூ அராவு வேல் புரந்தரனோடுதான் , பொன்றா
மூவரோடுதான் , முன்னின்று முட்டிய முனையில்
ஏவர் ஓடினார் இராக்கதர் ? நுமக்கு இடைந்து ஓடும்
தேவரோடு கற்று அறிந்துளிரோ ? மனம் திகைத்தீர் . - 3.6.143



3115 - இங்கு ஒர் மானிடற்கு இத்தனை வீரர்கள் இடைந்தீர் ,
உம் கை வாளொடு புகழ் இழந்து ஊர் புகல் உற்றீர் ,
கொங்கை மார்பிடைக் குளிப்புறக் களிப்பு உறு கொழுங்கண்
நங்கைமார்களைப் புல்லுதிரோ ? நலம் நுகர்வீர் . - 3.6.144



3116 - செம்பு காட்டிய கண் இணை பால் எனத் தெளிந்தீர் !
வெம்பு காட்டிடை நுழைதொறும் , வெரிந் உறப் பாய்ந்த
கொம்பு காட்டுதிரோ ? தட மார்பிடைக் குளித்த
அம்பு காட்டுதிரோ ? குல மங்கையர்க்கு அம்மா ! - 3.6.145



3117 - ஏக்கம் இங்கு இதன் மேலும் உண்டே ? இகல் மனிதன்
ஆக்கும் வெம் சமத்து , ஆண்மை அவ் அமரர்க்கும் அரிதாத்
தாக்கரும் புயத்து உம் குலத் தலைமகன் தங்கை
மூக்கொடு அன்றி , உம் முதுகொடும் போம் பழி முயன்றீர் . - 3.6.146



3118 - ஆர் அ வாழ்க்கையில் வணிகராய் அமைதிரோ ? அயில் வேல்
வீர வாள் கொழு என மடுத்து உழுதிரோ ? வெறிப் போர்த்
தீர வாழ்க்கையின் தெவ்வரைச் செருவிடைப் பறித்த
வீர வாள் கையீர் ! எங்ஙனம் வாழ்திரோ ? விளம்பீர் . - 3.6.147



3119 - தூடணனும் இராமனும் போர்புரிதல் (3119-3131)
என்று , தானும் , தன் எறி கடற் சேனையும் ,'இறை , நீர்
நின்று காண்டிர் என் நெடுஞ்சிலை வலி 'என நேராச்
சென்று தாக்கினன் ; தேவரும் மருள்கொண்டு திகைத்தார் ;
'நன்று காத்தி 'என்று , இராமனும் எதிர்செல நடந்தான் . - 3.6.148



3120 - தூடணன் படை அழிதல் (3120-3125)
ஊடு அறுப்புண்ட மொய்படை ; கையொடும் உயர்ந்த
கோடு அறுப்புண்ட குஞ்சரம் ; கொடிஞ்சொடு கொடியின்
காடு அறுப்புண்ட கால் இயல் தேர் ; கதிர்ச் சாலி
சூடு அறுப்புண்ட எனக் கழுத்து அறுப்புண்ட துரகம் . - 3.6.149



3121 - துருவி ஓடின உயிர்நிலை சுடுசரம் ; துரந்த
கருவி ஓடின கச்சையும் கவசமும் கழல
அருவி ஓடின என அழி குருதியாறு ஒழுக
உருவி ஓடின கேடகத் தட்டொடும் உடலம் . - 3.6.150



3122 - ஆய்ந்த கங்கபத்திரங்கள் புக்கு , அரக்கரது ஆவி
தோய்ந்த ; தோய்வு இலாப் பிறைமுகச் சரம் சிரம் துமித்த ;
காய்ந்த வெம் சரம் நிருதர்தம் கவச மார்பு உருவப்
பாய்ந்த ; வஞ்சகர் இதயமும் பிளந்தன , பல்லம் . - 3.6.151



3123 - தூடணன் விடு சுடுசரம் யாவையும் துணியா ,
மாடு நின்றவர் வழங்கிய படைகளும் மாற்றா ,
ஆடல் கொண்டனன் , அளப்பரும் பெருவலி அரக்கர்
கூடிநின்ற அக் குரை கடல் வறள்படக் குறைத்தான் . - 3.6.152



3124 - ஆர்த்து எழுந்தனர் வானவர் ; அருவரை மரத்தோடு
ஈர்த்து எழுந்தன குருதியின் பெரு நதி ; இராமன்
தூர்த்த செஞ்சரம் திசைதொறும் திசைதொறும் தொடர்ந்து ,
போர்த்த வெஞ்சினத் தரக்கரைப் புரட்டின , புவியில் . - 3.6.153



3125 - தோன்றும் மால்வரைத் தொகை எனத்
        துவன்றிய நிணச்சேறு
ஆன்ற பாழ் வயிற்று அலகையைப்
        புகல்வது என் ? அமர்வேட்டு
ஊன்றினார் எலாம் உலைந்தனர் ,
        ஒல்லையில் ஒழிந்தார் ;
கான்ற இன்னுயிர் காலனும்
        கவர்ந்து , மெய் மறந்தான் . - 3.6.154



3126 - தூடணன் கொதித்தெழுதல்
களிறு , தேர் , பரி , கடுத்தவர் முடித்தலை , கவந்தம் ,
ஒளிறு பல் படை , தம் குலத்து அரக்கர்தம் உடலம் ,
வெளிறு சேர் நிணம் , பிறங்கிய அடுக்கலின் மீதாக்
குளிறு தேர் கடிது ஓட்டினன் , தூடணன் , கொதித்தான் . - 3.6.155



3127 - தூடணன் தேரின் செலவு
அறம் கொளாதவர் ஆக்கைகள் அடுக்கிய அடுக்கல்
பிறங்கி நீண்டன , கணிப்பில ; பெருங்கடு விசையால்
கறங்கு போன்று உளது ஆயினும் , பிணப் பெருங்காட்டில்
இறங்கும் , ஏறும் ; அத்தேர் பட்டது யாது என இசைப்பாம் . - 3.6.156



3128 - தூடணன் இராமனை எதிர்தல்
அரிதின் எய்தினன் ஐயைந்து கொய் உளைப் பரியால்
உருளும் ஆழியது ஒரு தனித் தேரினன் , மேகத்து
இருளின் நீங்கிய இந்துவின் பொலிகின்ற இராமன்
தெருளும் வார் கணைக் கூற்று எதிர் , ஆவி சென்றென்ன . - 3.6.157



3129 - தூடணன் அம்பு இராமன் வீரபட்டத்தில் தாக்குதல் (3129-3130)
சென்ற தேரையும் , சிலை உடை மலை எனத் தேர்மேல்
நின்ற தூடணன் தன்னையும் நேருற நோக்கி
'நன்று நன்று நின் நிலை 'என அருள் இறை நயந்தான் ;
என்ற காலத்து , அவ் வெய்யவன் பகழி மூன்று எய்தான் . - 3.6.158



3130 - தூர வட்ட எண் திசைகளைத் தனித்தனி சுமக்கும்
பார எட்டினோடு இரண்டினில் ஒன்று , பார் புரக்கப்
பேர விட்டவன் நுதல் அணி ஓடையில் பிறங்கும்
வீர பட்டத்தில் பட்டன , விண்ணவர் வெருவ . - 3.6.159



3131 - தூடணன் தேரும் வில்லும் கவசமும் அழிதல்
'எய்த காலமும் வலியும் நன்று 'என நினைந்து , இராமன் ,
செய்த சேயொளி முறுவலன் , கடுங்கணை தெரிந்தான் ;
நொய்தில் அங்கு அவன் நொறில் பரித் தேர் பட நூறிக்
கையில் வெம் சிலை அறுத்து , ஒளிர் கவசமும் கடிந்தான் . - 3.6.160



3132 - தூடணன் தலையறுபட்டு மாய்தல்
தேவர் ஆர்த்து எழ , முனிவர்கள் திசைதொறும் சிலம்பும்
ஓவு இல் வாழ்த்தொலி கார்க்கடல் முழக்கு என ஓங்கக்
'கா அடா ! இது , வல்லையேல் நீ 'எனக் கணை ஒன்று
ஏவினான் ; அவன் , எயிறு உடை நெடுந்தலை இழந்தான் . - 3.6.161



3133 - கரன் இராமனொடு பொருதல் (3133-3155)
தம்பி தலையற்றபடியும் , தயரதன் சேய்
அம்பு படையைத் துணிபடுத்ததும் , அறிந்தான் ;
வெம்பு படை விற்கை விசயக் கரன் வெகுண்டான் ;
கொம்புதலை கட்டிய கொலைக்கரி கடுப்பான் . - 3.6.162



3134 - அந்தகனும் உட்கிட , அரக்கர் கடலோடும்
சிந்துரம் வயப் புரவி தேர்திசை பரப்பி ,
இந்துவை வளைக்கும் எழிலிக்குலம் எனத் தான்
வந்து வரி வில் கை மதயானையை வளைத்தான் . - 3.6.163



3135 - அடங்கல் இல் கொடுந்தொழில் அரக்கர் , அவ் அனந்தன்
படம் கிழிதரப் படிதனில் பலவிதப் போர் ,
கடம் கலுழ் தடங்களிறு தேர் பரி கடாவித்
தொடங்கினர் , நெடுந்தகையும் வெம் கணை துரந்தான் . - 3.6.164



3136 - இராமன் கரன்படையைக் கொன்றொழித்தல் (3136-3139)
துடித்தன கடக் கரி , துடித்தன பரித் தேர் ,
துடித்தன முடித் தலை , துடித்தன தொடித் தோள் ,
துடித்தன மணிக் குடர் , துடித்தன தசைத் தோல்
துடித்தன கழல் துணை , துடித்தன இடத்தோள் . - 3.6.165



3137 - வாளின் வனம் , வேலின் வனம் , வார் சிலை வனம் , திண்
தோளின் வனம் என்று இவை துவன்றி , நிருதப் பேர்
ஆளின் வனம் நின்றதனை , அம்பின் வனம் என்னும்
கோளின் வன வன் குழுவினில் குறை படுத்தான் . - 3.6.166



3138 - தான் உருவு கொண்ட தருமம் தெரி சரம் தான் ,
மீன் உருவும் , மேருவை விலங்கு உருவும் , மேலாம்
வான் உருவும் , மண் உருவும் , வாள் உருவி வந்தார்
ஊன் உருவும் என்னும் இது உணர்த்தவும் உரித்தோ . - 3.6.167



3139 - அன்று இடை வளைந்தவர் குலங்களொடு அடங்கச்
சென்று உலைவுறும்படி தெரிந்து கணை சிந்தா ,
மன்றிடை நலிந்து வலியோர்கள் எளியோரைக்
கொன்றனர் நுகர்ந்த பொருளில் கடிது கொன்றான் . - 3.6.168



3140 - கரன் தமியனாய்ச் சினந்து நிற்றல்
கடுங் கரன் எனப் பெயர் படைத்த கழல் வீரன் ,
அடங்கலும் அரக்கர் அழிவுற்றிட அழன்றான் ,
ஒடுங்கல் இல் நிணக் குருதி ஓதம் அதின் உள்ளான் ,
நெடுங் கடலின் மந்தரம் எனத் தமியன் நின்றான் . - 3.6.169



3141 - கரன் தேரூர்ந்து போர்க்கு வருதல்
செம் கண் எரி சிந்த , வரி வில் பகழி சிந்தப்
பொங்கு குருதிப் புணரியுள் புகையும் நெஞ்சன் ,
கங்கமொடு காகம் மிடையக் கடலின் ஓடும்
வங்கம் எனல் ஆய் அது ஒரு தேரின்மிசை வந்தான் . - 3.6.170



3142 - இராமன் கரனை எதிர்தல்
செறுத்து இறுதியில் புவனி தீய எழு தீயின்
மறத்தின் வயிரத்து ஒருவன் வந்து அணுகும் முந்தைக்
கறுத்த மணிகண்டர் கடவுட் சிலை கரத்தால்
இறுத்தவனும் , வெம் கணை தெரிந்தனன் எதிர்ந்தான் . - 3.6.171



3143 - கரனும் இராமனும் பொருதல் (3143-3144)
தீ உருவ , கால் விசைய , செவ்வியன , வெவ்வாய்
ஆயிரம் வடிக்கணை அரக்கர் பதி எய்தான் ;
தீ உருவ , கால் விசைய , செவ்வியன , வெவ் வாய்
ஆயிரம் வடிக் கணை இராமனும் அறுத்தான் . - 3.6.172



3144 - ஊழி எரியில் கொடிய பாய் பகழி ஒன்பான்
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் எய்தான் ;
சூழ் சுடர் வடிக்கணை அவற்று எதிர் தொடுத்தே
ஆழி வரி வில் கரனும் அன்னவை அறுத்தான் . - 3.6.173



3145 - கரன் கணைமாரியால் இராமனை மறைக்க , இராமன் வெகுளுதல்
கள்ள வினை மாய அமர் கல்வியின் விளைத்தான் ,
வள்ளல் உருவைப் பகழி மாரியின் மறைத்தான் ;
உள்ளம் உலைவு உற்று அமரர் ஓடினர் , ஒளித்தார் ;
வெள் எயிறு இதழ்ப் பிறழ வீரனும் வெகுண்டான் . - 3.6.174



3146 - இராமன் வில் ஒடிதல்
முடிப்பென் இன்று ஒரு மொய் கணையால் எனத்
தொடுத்து நின்று , உயர் தோள் உற வாங்கினான் ;
பிடித்த திண் சிலை , பேர் அகல் வானிடை
இடிப்பின் ஓசை படக் கடிது இற்றதே . - 3.6.175



3147 - இராமனிலைகண்ட தேவர் துயருறல்
வெற்றி கூறிய வானவர் , வீரன் வில்
இற்ற போது , துணுக்கம் உற்று ஏங்கினார் ,
மற்று ஒர் வெம் சிலை இன்மை மனக்கொளா ,
'அற்றதால் எம் வலி 'என அஞ்சினார் . - 3.6.176



3148 - வருணன் கொடுத்த வில்லை இராமன் பெறுதல் (3148-3150)
என்னும் மாத்திரத்து , ஏந்திய கார்முகம்
சின்னம் என்றும் , தனி என்றும் , சிந்தியான் ,
மன்னர் மன்னவன் செம்மல் , மரபினால்
பின் உறத் தன் பெரும் கரம் நீட்டினான் . - 3.6.177



3149 - கண்டு நின்று , கருத்து உணர்ந்தான் என ,
அண்டர் நாதன் தடக் கையின் , அத்துணை ,
பண்டு போர் மழு வாளியைப் பண்பினால்
கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன் . - 3.6.178



3150 - கொடுத்த வில்லை , அக் கொண்டல் நிறத்தினான் ,
எடுத்து வாங்கி , வலம் கொண்டு , இடம் கையில்
பிடித்த போது , நெறி பிழைத்தோர்க்கு எலாம்
துடித்தவால் , இடக் கண்ணொடு தோளுமே . - 3.6.179



3151 - இராமன் கணைகளால் கரன்தேர் அழிதல்
ஏற்றினான் இமையாமுன் எடுத்தது ,
கூற்றினாரும் குனிக்கக் குனித்து , எதிர்
ஆற்றினான் , அடல் ஆழி அம் தேர் சரம்
நூற்றினால் நுண் பொடி பட நூறினான் . - 3.6.180



3152 - கரன் வானிடை நின்று பொருதல்
எந்திரத் தடம் தேர் இழந்தான் , இழிந்து ,
அந்தரம் அத்து இடை ஆர்த்து எழுந்து , அம்பு எலாம்
சுந்தரத் தனி வில்லிதன் தோள் எனும்
மந்தரம் அத்து இல் மழையின் வழங்கினான் . - 3.6.181



3153 - இராமன் வாளியால் கரன் வலக்கை அறுபடுதல்
தாங்கி நின்ற தயரத ராமனும் ,
தூங்கு தூணி இடை சுடு செம் சரம்
வாங்குகின்ற வலம் கை ஒர் வாளியால்
வீங்கு தோளொடு பாரிடை வீழ்த்தினான் . - 3.6.182



3154 - கரன் இடக்கையால் போர் செய்தல் (3154-3155)
வலக்கை வீழ்தலும் , மற்றைக் கையால் , வெற்றி
உலக்கை , வானத்து உரும் என ஓச்சினான் ;
இலக்குவற்கு முன் வந்த இராமனும் ,
விலக்கினான் ஒரு வெம் கதிர் வாளியால் . - 3.6.183



3155 - விராவு அரும் கடு வெள் எயிறு இற்ற பின்
அரா அழன்றது அனையவன் , ஆற்றலால்
மராமரம் கையில் வாங்கி வந்து எய்தினான் ,
இராமன் அங்கு ஒர் தனிக் கணை ஏவினான் . - 3.6.184



3156 - கரன் இறந்துபடுதல்
வரம் அரக்கன் படைத்தலின் , மாயையின்
உரம் உடைத் தன்மையால் , உலகு ஏழையும்
பரம் முருக்கிய பாவத்தினால் , வலக்
கரம் எனக் கரன் கண்டம் உற்றான் அரோ . - 3.6.185



3157 - வானவர் மலர்மழை பொழிய இராமன் விளங்குதல்
ஆர்த்து எழுந்தனர் , ஆடினர் , பாடினர் ,
தூர்த்து அமைந்தனர் வானவர் தூமலர் ;
த்தனும் பொலிந்தான் , கதிரோன் திசை
போர்த்த மென் பனி போக்கியது என்னவே . - 3.6.186



3158 - இராமன் சீதையை அணுகுதல்
முனிவர் வந்து முறை முறை மொய்ப்பு உற ,
இனிய சிந்தை இராமனும் , ஏகினான் ;
அனிக வெம் சமம் அத்து ஆர் உயிர் போகத் தான்
தனி இருந்த உடல் அன்ன தையல் பால் . - 3.6.187



3159 - இளவலும் சீதையும் இராமனைப் போற்றல்
விண்ணில் நீங்கிய வெய்யவர் மேனியில்
புண்ணின் நீரும் பொடிகளும் போய் உக ,
அண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்
கண்ணின் நீரினில் பாதம் கழுவினார் . - 3.6.188



3160 - விண்ணவர்போற்ற வீரன் இருந்தமை
மூத்தம் ஒன்றில் முடிந்தவர் மொய் புண் நீர்
நீத்தம் , ஓடி நெடும் திரை நேர் உறக்
கோத்த வேலைக் குரல் என வானவர்
ஏத்த , வீரன் இனிது இருந்தான் அரோ . - 3.6.189



3161 - சூர்ப்பணகை கரனுடலைத்தழுவி அழுதல்
இங்கு நின்றது உரைத்தும் ; இராவணன்
தங்கை , தன்கை வயிறு தகர்த்தனள் ,
கங்குல் அன்ன கரனைத் தழீஇ , நெடும்
பொங்கு வெம் குருதிப் புரண்டாள் அரோ . - 3.6.190



3162 - சூர்ப்பணகை போதல்
'ஆக்கினேன் மனத்து ஆசை ; அவ் ஆசை , என்
மூக்கினோடு முடிய , முடிந்திலேன் ;
வாக்கினால் உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன் கொடியேன் 'என்று போயினாள் . - 3.6.191



3163 - சூர்ப்பணகை இலங்கையை அடைதல்
அலங்கல் வேல் கை அரக்கரை ஆசு அறக்
குலங்கள் வேர் அறுப்பான் குறித்தாள் , உயிர்
கலங்கு சூறை வன் போர் நெடுங் கால் என
இலங்கை மா நகர் நொய்தின் சென்று எய்தினாள் . - 3.6.192

------------------------

This file was last updated on 1 November 2012.
Feel free to send the corrections to the Webmaster.